Friday, December 18, 2009

காந்தி

அச்சம்தவிர் துச்சம்உயிர் எச்சம்உடல் எனவே
அச்சங்கிலி வெட்டித்துயர் விட்டுப்படச் செய்தே
மெச்சும்படி உச்சந்தலை தோளில்உயர் நிறுத்தி
இச்சந்ததி வாழும்படி வைத்தார்அவர் காந்தி

----------------------------------------------------------------------
அச்சங்கிலி : அச்சம் + கிலி, அடிமைச் சங்கிலி 

Friday, December 11, 2009

பாரதி துதி

அன்னை உண்டெனில் பாரதி! இக்கவிதைக்குத்
தந்தை உண்டெனில் - பாரதி!
உன்னைப் புகழ்ந்திட பாரதி! ஓராயிரம்
ஏட்டிலும் இயலுமோ பாரதி?
விண்ணின் மதிதனைப் பாடிடப் புலவர்
கோடிபல கோடியாய்க் கூடிடத்
தண்மதி அழகினிற் குன்றிற்றோ? தேயாமதி
நின்போல் புகழ் கூடிற்றோ?

எல்லோரும் ஒன்றென்று உரைத்திட்டாய் அதைச்
சொல்லி எல்லோரினும்நீ உயர்ந்திட்டாய்!
மெல்லத் தமிழினிச் சாகுமென்றாய் , தமிழ்
கொல்லும் எமனைநீ ஏகுமென்றாய்!
வல்லஉன் விழியால் பார்த்திட்டாய் கதிர்
பல்யுகம் வாழஒளி சேர்த்திட்டாய்!
மெல்ல உன்மீசை முறுக்கிட்டாய் கோடி
பல்லாயிர வர்க்காண்மை பெருக்கிட்டாய்

நற்றமிழாலே உந்தன் பாடலாயிற்று இன்று
நற்றமிழே உன்னைப் பாடலாயிற்று
கற்றபாட்டில் உணர்வு ஊற்றாயிற்று தமிழர்
உயிரிலே உறுதியாயது ஊரலாயிற்று
பெற்றதகுதி மிகுதியேது? நான்பாரதி பற்றே
அதிமிகுந்து மிகுத்துஓதி பாரதிமேதை
போற்றித் துதித்துச் சிந்தித்துப் புத்தியிற்
தித்தித்து உதித்ததே யிந்தத்துதி!

Saturday, November 21, 2009

மாடு

குப்பன் வீட்டில் ஒரு மாடு இருக்கிறது
அப்பன் வீட்டில் கன்றாயிருந்தபோது
துள்ளி விளையாடியது.


பெரியதானதும் மூக்கணாங்கயிறு போட்டு
வண்டியில் பூட்டிவிட்டனர்.
புல்லோ, பழையதோ, புண்ணாக்கோ
எதைப் போட்டாலும் தின்னும்


மாட்டுப் பொங்கலுக்கு மட்டும்
நல்ல உபசரிப்பு.


கொம்புகளுக்குக் கூட வண்ணமடிப்பார்கள்
அதுவும் குப்பனுக்குப் பிடித்த கட்சியின் வண்ணம்.
 கொட்டிலில் கட்டும் போதும்
கால்வாயில் குளிப்பாட்டும் போதும்
குப்பன் அதைக் கொஞ்சுவான்


மற்ற நேரங்களில் சாட்டையடிதான்
மாட்டுக்கு இரண்டுமே பழகிப் போயிற்று

பசித்த பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு தூங்கவைத்து
முடித்த கூந்தலை அவிழ்த்துப் பின்னி, அவிழ்த்துப் பின்னி
'குடித்தனம்' நடத்தும் குப்பன் வருகைக்காகக்
காத்திருப்பாள் அவன் மனைவி

அந்த வீட்டின் மாட்டுப்பெண்.





Friday, November 20, 2009

சாமி எறும்பு

அய்யப்ப சாமிக்கு ஆசாரமாய்ப் படைத்து
அம்மா சாமி தந்த
ஆவின் பாலில்
மிதந்தது -
"சர்க்கரை நோயால்" செத்த எறும்பு.
எதுத்துப் போட்டுவிட்டுக் குடித்து விட்டேன்.
சைவமா? அசைவமா?
சாமியே சரணம் ஐயப்பா.

Friday, November 13, 2009

பாலம்

நதியின் கரையில்
நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்
குறுக்குப் பாலம் தூரத்தில் தெரிந்தது - சிறியதாய்
    
எங்கேயோ வேகவேகமாய்ச் செல்வதாய்ப் 
பாசாங்கு   செய்த நதி
நாமிருவர் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டே வந்தது


நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும் -
குளிர்க்காற்றை நம் சுவாசங்களால் சூடாக்கி.
 நடந்து கொண்டிருந்தோம் நீயும் நானும்.

எடைகளுடன் நம் எண்ணங்களையும் சுமக்கவோ என்னவோ 
குறுக்குப் பாலம் பெரிதாகிக் கொண்டே வந்தது

நதியில்  ரகசியங்கள் தொலைத்து
கரையில் சிரிப்பொலிகள் தொலைத்து  
நிலவில் பகல் தொலைத்து - நாம் விடைபெறும் நேரம் 
பற்றிய உன்கரம் காற்றில் தொலைத்து -
     
கடந்து போனது ஞாபகமிருக்கிறது 
-பாலம்-
உடைந்துமா போனது நாம் கடந்ததும் ?

Thursday, November 12, 2009

ஹைக்கூ: புறமுதுகு

 நான் புறமுதுகு காட்டினேன்
என்றான் என்னை

முதுகில் குத்தியவன்  

Wednesday, November 11, 2009

காலை

எம்மைப் பாடுகபாடுக எனச்சோலை எல்லாம்
      புதுப்பூக்கள் சூட்டித்தம்மை அலங் கரிக்கும்
 பொருள் தேடுகதேடுக எனப்புள் ளினமும்            
      பொதுக்கூட்டம் கூட்டியங்கு தமர்க்கு உரைக்கும்
எம்மை விடுகவிடுக எனச்சேலை போர்த்தி
       தம்மைவாட்டும் துணைவனைத் தள்ளி வைக்கும்  
இருள் ஓடுகஓடுக எனஒளி எடுத்து
       திசைஎட்டும் கதிர் வழங்கும் காலையாகும்

Saturday, November 7, 2009

THANGLISH பாடல்: ஜிஞ்சர் கார்லிக்

( சமையல் தெரியாத கணவனுக்கு  / மனைவி  அல்லது மனைவிக்கு  / கணவன் பாடும் பாடல்  
" தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ" 
-- என்ற பாடலின் ராகத்தில் அமைந்தது   ... )

ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்-ஐப் போட்டு
வதக்க வேணும்மா காய்கறி 
பெப்பருடன் சால்ட்டும் சேர்த்துக் 
கொதிக்க  வேணும்மா கோழிக்கறி  

டேஸ்ட்டு ஏதும் இல்லையின்னா 
நீயும் கொஞ்சம் சால்டைப் போடு 
சால்ட்டு ரொம்ப ஜாஸ்தியானா
மேலும் கொஞ்சம் வாட்டர் போடு   

உண்மை அம்மா குக்கிங் ரொம்ப ஈசி அம்மா 
சமைப்பது சுலபமம்மா !!   ( ஜிஞ்சர் கார்லிக் ... )     

சுகரும் இல்லையின்னா டீ-யிலே   கருப்பட்டி போடலாம்
பாலும் இல்லாமலே வெந்நீரில் கருப்பு டீ போடலாம்

சாதம் இல்லையின்னா நூல் போன்ற நூடுல்சும் செய்யலாம்
பச்சைக்  காய்களையே கட் பண்ணி ரொட்டியில் வைக்கலாம்
இப்படி விதமா விதம் விதமா சமைத்திடலாம் என் கண்ணம்மா !!  ( ஜிஞ்சர் கார்லிக் ... )

ஆற்றில் நிற்கும் கொக்கே

ஆற்றில் நிற்கும் கொக்கே
சேற்றில் நிற்கும் கொக்கே
குளத்தில் நிற்கும் கொக்கே ... கொக்கே

ஏ .. கொக்கே ஏ .. கொக்கே
மீன் மக்கே.... உன் luck-ஏ
 

பறந்து திரியும் கிளியே
பழங்கள் தின்னும் கிளியே
பழுத்த மூக்குக் கிளியே ... கிளியே


ஏ.. கிளியே .. வெகுளியே
பஞ்சு பழுத்தால் பழம் இல்லையே ..


ஆற்றில் நிற்கும் கொக்கே
பாலாற்றில் நிற்கும் கொக்கே
பால் வண்ண மேனிக் கொக்கே .... கொக்கே

பால் எங்கே? ஆறெங்கே?
மீன் எங்கே? மணல் எங்கே?

RHYMES - தமிழாக்கம்



Mary Had a Little Lamb
____________________


மேரியோட குட்டி ஆடு
குட்டி ஆடு குட்டி ஆடு
மேரியோட குட்டி ஆடு
அதன் முடி ரொம்ப வெள்ளை

மேரி எங்கே போனாலும்
போனாலும் போனாலும்
மேரி எங்கே போனாலும்
அந்த ஆடும் போகுமே !



Twinkle Twinkle Little Star
_____________________

மின்னும் வண்ண விண்மீன் பார்
உன்னை என்ன என்பேன் நான்
வானின் மீது உயரத்தில்
வைரம் போலே மின்னுகிறாய்

மின்னும் வண்ண விண்மீன் பார்
உன்னை என்ன என்பேன் நான்




Ba Ba Black Sheep
______________


மா மா மாடே பால்இருக்கா ?
ஆமாம் மூணு லிட்டர் பால் இருக்கு

ஒரு லிட்டர் வாத்தியாருக்கு
ஒரு லிட்டர் டீச்சருக்கு
ஒரு லிட்டர் எங்க வீட்டுக் குழந்தைக்கு !

மா மா மாடே பால்இருக்கா ?
ஆமாம் மூணு லிட்டர் பால் இருக்கு




I hear Thunder .. I hear Thunder
_________________________

வெடிச் சத்தம் போலவே
இடிச் சத்தம் கேட்டதே
மழை வந்ததே
மழை வந்ததே

குட்டி குட்டி மழைத்துளி
குட்டி குட்டி மழைத்துளி

குடை திறந்ததே
என் குடை திறந்ததே

( பி. கு : குடை திறந்ததே என்ற வரி என் மகன் கௌதமன் பரிந்துரைத்தது )



Rain Rain Go Away
_______________


வெயிலே வெயிலே போய்விடு
வற்றல் போட அப்புறம் வா

வெளியில் சென்று விளையாட வேண்டும்
வெயிலே வெயிலே போய்விடு !



Johnny Johnny Yes Papa
_____________________

ஜானி ... ஜானி ....
என்னப்பா ?


சீனி சாப்பிட்டாயா?
இல்லையப்பா


பொய் சொல்கிறாயா ?
இல்லையப்பா


வாயைக் காட்டு..
அடப்போங்கப்பா  !



Pussy Cat Pussy Cat Where Have you been ?
________________________________

சேவலே சேவலே சென்றது எங்கே?
சென்னைக்கு நானும் சென்று வந்தேன்...

சேவலே சென்னையில் செய்தது என்ன?
சின்னஞ் சிறார்களை எழுப்பி விட்டேன்...

சேவலே சிறார்க்கு சொன்னது என்ன?
கொக்கர கோ கோ
school-க்குப்போ !





Monday, September 28, 2009

அலைமகள்

சிப்பிக்கு முத்தையும் நெல்லுக்கு வித்தையும்

இப்புவி மாந்தர்க்கு வித்தையும் சொத்தென்று

அளித்த திருமகளே நீயெனக்குப் பாற்கடல்

ஒளித்த அருமருந்து அள்ளியள்ளி இன்றே

அருளி இரைப்பை பெருத்து இதயம்

சுருங்கா வரத்தையும் தா 


மலைமகள்

சமரிட வந்தசூறைக் காற்றினுக் கஞ்சாது
அமரிடத்தே ஆடி அடிக்கும் மரத்திற்கு
வீரமான வேர்தந்தாய் வீரிதிரி சூலிஎன்னில்
வேராக நெஞ்சில் ஒளிந்தோடும் வாய்மைக்கு
நேராய் நிமிர்ந்து மறத்துடன் வெளிப்பட
வாயிலொன்று காட்டிடு வாய்

கலைமகள்

வீணை நரம்பிலும் மீட்டும் விரல்களிலும்
தூணைத் திருத்திச் சிலைசெய் உளியிலும்
மானை வரைகின்ற தூரிகைத் துள்ளலிலும்
பானை வனையும் விரலிடைச் சேற்றிலும்
ஓடியாடும் வாணியே வந்தெனது மூளையில்
ஓய்வாக வேணும்உட் கார்

Sunday, September 20, 2009

காற்று

நான் ஊருக்குச் சென்றேன்

ஈச்ச மரத்திலும் கரண்ட்டு கம்பியிலும்

கூடு கட்டியிருந்த தூக்கணாங் குருவிகளைக்

குசலம் விசாரித்துக் கொண்டிருந்த

என் காற்று நண்பன் என்னைக் கண்டு

தென்னை மரங்களையும் புன்னை இலைகளையும்

அசைத்து ஆரவாரம் எழுப்பி ஓடி வந்தான்

வரும் வழியில்

சேற்று வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த

என் அத்தை மகளின்

'எப்ப வந்த மாமா?' ( என்ன ஒரு மரியாதை!)

எனும் கிள்ளைமொழியையும்

கேட்டு வந்து சொன்னான்

செல்லமாய் என் காதிலும் மூக்கிலும்

கிச்சு கிச்சு மூட்டினான்

என்னை வாழ வைக்கும் உயிர் நண்பன்



மெட்ராஸ் வா என்றேன். வந்தான்.

இங்கிருந்த என் நெருங்கிய நண்பனை

அறிமுகப் படுத்தினேன்

இவன் பெயரும் காற்று; மெத்தப் படித்தவன்

இரசாயண ஆலைகள் என்னென்ன

தயாரிக்கின்றன,

எஞ்சின் எப்படி மூச்சு விடுகிறது

வண்டிகள் ஓடும்போது டயரும் தார் ரோடும்

என்ன செய்கின்றன

என்றெல்லாம் எப்போதும்

ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவன்.


இது கண்ட ஊர்க்காற்று

'இதெல்லாம் நமக்கு ஒத்து வராது

நான் வேணும்னா நீ வேணா ஊருக்கு வா '

என்று கூறி ஓடியே போய்விட்டான்


இவனைக் காண்பதற்காகவே

நான் அடிக்கடி ஊருக்குச் செல்கிறேன்



பாரதியார்

பாரதத்தில் பா-ரதம் ஒட்டிய

பாரதி-யார் என்றால் பாரதியார் என்பேன்

பாரதியின் பாமகள்கள் பா-ரதிகள்

பாரதியின் பாமகளுடன் பழக்கம் கொண்ட

பாரதன் எனக்கு

பாரதியின் மா-ப்பிள்ளையாக மிகவிருப்பம்.

கைக்கிளை

வண்டதின் அமுதும் அமுதக்கலயமும் நல்வண்டல்

மண்ணிற்குமழை நீரும்காய்ந்த ஒரிலையுமாம்

கண்ணிற் கொன்றாய்க் கருத்து மாறுலகில் கண்மணியுன்

எண்ணம்காண் திறனிலாக் குருடன்நான்

பெண்ணரசாம் நினைவென்றிலேன் நினைவன்றி இலேன்

நின்கிளை கைக்கிலைஎனினும் கைக்கிளை

கொண்டனன் நெஞ்சிலென்றும் பூட்டி என்கவியால்

பிரமன்படைத்த பூத்தலைப்பூப் போற்றுவன்


Friday, September 18, 2009

கேளாச் செவி

ஈன்றோர்சொல் ஆன்றோர்சொல் அன்பின் கிளைச்சொல்

தேன்சொட்டும் தேள்கொட்டும் அன்பில் விளைச்சொல்

என்றோசொல் முன்னோர்சொல் கேட்டாலும் என்செவிக்கு

என்றெட்டும் உள்எழும்என் சொல் ?



தூங்கும் குழவியைத் தாலாட்டி அன்புடன்

தாங்கும் அழகிய தூளிக்குக் கேட்பதில்லை

ஏங்கிஅழும் மழலை ஓசை - மனதினுள்

ஓங்குசொல் கேட்டதா செவிக்கு ?

புகையிலை எதிர்ப்பு நாள் ( 31 மே )

வெள்ளம் புகையுயிர் கொல்லும் பகையுன
துள்ளம் கவர்ந்துனை வெல்லும் புதைகுழி
தள்ளும் சுருளெனச் செல்லும் உனதுடல்
உள்ளும் அரவிலாப் புற்று

Thursday, September 17, 2009

லிமரிக்

சுஜாதா எழுதச் சொன்னார் ஒரு லிமரிக்கு

சுவையா நான் எழுதி வந்தேன் ஒரு குமரிக்கு

அவ வாயெல்லாம் இங்கிலீசு பேச்சு

அவ முகமெல்லாம் பவுடரு பூச்சு

சும்மா யாருன்னு பார்த்தா அட! நம்ம - ருக்கு !



குமுதத்தில் திரு சுஜாதா அவர்கள் நடத்திய லிமரிக் போட்டியில் தேர்வாகி வெளிவந்த கவிதை

கவிஞன்

இருவாழையும், தேக்கும்,

சிறுகொடியும், கனிகளும்,

அரசிலையும், மாவிலைகளும்,

நறுந்தேனும், கோவையும்,

விரிமயிலும், மீன்களும்,

கரும்பாம்பும், வண்டுகளும்,

ஒருசங்கும், முல்லைமலர்களும்,

பிறவும்

ஒருங்கிணைந்ததே பெண்ணெனக் கூறி

அருஞ்சுவர்க்கபுரியை

அடர்க்காடாக்கிய

பித்தன்.


மூக்குக் கண்ணாடி

கண்ணுக்குப் பயன்படும்

கண்ணாடிக்குப் பெயர் மூக்குக் கண்ணாடி


கடமை உணர்வுடன்

கண்ணாடியைத் தாங்கியும்

முகத்தின் அமைப்பில்

மூக்கின் பின்னுள்ளதால்

காதுகளுக்குக் கடுகேனும் புகழில்லை.

இறை தேடல்

புவிச் சட்டியில் சிறிது சூரியக் குழம்பூற்றிக்

காற்றுக் குழாயில் எப்பொழுதாவது வரும்

மழைக் குடிநீர் பிடித்து,

வயற் பாத்தி(ரங்)களில்

நெற்சோறு சமைத்து,

போற்றுவோர் பலரைப் புறக்கணித்து

மாற்றவர்க்கும் மாபெரும் விருந்து படைக்கும்

அகிலச் சமையற்காரர் யார்?

அப்படியொருவர் இருந்தால்

அவரைச் சமைத்தவர் யார்?

?

இரை தேடலுடன்
இறைதேடல் தொடர்கிறது..

Wednesday, September 2, 2009

நீரே

அலைக்கடல்தனில் நீலமாகி,
பனிமலைதனில் வெண்மையாகி,
படர்மேகத்தில் கறுப்பாகி
வயற்சேற்றினில் பழுப்பாகி
பயிர்ப் பரப்பினைப் பசுமையாக்கி,

கதிர்க் கரங்களை ஏழ் வண்ண
வில்லாய் வளைக்கும் நீர்
நிறமற்ற நீரே!

நீர் எலாம் ஒன்றே
என நில மாந்தர்க்கு
நீரே சாற்றுவீரே!

நன்னயம்

பரிகசித்தாலும் பானைக்குப்  

பசியாற்றும் பழையசோறு...


அலை அடித்தாலும் அரித்தாலும்

கடலை அணைக்கும் கரை...


வெட்டிச் சாய்த்தவன் 

படுத்துறங்கும் கட்டிலாகும் மரம்...  


மனிதா

உனக்கு மட்டும் ஏன்?

கண்ணுக்குக் கண்.

பல்லுக்குப் பல்?


யாரையும் பழிவாங்க நானிதை எழுதவில்லை!



அழுக்கு

உள்ளேயே உற்பத்தி ஆவது

வெளியிலும் தெரிந்து விடுகிறது.

வெளியிலிருந்து வந்தது

உள்ளேயும் ஒளிந்துகொள்கிறது.



உள்ளிருப்பதை உணராதவர்கள்

"ஆஹா என்ன சுத்தம்?" என்று வியக்கிறார்கள்

இவர்கள் எண்ணத்தைக் காப்பாற்றுவதற்காகவே

என்னைச் சுத்திகரித்துக் கொள்கிறேன்

இவர்களுக்கு நன்றி.



வெளியிருப்பதையோ பலரும்

பூதக்கண்ணாடி கொண்டே பார்க்கின்றனர்

எனக்கே புலப்படாதவற்றை புலப்பட வைப்பதால்

இவர்களுக்கும் நன்றி



உள்ள அழுக்கு நீங்கும் வரை

சுத்திகரித்துக் கொண்டே இருப்பேன்

சுத்தமாக..

உலகைவிட்டு நீங்கும்வரை.




ஹைக்கூ : கொசு

பின்னிய அழகிய ஊஞ்சலில்

ஆடியது கொசு

சிலந்தி வலை

ஹைக்கூ: வாஞ்சை

செம்மறி ஆட்டை வாஞ்சையுடன்

வருடிக் கொடுத்தவன்

தலையில் பனிக்குல்லா

ஹைக்கூ: உயர்வு

தெய்வத்திற்கும் மேலாய்

என்னை உயர்த்தி......

சிதறு தேங்காய்

ஹைக்கூ: குமிழிகள்

கலக்கிய நீரில் தோன்றின குமிழிகள்

ஐயோ வேண்டாம்

நீரில் கொப்புளங்கள்

ஹைக்கூ: விமர்சனம்

என்ன பானை செய்தான் இவன்?

உடைத்தால்

கோணல் மாணலாய்த் துண்டுகள்

எழுதுகோல்

வல்லவனது வளையாத கோல்
வள்ளுவனதோ அழியாத கோல்

வேண்டுகோல், தாண்டுகோல்
தூண்டுகோல், ஊன்றுகோல்
என்று பலவகையாய் எழுதுகோல்கள்

மைவகைகள்:
பொறுமை பற்றாமை பொறாமை
வறுமை தீராமை கொடுமை
வேண்டுமை கைம்மை கலங்காமை

தருமை பெருமை
பெறுமை சிறுமை
ஒருமை தீமை
நன்மை பன்மை
புரியாமை பெண்மை
மற்றும்...
உண்மை ஊமை.

உன் மை விட்டு விட்டு எழுதினாலும்
உண்மை விட்டு விடாமல் எழுதட்டும்

நீ வைக்கோல் தராசுக்கோல் ஆதல் நலம்.

Sunday, August 30, 2009

பிள்ளையார் பாட்டு

ஆதியந்தம் ஏதுமில்லா அரும்பெரும

ஆனைமுகா நின்துதியே காப்பெனக்கு

தீதிதென்று ஓதொருவர் கேட்டிடின்

தீயரென்று தானவரைத் தள்ளாமல்

நீதிஎனில் நெஞ்சமிது திருந்த

நீயுமருள் நேர்மாறாய் ஆங்கதனில்

சூதிருந்தால் அதைமறந்து மன்னிக்கும்

சீர்பொறையும் சேர்ப்பாய் இங்கு



நாளைஎன்றே நாளும் கூறியிங்கு

நாட்கடத்தி நலிந்து நம்போதா

வேளையென்றே வீணிற் புலம்பாமல்

வேழமுகா காலம்கருதக் கற்பி

ஆளையழி அவநம்பிக்கை அழித்து

ஆகுமிது நம்மால் என்றிக்

காளை மனதில்திட நம்பிக்கைக்

கூட்டியருள் தும்பிக்கைக் கணேசா



சிற்றெறும்பிற்கற்பித்தாய் நெறிகள்பல

சீரியவாய் - உறைவிடத் திருந்தே

நற்பலன் நல்குமிடம் நனிதாய்

நுகர்ந் தறிந்து ஆங்கடையக்

கற்றோர்தம் வழிபற்றி வரிசையில்

கட்டுப்பட்டுக் கடிது ஊர்ந்து

மற்றோர் தடைவரின் மாற்றறிந்து

மடைகடந்து தூக்கிச் சுமக்கும்



எடையளந்து வழிமீண்டு சேர்த்த

எவற்றிற்கும் சேதாரம் இல்லாது

அடைகாக்கும் இடமறிந்து சேமித்து

அழகாய்ப் பாடுபட்டு ஆங்கொருநாள்

அடைமழை பெய்யுங்கால் ஆனந்தமாய்

அல்லலின்றி வாழ்கின்ற இவைபோல்

எடையாயிரம் எமக்குப் படைத்திட்டாய்

எலிவாகனா திறன்நூறேனும் கொடு








எழு

மனித சமுத்திரமே
உன் அலைகள்
எழுந்து எழுந்து நின்றாலும்
விழுந்து விழுந்து போகின்றனவே
ஏன்?

கதிரவனின் ஒளிக்கரங்களில்
எத்தனை எத்தனை கயிறுகள் பார்.
பற்றி எழு.

மேகமாய் அமோகமாய் உயர்ந்து
உலகம் உய்ய மழையாய்ப் பொழி

ஆரவார அலைகளை நிறுத்தி
அமைதியாய்
எழு.

சிலேடை : சுண்ணத்தண்டு - புகைக்கோல்

வெள்ளை நிறத்துடன் கைவிரலாய் நீண்டிருக்கும்

பற்றி இழுக்க உடல்தேய்ந்து வண்ணமிடும்

உட்கொள்வார் தேகநலம் கேடுறவே செய்துவிடும்

சுண்ணத்தண்டும் புகைக் கோலாம்

உயிர் நண்பன்

நான் காற்று.

மற்றவர்கள்
என் ஆக்ஸிஜனை
மட்டும் விரும்பும் போது

நீ மட்டும் என்னை முழுதாய் .....

மூளை

எண்ணற்ற மின்னணுச் சுற்றுக்களைத்

தன்னகத்தடக்கிய கணிப்பொறி;


எனது அவயங்களை

ஆணையிடும் அதிகாரி;


கால வெள்ளத்திலும்

நினைவு மரத்தை

நிற்கச் செய்யும்

நீண்ட ஆணிவேர்;


உற்ற நேரத்தில் உதவிடும் உயிர்த்தோழன்;

உண்மையின் உறைவிடம்;

பொய்மையின் பிறப்பிடம்;

எண்ணற்ற தாஜ்மகால்களைக்

கற்பனையில் கட்டும் ஷாஜகான்;


எல்லாவற்றிற்கும் மேலாய்

எல்லோரும் என்னை

முட்டாள் எனக் கூறுவதின்

மூலகாரணி!


Thursday, August 27, 2009

மன(ண)மாறுமோ

- "என்னடி உங்கள் மன்னன்?
இரக்கம் என்பதை அறிவனா அவன்?"
பொய்யாய் வினவுவேன் பாங்கியரிடம்.

"ஏதடி உரைத்திட்டாய்? எங்கள் வேந்தனைப்போல் வள்ளல்
வேறெங்கும் கண்டதுண்டோ?
அவன்போல் வீரன் உண்டோ?
விவேகம் தான் வேற்றிடம் உண்டோ?"
என்று பலவாய் அவர் போற்றிட மிக மகிழ்வேன்.
மகிழ்ச்சியை வெளியில் துளியும் காட்டேன்

கனவில் மன்னன் அவன். மகா ராணி நான்!

-வெகுதூரத்தில் அவன் வரும்பொழுதே
விரைந்தோடி உரைசெய்ய மனம் விரும்பும்.

சற்று அருகில் நெருங்கிவிட்டால்

என் கால்கள் விலகிடும் வேறுதிசையில்.

விலகினால் ஈர்த்து நெருங்கினால்

விலக்கும் இஃதென்ன விந்தைக் காந்தமோ !


ஓரிரு வார்த்தைகள் தான் பேசிடுவேன்


அதில் உளறலே மிகுந்திருக்கும்.



- காய்ச்சலில் நான் படுத்தாலும்

கனவில் காதலன் வந்து தேற்றிடுவான்

தோளில் சாய்த்திடுவான்.

இந்தக் காய்ச்சலின் சுகம் கண்டவர்க்கே புரியும்.

மாறாய் என் மன்னனுக்கு

சிறு விக்கலென்றாலும் மனம் விம்மி விம்மி வெடிக்கும்



- சிறு குழந்தை ஒரு முத்தம் தந்தாலும்

அந்தக் கள்வன் கொடுப்பதாய் நாணம் வரும்



- என் விழிப்பில் அவன் நினைவு

உறக்கத்தில் அவன் கனவு



- இக்கனவு நனவாகுமோ ?

நனவானால் என் நினைப்பினைப்போல் இனிக்குமோ?

வெறும் சோற்றினைப்போல் சப்பென்றிருக்குமோ ?



- நனவாகாமல் போனால் எனக்கு

மணமாகாமலே போகுமோ? இல்லை... என்

மன(ண)மாறிப்போகுமோ?

எனைக் கவர்ந்தது

அன்பே உனக்கு -

மதி முகம்,

மீன் விழிகள்,

அன்ன நடை ,

மின்னல் இடை ,

சிற்ப்ப்ப்ப மேனி ........

ஆயினும் கண்ணே

என்னைக் கவர்ந்ததென்னவோ

உன்

எலிவால் கூந்தல் தான் !


Thursday, June 25, 2009

Wednesday, June 24, 2009

உறக்கம்

மூளை

ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய நேரம்.

இருப்பினும் இடையிடையே வேலை செய்கிறது.

- கனவு வேலை.

இது பரவாயில்லை.

வேலை செய்யவேண்டிய போதும்

சிலநேரம் உறங்கிவிடுகிறது.

ஹூம் .......

பரவாயில்லை.

( வேறு என்ன சொல்வது ? )

மரியாதை

" இவர்களுக்குத்தான் எவ்வளவு
மரியாதை என்னிடம்!

என் கண்களை எதிர்நோக்க
ஏனிந்தக் கூச்சம் ?


என்னிடம் ஒடுங்கி
ஏனிந்த பவ்விய நடை ?


என் குரல் கேட்டதும்
ஏனிந்தச் சிலிர்ப்பு ?


எண்ணியது.......


இரவில், தெருவில், நாய் !!

குழந்தையின் பலூன்

" ஊதிவிட்டோம் பெரிதாய்.. "
குழந்தை உவகையுடன் நகைத்தால்,
வாயினின்று ஓடிப் பறக்கும்
வளி வெளியேறும். உடல் மெலிதாகும்.

கருத்துடன் தந்தை காற்றடைத்து
கயிறெடுத்துக் கட்டிக் கொடுக்கக்
குழந்தைகள் எட்டி உதைத்தாலும்
ஒழுங்காய்க் கிடக்கும்
உடையாமல் பலநேரம்.

சிறப்பாய்ப் பேணி சீரிடத்தில்
வைத்தாலும்
சிறிதாய்க் காற்றிறங்கும் சில நேரம்.

சில நேரம்
சிதறி வெடித்துவிடும்.

அம்மா

அம்மா
நான் தோள் நிமிர்ந்து நிற்பதற்குள்
உன் தோல் சுருங்கிப் போனதம்மா

தியாக ஒளியே கற்பூர தீபம் நீ
அழுகின்ற மெழுகல்ல

நீ என்னை உன்னிலிருந்து
வேராக்கி வேறாக்கியும் வேறாக்கவில்லையே

அன்னை உனைப் பாடுகையில் என் புலமை இங்கு தாழ்கிறது

அம்மா, இன்று நான் இறந்தால்
உண்மையாக அழ உன்னை விட்டால் யாரம்மா?

உயிர் தந்த தாயே,
நான் ஆணான போதும் உனக்கு அன்னையாகும் வரம் தா.