Tuesday, March 15, 2011

அம்மா என்றேன்... முருகா என்றேன்

அம்மா என்றேன்... முருகா என்றேன்
அன்னையும் முருகனும் ஒன்றே
எனதையா என்றேன்… கந்தா என்றேன்
கந்தனும் தந்தையும் ஒன்றே...
புகழிலும் பழியிலும் உடன் வரும் ஒருபொருள்
அழகா உனதருள் ஒன்றே (அம்மா என்றேன்)

வேலனவன் குண-சீலனவன்
திரு-மாலவனின் மருகன் - சுவாமிமலை முருகன்
உயர்விலும் சரிவிலும் உடன் வந்து காப்பது
குருபரன் கருணைவேல் ஒன்றே (அம்மா என்றேன்)

சூரர் படை அழித்த வீரனவன்
நக்கீரர் படை புகழும் வேந்தனவன்
இரவிலும் பகலிலும் வழித்துணை வருவது
குமரனின் கதிர்வேல் ஒன்றே (அம்மா என்றேன்)

ஆண்டியின் கோலம் கொண்ட அரசனவன்
அலங்காரங்கள் ஏதுமற்ற அழகனவன் குமரன்
பொலிவிலும் நலிவிலும் புகலிடமாவது
பழனியின் மலையடி ஒன்றே (அம்மா என்றேன்)

கந்தா சரணம் முருகா சரணம்
கந்தா முருகா சரணம் சரணம்


Wednesday, March 9, 2011

மேதினியின் மேய்ப்பர்

மேதினியின் மேய்ப்பரே
மெய்ப்பொருள் நீரே
பாமரரின் பிதாவும் நீரே
சோதரரின் சகாயம் நீரே
ஊழியர்க்கோர் உபாயம் நீரே
ஊழ்வினைக்கோர் அபாயம் நீரே (மேதினியின்)

விரலில் இயங்கும் விசையாவீர்
குரலில் மயங்கும் இசையாவீர்
திசையின் இருளில் ஒளியாவீர்
அசையும் பொருளில்  உயிராவீர்
விசையும் இசையும் தேய்ந்தாலும்
ஒளியும் உயிரும் ஓய்ந்தாலும்
ஜெபமே என்றும் ஓயாது எம்
ஜெபமே என்றும் ஓயாது (மேதினியின்)

முள்ளின் மகுடம் அணிந்தீரே
செந்நீர் மழையில் நனைந்தீரே
சிலுவை பளுவைச் சுமந்தீரே
சிதைவும் வதையும் சகித்தீரே
செந்நீர் மண்ணில் விழுந்தாலும்
கண்ணீர் விழியில் வழியாமல்
கருணை மழையைப் பொழிந்தீரே என்றும்
கருணை மழையைப் பொழிந்தீரே (மேதினியின்)
(சமீபத்தில் இறைவனடி சேர்ந்த நண்பன் சேவியர் நினைவில் எழுதிய இறை துதி)