Monday, April 30, 2012

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்



எட்டாத உயரத்தில்
   எட்டான கால் கொண்டு
       பட்டான நூல் கொண்டு
           கட்டிய வலை வீட்டில் விழும்
              விட்டில் உண்டு மகிழும்
                 எட்டுக்கால் பூச்சி நான்
கட்டாந் தரையிலும் 
   நெட்டான சுவரிலும்
       கட்டாக நடந்து 
           கிட்டாமல் கிட்டியதை  
               கட்டாகக் கட்டி 
                  பொட்டாகச் சுமந்து
                      பெட்டியில் வைத்துண்ணும்
                         குட்டிக்கால் எறும்பு நான்
தட்டான கணினியை
   பட் பட் பட்டென்று
      தட்டித் தட்டித் தட்டி
         நெட்டெல்லாம் தேடி  
            நைட்டெல்லாம் கண் விழித்து
                கட்டுக் கட்டாய்  
                   நோட்டு எண்ணி
                       தட்டுத் தட்டாய்த் தின்று
செரிமானம் இல்லையென்றோ
    சரி மனம் இல்லையென்றோ
        மருத்துவரை நாடாமல்
           உண்ண உழைக்காமல் எம்போல்
              உழைத்து உண்க வென்று
                 உழைப்பாளர் தினத்தன்று 
                    வாழ்த்துரை கூறுகின்றோம்.
                         வாழ்க வளமுடன்.
                              


   
     

Wednesday, April 25, 2012

கோடை மழை - அரசு அதிகாரி

முரசாய் இடித்து மின்னலாய் வெட்டி
பரபரத் தாலும் துளிநனை யாமல்
வரவேற்பு நாடியே வேனில் வருவர்
அரசதி காரி மழை

Friday, April 20, 2012

பாதை

உப்பு மடச் சந்தியில் ( http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html  )
ஹேமா அவர்கள் கீழ்க்கண்ட படத்தை வெளியிட்டு நமக்குத் தோன்றும்
எண்ணங்களை கவிதையாக எழுதச் சொன்னார்கள்.


அதற்கு அங்கு எழுதிய கவிதையை  இங்கும் வெளியிடுகிறேன்-
படத்திற்கும் எழுதத் தூண்டியதற்கும் ஹேமாவுக்கு நன்றிகள்.
______________________________________________________

வருவோர் போவோரை வேடிக்கைப் பார்க்க
நின்றுவிட்ட மரங்கள்..

யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?

இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.

Monday, April 16, 2012

பாடிப் பறக்கும் பறவைகள்

பகல் நேரத் தாரகைகளே;
மரங்களிலிருந்து வானில் தூவிய
மகரந்தம் பூசி மலர்ந்த மலர்களே;
இன்னிசையின் சிகரங்களே
இல்லை இல்லை...
இசையின் அகரங்களே

உம்மிடம் கற்றோம் - பாடிப் பறக்க.
மேலும் கற்றோம் மேலும் பலப் பல.

உம்போல்-
ஓருடையாக சீருடை அணிந்தோம்.
வண்ணக் கொண்டைகள், தொப்பிகள் அணிந்தோம்.
கூடிப் பறந்தோம் பிரிந்தும் பறந்தோம்
தேடிப் பகிர்ந்தோம்

காகத்தின் கூட்டில் வளரும் குயில் போல்
பாட்டி வீட்டில் பிள்ளை வளர்த்தோம்

மண்ணாசை மறந்து - தன்னினம் காக்க
ஆயிரம் மைல்கள் ஆண்டாண்டு பறக்கும்
உம்போல் எமக்கும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

அலகுகள் ஒடிந்து சிறகுகள் ஓயும்வரை
உம்போல் யாமும்
பாடிப் பறப்போம்

Saturday, April 7, 2012

மனிதனும் பாம்பும் - சிலேடை

பண்ணிசை நாடும் படமெடுத்து ஆடிடும்
கொண்டவுடை மாற்றும் - புறமுதுகு பாராது
எண்ணிய தன்இணை இன்முகம் பார்த்துடல்
பின்னும் அரவாம் நரன்