Wednesday, December 23, 2015

கேளுங்கள் தரப்படும்

விவித்பாரதி வானொலி நிலையத்தில் காலை நேரத்தில் தெய்வீகப் பாடல்களை எனது பள்ளிப்பருவத்தில் தினமும் கேட்கும் வழக்கம் உண்டு. மத நல்லிணக்கம் கருதி மும்மதப்பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். பிற மதங்களின் மீதான எனது இணக்கத்திற்கு இளம்வயதில் இந்தப்பாடல்களைக் கேட்டது முக்கிய காரணம்.
கிருஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு 'கேளுங்கள் தரப்படும்' என்ற பாடல் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை ஒரு சிறு பதிவாய் இங்கு பகிர்கிறேன்.

'கேளுங்கள் தரப்படும்' 'இறைவனிடம் கையேந்துங்கள்' 'கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே' என்று மும்மதப்பாடல்கள் பலவும் இறைவனிடம் கேளுங்கள் என்று உரைக்கின்றன. இறைவனிடம் மட்டுமல்ல, செய்ய இயன்றவர்களிடம் அவசியமான உதவி கேட்பதில் தவறில்லை. தேவை என்று வந்தபின் தேவையில்லாத கௌரவம் கருதத் தேவையில்லை என்கின்ற புரிதல் ஏற்பட்டது.
கேளுங்கள் தரப்படும் பாடலில் அடுத்து வரும் சொற்றொடர் 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது முயற்சியை விடாதே என்றும் 'தேடுங்கள் கிடைக்கும்' என்ற சொற்றொடர் தேடலை நிறுத்தாதே என்றும் இன்றுவரை என்னை ஊக்கப்படுத்தி வருகின்றன.

?? வயதிலேயே ..ஆகமங்கள் 56-னையும் ஐயம் தீர உணர்ந்தார்' என்கிற வரி - இளைமையில் கல் என்பதையும் கற்க கசடற என்பதையும் சிறுவயதில் எனக்கு புரியவைத்தன.

'முப்பது காசுக்காகவே காட்டிகொடுத்தாரே' என்கிற வரிதான் இந்தப்பாடலிலேயே என்னை மிகவும் பாதித்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்கிற கோபம் அப்போதெல்லாம் வரும். ஆனால் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்கிற புரிந்துணர்வுடன் எப்போதும் நடந்துகொள்ளவேண்டும். அதற்கான தற்காப்பையும் இயன்றவரை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் எனும் கருத்தை வளர வளரப் புரிந்து கொண்டேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Tuesday, December 22, 2015

மணிகண்டன் தரிசனம்

மழைமுகிலெனவே இருமுடி சுமந்து
மலைதனைக் கடந்தால் மணிகண்டன் தரிசனம்

நெய்யென உருகிடும் உள்ளத்தில் ஒளிர்வான்
சந்தனமாய் எங்கள் சிந்தையில் குளிர்வான்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

அன்னையின் துயரற புலிப்பால் கொணர்வான்
அன்பரின் குறைகளைக் குறிப்பால் உணர்வான்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

பதினெட்டு படிதரும் பலவித மாற்றம்
படிப்படியாய் வரும் வாழ்வில் முன்னேற்றம்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

Friday, November 27, 2015

Thanksgiving Sale

நமது அமெரிக்க நண்பர்கள் Thanksgiving Sale-ஆன இன்றைய பொழுதில் தள்ளுபடி விலையில் பொருட்களைத் தேடி எப்படி ஓடியிருப்பார்கள் என்றொரு கற்பனை.... சரி, சரி, ஒப்புக்கொள்கிறேன்.. நான் அமெரிக்காவில் இருந்தபோது ஓடிய அனுபவமும்தான்!
(மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன மெட்டில்)

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்
உன்னை என்னைப்போலே நூறு பேரறிவார்
எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்
உன்னை என்னைப்போலே நூறு பேரறிவார்
பாரு என் முகம் பாரு பாவமாய்
பாரு என் முகம் பாரு பாவமாய்
எந்தன் cartக்குள் நீ ஏற வேண்டாமா?
எந்தன் cartக்குள் நீ ஏற வேண்டாமா?
நாடவா தேடவா ஓடவா வெறும் cart-ஐ ஓட்டவா?

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

Target-டிலே உந்தன் விலை கேட்டேன் பின்பு
Walmart-டிலே உந்தன் நிலை கேட்டேன்
Target-டிலே உந்தன் விலை கேட்டேன் பின்பு
Walmart-டிலே உந்தன் நிலை கேட்டேன்
Aisle Aisle-ஆய் என்னை சுற்றவிட்டு
Aisle Aisle-ஆய் என்னை சுற்றவிட்டு
ஒரு ஓரத்திலே சென்று ஒளிந்ததென்ன?
நாடவா தேடவா ஓடவா வெறும் cart-ஐ ஓட்டவா?

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

Wednesday, November 11, 2015

தவிர்க்கமுடியாத தீபாவளி

சின்னதாய் ஒரு ஸ்மைலி முதற்கொண்டு அழகிய படங்களுடனான வாழ்த்து மடல்களும் அலாரத்துடன் சேர்ந்துகொண்டு அலைபேசியை அதிகாலையிலேயே உசுப்பிவிட, உற்சாகமாவே விடிந்தது எனது தீபாவளி. மழை என்கிற காரணத்தினாலோ, தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்குச் செல்லவில்லை என்கிற காரணத்தினாலோ, தீபாவளி கொண்டாடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

உறவினருடன் சேர்ந்து சாப்பிடுகையில் தவிர்க்க முடியாத உணவுப் பதார்த்தங்களும், அதிரசம் மற்றும் இனிப்பு வகைகளும் எனது உணவுக் கட்டுப்பாட்டை 'இன்று ஒரு நாள் மட்டும்' என்று தளர்த்திவிட்டன.

தீபாவளியன்று சூழல் மாசுபடுத்தும் வாண வெடிகளைத் தவிர்ப்பது என்ற கொள்கையுடன் இருந்த எனது மகனையும், நண்பர் ஒருவர் கொடுத்த சிவகாசி பரிசுப் பெட்டி 'இந்த ஒரு முறை' என்று தளர்த்திவிட்டது.

கம்பி மத்தாப்புகளை ஈரமண்ணில் நட்டுவைத்துக்கொளுத்தி இவைதான் நான் விடும் ராக்கெட்டுகள் என்று மகள் செய்த குறும்பையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்.

தொலைக்காட்சியை வெகுவாகத் தவிர்த்துவிட்டோம் என்றாலும் வேலை எதுவும் இல்லாத மதிய வேளையில் வேலை இல்லாப் பட்டதாரி படம் பார்த்தோம் (முன்பே பலமுறை பார்த்திருந்தாலும்). அதில் வரும் ஒரு வசனம் சிந்திக்கவைத்தது " முன்பெல்லாம், இல்லாதவங்க இருக்கிறவங்ககிட்ட திருடினாங்க.. இப்போதோ, இருக்கிறவங்க இல்லாதவங்ககிட்ட திருடறாங்க.."

இதில் நமது பங்கு ஏதாவது இருக்கிறதா தவிர்ப்பதற்கு? 

Friday, November 6, 2015

தீபாவளி நல்வாழ்த்துகள்

அதிரசம்போல் மின்னிடுமே
எண்ணெய் தேய்த்த மேனி
அடுக்கடுக்காய் முறுக்கு தட்டை
அடித்து நொறுக்கத் தீனி
தீபாவளி மருந்து சாப்பிட்டும்
விருந்து சாப்பிடலாம்
விருந்து சாப்பிட்டும்
மருந்து சாப்பிடலாம்
வெடிக்கின்ற வெடிகள்
வெற்றி முரசு கொட்டும்
வெடிக்காத வெற்று வேட்டும்
தோல்வி பழக வைக்கும்
மத்தாப்போ கம்பியோ
எதையாவது பற்றவைப்பதென்பது
யாருக்குத்தான் பிடிக்காது?!
ஏற்றிவைத்த தீபம் நமது
இல்லம் கோயிலாக்கும்
ஏற்றிவைத்த புன்னகையும்
இதழ்களை எழிலாக்கும்
புத்தாடை புதுப் படம்
குறைவிலாக் கொண்டாட்டம்
நரகாசுரன் என்பதெல்லாம்
நமுத்துப்போன காரணம்
பண்டிகைகள் வாழ்வதற்கு
கொண்டாட்டமே காரணம்
கொண்டாட்டமாய் வாழ்வதற்கு
பண்டிகைகளே காரணம்!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
அன்புடன் பாலா சிவசங்கரன்

Friday, October 9, 2015

என்னிலே பாதியில்லை

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ..." என்று பாடிக் கொண்டிருந்த என்னை, 'காதலிக்கு பதில் மனைவியின் பிரிவாற்றாமையில் பாடும் பாடலாக இதைப் பாடக்கூடாதா?' என்று ஒருவர் கேட்டுவிட்டார். 

நமக்குதான் ரீமிக்ஸ் செய்வது அல்வா சாப்பிடுவது ஆயிற்றே... 
மனித குலத்தின் பாதியான மனைவி குலத்திற்கு இந்தப் பாடலைச் சமர்ப்பிக்றேன்

-------------------------------------------------------------------------------------------------------
வண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ
என்னிலே பாதியில்லை. உன்னைத்தொட ஏணியில்லை

பக்கத்தில் நீயும் இல்லை. பால் பழங்கள் இனிக்கவில்லை
சொந்தமாய் சமைக்கவில்லை.. சாதமும் மீதமில்லை.. 
HSB -யில் ருசியுமில்லை சங்கீதாவில் சுவையுமில்லை
அன்னை அரவிந்தரிலும் உன் கையின் மணம் காணவில்லை
நீயும் வந்து சேர்ந்துவிட்டால் உப்பு காரம் குறைவதில்லை

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
அம்மா வீடு சென்றுவிட்டால் ஏம்மா என்னை நினைப்பதில்லை?
சும்மாவாச்சும் என்னையழைத்து பேசவுமா நேரமில்லை?
வீடு வந்து சேர்ந்த பின்னே வைய மட்டும் மறப்பதில்லை 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
என்னிலே பாதியில்லை உன்னைத்தொட ஏணியில்லை
----------------------------------------------------------------------------------------------- 

பி.கு:தனது பாடலை இப்படி உட்டாலக்கடி செய்து எழுதிய எனக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் ஏதேனும் பரிசு கொடுப்பாரா என்று யாரவது கேட்டுச் சொல்லுங்கள்!

Thursday, October 1, 2015

களிகொண்டு நிறைவாக

வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் “தமிழ்நாடு அரசுதமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்...உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டியில் வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி : இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை எழுதி வெளியிட நேரம் நிறைவடைந்துவிட்டாலும் வருத்தமில்லாமல் விருத்தமொன்று எழுதினேன்.. நேரம் கிடைக்கையில் இதை விரித்தும் எழுத உத்தேசம்!

ஈரெட்டு வயதினில் இளமையின் திறனோடு 
     நீர்விட்டு வளர்த்திடும் பயிராக   
நேரென்று நிமிர்ந்திடு நிலைமைகள் மாற்றிடு    
     நேற்றோடு குனிந்திடும் குணம்நீங்க 
வேரென்று பரவிடும் வீரத்தை விளைத்திடு 
     யாருக்கும் எதிர்நிற்கும் துணிவாக  
பாரெட்டிப் பரவிடும் பாராட்டிப் புகழ்வரும்  
     நீபெற்ற பெயர்மாறும் உயர்வாக 

ஏகட்டும் வீணது இணையட்டும் இனியது 
      நீயெட்டும் தொலைவின்று அருகாக 
பூகட்டும் நாரது பரமன்தோள் ஏறுது 
      நீசுற்றும் சுற்றங்கள் நனிதாக 
போகட்டும் போனது ஆகட்டும் ஆனது
      நீசெல்லும் வழியென்றும் புதிதாக  
 நீகட்டும் கொடியுயர் வான்முட்டிப் பறக்கட்டும்
      கைகொட்டி களிகொண்டு நிறைவாக  

Wednesday, September 30, 2015

பயன்பாட்டில் வைத்திருப்போம் பண்பாடு

மின்னணுக் கருவிகளின் உச்சங்கள்  
நுண்ணலைக் கதிர்களின் எச்சங்கள்
தலைமிராது நடக்கும் ஏஞ்சல்கள்   
தலைகுனிந்து பார்ப்பது மின்னஞ்சல்கள்;  
குறுஞ்செய்திக் கொஞ்சல்கள் 
காதடைத்த குமிழிக்குள் பாடல்கள் 
பாழடைந்த கிணற்றினுள் ஓலங்கள்
கருவிலிருந்து வந்தனவா இக்கருவிகள்?
உருவிழந்து போயினவோ இங்கு பிற உயிர்கள்?
யாகங்கள் வளர்புகையாய் வாகனங்கள்
வேகத்தில் உயிர்பறிக்கும் எமவாகனங்கள் 
நடைபாதை இல்லாத நெடுஞ்சாலைகளா 
வளநாட்டின் முன்னேற்ற அறிகுறிகள்?
தனிமமாய்ப் போவதா மனிதம்?

கண்களைப் பார்த்து நாம் பேசிடுவோம் 
காதுகள் கொடுத்து நாம் கேட்டிடுவோம்  
கால்களும் இடறி விழுந்தவரை 
கைகளைக் கொடுத்து நாம் தூக்கிடுவோம் 
உதவிகளுக்கு ரிப்ளை செய்திடுவோம்
சகிப்புத்தன்மையை பார்வர்ட் செய்திடுவோம்
வெறுப்புணர்வை டெலீட் செய்திடுவோம் 
மனிதர்களை  லைக் செய்திடுவோம்  
மனிதநேயம்   ஷேர் செய்திடுவோம் 
செல்போனில் வைத்திருப்போம் சிம்கார்டு 
பயன்பாட்டில் வைத்திருப்போம்  பண்பாடு

-----------------------------------------------------------------------------

இந்தக் கவிதை 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் 'மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015' - புதுக்கவிதைப் போட்டிகாகவே எழுதப்பட்டது.

இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

Monday, September 21, 2015

உழுதவன் பசியும் உழைப்பவன் வறுமையும்

உழுதவன் பசியும்
உழைப்பவன் வறுமையும்
இந்த நாட்டிலே விந்தையடா
ஆள்பவனுக்கும் ஆண்டவனுக்கும்
ஆடம்பரத்தில் சிந்தையடா

வியர்வையும் சிந்தி
கண்ணீரும் சிந்துதல்
எந்த ஊரிலே தர்மமடா?

செலவினை மீறிய வரவென்பதிங்கு
செல்வந்தருக்கு மட்டும் ஏனடா?
உழுதவன் விளைவித்த பொருளுக்கு
விலை வைக்கும் உரிமை
வியாபாரிக்கு ஏனடா?

ஓய்வுக்கும் ஊதியம்
வாய்த்தவனுக்குக்
கடமையில் கவனம் ஏதடா?
லஞ்சம் வாங்கித் தின்பவனுக்குக்
கொஞ்சமும் இரக்கம் ஏதடா?
அரசியல் என்பது இந்த நாட்டிலே
ஏழை அரிசியில் கலந்த கல்லடா

பாரியும் ஓரியும்
வள்ளலென்று வாழ்ந்த
பாரத நாடும் இது தானடா
வெள்ளையரின் பின்
கொள்ளையரெனில் இனி
மக்களின் சகாயம் யாரடா?

Monday, August 17, 2015

ப.பி: கரையெல்லாம் செண்பகப்பூ

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவல் படித்தேன்.
அவரின் வழக்கமான விறுவிறு கிளுகிளு பாணியில் எழுதப்பட்ட நாவல். ஆனால் வித்தியாசமாய் கிராமத்துச் சூழலில் அமைந்த மர்மக் கதை. நாயகன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு கிராமத்துக்கு வருகிறான் என்பதால் சுஜாதா தனது முன்னுரையில் வானமாமலை அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அவர் புத்தகத்திலிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களை இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார்.

அந்தப்பாடல்களில் இரண்டு எனக்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நினைவுபடுத்தின. அதைப் பகிரவே இந்தப் பதிவு ..

1. மாமரத்துக் கீழே நின்னு
மங்கை குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இரை உண்ணாது.

பரிவு காட்ட ஏதோ ஒரு உயிர் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.. எல்லா காலத்திலும்.. அது நாய் பூனை என்ற வளர்ப்புப் பிராணி மட்டும் இல்லாமல் - மாமரத்து மயிலாகவும் இருக்கலாம் என்பதே இந்தப் பாடலின் சிறப்பு.

இந்த நாட்டுப்புறப் பாடல் நினைவு படுத்தும் இசைஞானியின் பாடல் "மாங்குயிலே பூங்குயிலே" என்று நான் சொல்லவும் வேண்டுமோ? " மாமரத்துக் கீழிருந்து மங்கை அவள் குளிக்க அந்த மாமரத்து மேலிருந்து புலம்புவது யாரு?"

2. திருச்செந்தூர் ஓரத்திலே
விரிச்சதலைப் பாலத்திலே
விரும்பிச்சொன்ன சத்தியங்கள்
வீணாகப் போகுதையா...

என்ற இன்னொரு நாட்டுப்புறப்பாடல் எனக்கு "ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி.." என்ற பாடலின் மெட்டை நினைவு படுத்தியது.

Monday, August 3, 2015

உயிர்த்துளி

மணித்துளி ஒவ்வொன்றும் உயிர்த்துளி
கவனித்து அதை நீ செலவழி
செ(ல்)லவழி பலவுண்டு கண்டபடி
அதில் நல்லவழி நீயும் கண்டுபிடி
கண்டுபிடி நல்லநல்ல வாய்ப்புகள்
கனியும் உன் தோட்டத்துக் காய்ப்புகள்
காய்ப்புளி வேண்டாம் கனி புகல்
புகழ் மற, மறவாதே புகழ
இயல்கின்ற போதெல்லாம் சிரித்துவிடு
அயலவர் கண்ணீர் துடைத்துவிடு
விடுவதற்கில்லை வாழ்க்கை
கெடுவதற்கில்லை காலம்
மனதினைச் செதுக்கிடும் இழைப்புளி-
மணித்துளி ஒவ்வொன்றும் உயிர்த்துளி

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம்

கனவுகள் விதைக்கலாம்
விதைத்ததை அறுக்கலாம்
வழிபல வகுக்கலாம்
வறுமையைத் தொலைக்கலாம்
பொருளினைப் படைக்கலாம்
பகிர்ந்துநாம் கொடுக்கலாம்
அறிவியல் படிக்கலாம்
இருளினை விலக்கலாம்
படைக்கலம் வடிக்கலாம்
பகையினை ஒடுக்கலாம்
அமைதியை வளர்க்கலாம்
மகிழ்ச்சியில் திளைக்கலாம்
மழலைகள் வளர்க்கலாம்
மரங்களும் வளர்க்கலாம்
கவலைகள் மறக்கலாம்
காலம் வந்தால் உறங்கலாம்
விடைதந்த அப்துல்கலாம்
விடிவெள்ளி ஆகலாம்

Tuesday, July 21, 2015

அழகொழுகும் அருவி

என்ன சொல்லிப் பாடுவது
அழகொழுகும் அருவியை?

அடர் மரச் செறிவினில்
தொடர் மலைச்சரிவினில்
சுடர் மின்னல் அடிக்கின்ற
படர் வெள்ளிக் கொடியொன்று
வேர் காண வீழ்ந்ததுபோல்
அழகொழுகும் அருவியினை
என்ன சொல்லிப் பாடுவது?

வெள்ளிப்பனி மலையுருக்கிக்
கிள்ளிக் கொஞ்சம் தருகுதோ?
வான் மழைக்கு நிகராக
அள்ளி வந்து தருகுதோ?
உள்ளமெல்லாம் வெள்ளையென
சொல்லிக் கொள்ள வருகுதோ?
உள்ளுறைந்த மீன்களுக்குத்
துள்ளச் சொல்லித் தருகுதோ?
என்ன சொல்லிப் புகழ்வதிந்த
அருள்நிறைந்த அருவியை?

அன்னைபோல் தலைகோதி
அங்கமெல்லாம் நீவுகையில்
அயர்வும் வலிகளும்
வியர்வையும் கண்ணீரும்
கரைத்தெடுத்து-
கரைகளற்ற பெருவெளியில்
கருணை பொழியும் அருவியினை
என்ன சொல்லி வாழ்த்துவது?

Friday, June 19, 2015

பட்டி, தொட்டி மற்றும் சிட்டி

வட்டியோடு சேருதையா வட்டி-
இஷ்டத்துக்கும் போடுதையா குட்டி.

உரத்தோடு மருந்தெல்லாம் கொட்டி
பயிர் செய்த கடனுக்கு வட்டி
வெள்ளாமையைத் தின்னுது வயிறுமுட்டி
விவசாயி நிக்குறான் கையைக் கட்டி.

புதுவீட்டில் குடி வரும்
கடன் வட்டி-
வீட்டைக் காலி பண்ணுமா
இந்த ஜோடி?

பிள்ளைகளைக் கட்டிக்கொடுத்தால்
தாத்தா பாட்டி-
கடனும் வட்டியும்தான்
பேரன் பேத்தி

செத்தவனை வைக்கவேணும்
ஐஸ் பெட்டி -
அதுக்கும் கட்டுறான்
கந்து வட்டி

ஐயகோ, இந்த தேசத்தில்
ஆறு முதல்;
அறுபது வட்டி.

கட்டிக் கட்டி வட்டி ஆறாத கட்டி.

“ஆண்டவரே...”, “இறைவா...”, “சாமி....”
ஆதரிக்க வேணும் இந்த பூமி.
முடிஞ்சா செஞ்சி நீயும் காமி
வட்டியில் மூழ்காத
பட்டி, தொட்டி மற்றும் சிட்டி

Wednesday, June 17, 2015

இன்னும் குமரன்னு நெனப்பு

கண்ணாடி போட்டு உன்னைப் பார்ப்பது
கஷ்டமாக இருக்கிறது
கண்ணாடி போடாவிட்டால் உன்னைப் பார்ப்பது
கஷ்டமாக இருக்கிறது

தட்டாமாலை சுற்றவா? என்றால்
‘முடியாது’ என்கிறாய்..
வேண்டாம்னு சொல்லலாமில்ல?

வளையோசை கலகலவெனப்
பேருந்து படிக்கட்டில் பாடினால்
பதறி-
மேலே வா என்கிறாய்

இன்னும் குமரன்னு நெனப்பு
என்று சிலநேரங்களில் நீ சொல்வது
பாராட்டா பழிப்பா என்று
புரியமாட்டேன் என்கிறது

நீ மட்டும் எனக்கு என்றும் மாறா
இளமையுடன் தோன்றுவது எதனாலோ?

Wednesday, June 3, 2015

இதைச் செய்யாவிட்டால் என்ன?


மசானபு ஃபுகோகா அவர்களின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளேன். (pg 137-138). அதீத வளர்ச்சியை நோக்கி இந்த உலகம் ஓடுவது தேவையற்றது என்ற கருத்தை இயற்கை விவசாயத்தின் ஊடே வலியுறுத்தியுள்ளார்.

வளர்ச்சியோ விஞ்ஞானமோ வீண் என்பதை நான் ஆதரிக்கவில்லை எனினும் பூமிமீதான மனிதத்தின் அளவற்ற அதிகாரத்தையும் உரிமை கோரலையும் விரும்பாதவன் என்கிறவகையில் இதைப் பகிர்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------

"நீங்கள் எதையுமே செய்யாவிட்டால், உலகம் இயங்கிக் கொண்டிராது? வளர்ச்சியற்ற உலகம் எப்படி இருக்கும்?"
"நாம் எதற்காக வளர்ச்சி பெற வேண்டும்? பொருளாதார வளர்ச்சி 5-10 சதவீதமாக உயரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறதா? வளர்ச்சி விகிதம் 0 சதவீதமாக இருந்தால் என்ன தவறு? இது ஒரு நிலையான பொருளாதாரத்தின் அடையாளம் இல்லையா? மிகவும் சாதாரணமாகவும், இயல்பாகவும் வாழ்வது எல்லாவற்றையும் விட சிறந்ததல்லவா?"

மக்கள் எதையாவது கண்டுபிடித்து, அது எவ்வாறு இயங்குகிறது என்று ஆராய்ந்து, இயற்கையைப் பயன்படுத்துகின்றனர். அது மனித இன உய்விற்கான ஒன்று என்றும் நினைத்துக் கொள்கின்றனர். இவையனைத்தும் இது நாள் வரை விளைவித்தது என்ன தெரியுமா? இந்த கிரகம் மாசுபாடடைந்தது; மக்கள் குழப்பமானார்கள்; நவீன காலத்தின் பெருங்குழப்பத்திற்கு வரவேற்பு ராகம் வாசிக்கப்பட்டது.

** இந்தப் பண்ணையில் நாங்கள் 'ஒன்றுமே செய்யத் தேவையற்ற' வேளாண்மையைச் செய்து, முழுமையான, ருசியான தானியங்கள், காய்கறிகள், பழங்களை உண்கிறோம். பொருட்களின் ஆதாரத்திற்கு அருகே வாழ்வதில், பொருளும், ஒரு அடிப்படையான மன நிறைவும் இருக்கிறது. வாழ்க்கை ஒரு பாடல், வாழ்க்கை ஒரு கவிதை.

மக்கள் இந்த உலகை அலசி, ஆராய்ந்து, நாம் இதைச் செய்தால் நல்லது, அதைச் செய்தால் நல்லது என்று தீர்மானிக்கும்போது,.என் ஆராய்ச்சி எல்லாம் இதைச் செய்யாவிட்டால் என்ன? அதைச் செய்யாவிட்டால் என்ன என்ற திசையில் செல்கிறது. எதையுமே செய்யாவிட்டால் இந்த விவசாயிகள் இதைவிட நன்றாக இருப்பார்கள் என்பதை கடந்த முப்பது ஆண்டு அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

மக்கள் அதிக வேலை செய்தால், சமுதாயம் அதிகமாக வளர்ச்சியுறும்; அதிகப் பிரச்சனைகள் ஏற்படும். வளங்கள் தீர்ந்து வருவது, இயற்கை அதிகமாக சீரழிக்கப் பட்டு வருவது, மனித ஆற்றல் நொறுங்கி வருவது ஆகிய அனைத்தும் மனித சமுதாயம் எதையாவது சாதிக்கவேண்டும் என்று வெறி கொண்டதன் விளைவுதான்.

முதலில் முன்னேற்றம் அடையவேண்டிய தேவையில்லாமல் இருந்தது. அதனால் எதுவும் செய்யப்படவில்லை.
எதையும் கொண்டுவரத்தேவையில்லை என்றொரு இயக்கத்தை உருவாக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருக்கிறோம்!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------

** நிலத்தை உழுது பண்படுத்துவது கூடத் தேவையற்ற வெறுமனே விதைத்து, களைகள் பரவாதிருக்க வைக்கோலைப் பரப்பிப் பயிர் செய்யும் முறையை இவர் இவரது பண்ணையில் வெற்றிகரமாய் செய்ததையே "ஒன்றுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை' என்று இங்கு குறிப்பிடுகிறார்.

பி.கு
பூவுலகின் நண்பர்கள் செய்துள்ள தமிழாக்கம் எளிமையாகவே உள்ளது. எனினும் பல இடங்களில் நேரடி மொழிமாற்றம் தவிர்க்க இயலாதது என்கிற புரிதலுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்கவும்.

Sunday, April 12, 2015

கோட்டுக்குப் பதில் பூட்டு

வில்லுக்குள் ஜனகனும்
கண்ணுக்குள் ராமனும்
கோட்டுக்குள் இலக்குவணனும்
வனத்துக்குள் இராவணனும்
மனதுக்குள் அனுமனும்
தணலுக்குள் குடிமகனும்
தனக்குள் பூமகளும்
சிறைவைத்தனர் சீதையை

மாரீசன் செய்தது சதி
ராமன் சென்றது விதி
சீதை இழந்தது கதி
இலக்குவணன் இழந்தது மதி
இருந்தால் போட்டிருப்பான்
கோட்டுக்குப் பதில் பூட்டு

Sunday, April 5, 2015

'நெரிசலாயிட்டேன்' - ஒரு சாலையின் சோககீதம்

கொத்துக் கொத்தா வெட்டிப்புட்ட
எக்குத்தப்பா நீ மூடிவுட்ட
தாரும் தான் இல்லாம கொட்டிவெச்சியே
ஜல்லிக்கல்ல மேல..
நான் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன்

தோசைக்கு மேல தோசை சுட்டியே
ரோட்டு மேல ரோட்டப் போட்டு அடுக்கிவுட்டியே
கிரவுண்டு ப்ளோரத்தான் பேஸுமென்டுபோல்
ரோட்டவுட்டு பத்து அடி எறக்கிவுட்டியே
மழத்தண்ணி போவ ஒரு காவாயும் இல்ல
மனுஷங்க போவ ஒரு ப்ளாட்பார்மும் இல்ல
நான் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன்

Friday, March 20, 2015

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு
சிறகை விரித்துத் தட்டு தட்டு
கிடைக்கும் புது மெட்டு மெட்டு
பாட்டுப் பாடு வட்டம் இட்டு

வீட்டின் உள்ளே சுற்று சுற்று
விசிறி இருக்கு பார்த்து பார்த்து
அரிசி இருக்கு கொத்து கொத்து
சாதம் இருக்கு பாப்பாவுக்கு

கண்ணாடி முன் நின்றுகொண்டு
சிங்காரமும் செய்துகொண்டு
உனக்கு நீயே முத்தமிட்டு
உல்லாசமாய் வாழ்ந்துவிடு

எதிரி எவரும் வீட்டில் இல்லை
குஞ்சைத் திருட யாரும் இல்லை
பல்கிப் பெருகி முன்பு போலே
கண்கள் நிறைய காட்சி கொடு

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு
சிறகை விரித்துத் தட்டு தட்டு
கிடைக்கும் புது மெட்டு மெட்டு
பாட்டுப் பாடு வட்டம் இட்டு

#சிட்டுக்குருவிகள்தினம்

Tuesday, March 17, 2015

அழகோவியம்

கொண்டை குலுங்கிடக் குதித்துக் குளம்பொலி
        செண்டை அடித்திடும் புரவிகள் பூட்டி
கெண்டை சிலம்பெனச் சிலும்பிட அலைஎழும்
        பொன்னி நதிக்கரைப் புழுதியை மாற்றி
அண்டம் நிறைத்து அழகோவியம் தீட்டிடும்
        பெண்ணின் விழிச்சுடர் சோதியும் போற்றி
கண்டு வியந்தனர் அரண்மனை நான்வர
        என்னெழில் ரதிமகள் ரதத்தில் ஏற்றி

Saturday, March 14, 2015

கூடையைக் குடுத்துவுடு

சந்தைக்குப் போனீங்கன்னா மாமா
சாமந்திப் பூ வாங்கி வாங்க

சாமந்திப் பூவெதுக்கு மானே
செண்டு மல்லி வாங்கி வாரேன்

செண்டு மல்லிய வைக்க மாமா
கொண்டை ஊசி வாங்கி வாங்க

கொண்டை ஊசியோட கண்ணே
கண்டாங்கியும் வாங்கி வாரேன்

கண்டாங்கி எனக்கு மாமா
துண்டு வேட்டி உங்களுக்கு

சுருக்கா போயிவாரேன்
சுருக்குப் பைய அவுத்து
சில்லறைய நீயும் குடு

வாங்கப் போற பொருளை எல்லாம்
உள்ளத்துல கொண்டு போலாம்
வாங்குன பொருளை எல்லாம்
உள்ளங்கையிலா கொண்டு வருவீங்க?

குத்திப் பேசாத புள்ள கூடையைக் குடுத்துவுடு

வலக்கையின் விருப்பம்


மூன்று முடிச்சு போட்டு
பின்புறமாய்ச் சுற்றி
எட்டி உனது நெற்றியில்
பொட்டுவைக்க விருப்பமடி
என் வலக்கரத்திற்கு…
இன்னும் கூடி வரவில்லை
அதற்கான நேரம்

துப்பட்டாவைப் போல்
உன் தோள்மீது மெதுவாய்த்
தொட்டுப் படரவும்
காலம் வரவில்லை
என் கரத்திற்கு…

இப்போது அதன் சிறுவிருப்பம்
என்னவென்றால்
உனது இடக்கையின்
இடைவெளியில் இழுத்து
மடிமீது அழுத்தி நீ பிடித்திருக்கும்
புடவை முந்தானையைப்போல்
உன் கரம் பற்றியிருப்பதே..

Thursday, March 5, 2015

சீக்கிரமா வந்துவிடு

இங்கிட்டு நான் இருக்க
அங்கிட்டு நீ இருக்க
பொங்கிட்டு வரும் ஆசையைத்தான்
எங்கிட்டு நான் பங்கு வைக்க?

குளத்தங்கரைப் படிக்கட்டில்
சிலையாட்டம் குந்திவிட்டேன்
சில வார்த்தை உன்கிட்ட
சிரிச்சி நான் பேசினாத்தான்
உசுரு இருக்குதுன்னு என்
உடம்புகூட நம்பும்
உடனடியா வந்துவிடு

உன் நெத்தியிலே வச்சி விட
பொத்திவச்ச திருநீறு
உள்ளங்கையில் ஊறிப்
பசையாட்டம் ஒட்டிடிச்சி.
அசையாம வச்ச கையி
வெளங்காமப் போயிடும்னு
வெசனமா இருக்குதய்யா
வெரசா நீ வந்துவிடு

சாயங்காலம் ஆயிடிச்சி
சொர்ணக்கிளி காணமின்னு
சிறுக்கி ஆத்தா
சித்தப்பனை ஏவுமுன்னே
சீக்கிரமா வந்துவிடு
சிரிச்ச முகம் காட்டுறேன்.

Friday, February 27, 2015

காதலினால் நீளும் வாழ்வு

காதலினால் நீளும் வாழ்வு-
ஈருயிர் தரும்.
காதலினால் நீளும் வாழ்வு-
இரவில் தூங்கவிடாது;
காலையில் எழுப்பிவிடும்.

Saturday, February 14, 2015

காதலின் வெற்றி

மலைப்பாதையோரத்தில்
பாறைகளில் எழுதியிருக்கலாம்
நம் காதலை-

மரங்களை ரணமாக்கி
வடுக்களாய் விட்டிருக்கலாம்
நம் பெயர்களை-

கடற்கரையோரத்திலன்றோ
எழுதிவைத்தோம் நம்காதலை-
சுடுமணல் தாக்காமல்
உன் பஞ்சுப் பாதங்களை
நொடிக்கொருதரம் குளிர்வித்த
அதே அலைகள் அழித்தொழிக்க....?

தொலைந்துபோன தடத்தில்
நான் இன்று சிந்தும்
கண்ணீர்த்துளிகள் மட்டும்
காதலில் வென்று கலக்கின்றன
உப்புக் கடலில்.

Thursday, February 12, 2015

காதல் செய்யும் பெண்ணே

காதல் செய்யும் பெண்ணே
கவனமாகப் பண்ணு.
மோகத்தில் செய்யும் முடிவு நம்மை
ஆபத்தில் கொண்டு சேர்க்கும்.
எம்மதமும் சம்மதம் என்றவன்
என்மதத்திற்கு மாறிடு என்றால்
அவன்மேல் எச்சில் உமிழ்ந்துவிடு.
பெற்றவர்களை விட்டு வா
பிள்ளை பெற்றெடுப்போம் என்பானை
பைத்தியம் என்று விலகு.
புருஷனை விட்டு வா என்பானை
போலீசில் பிடித்துக் கொடு.
பிள்ளையை விட்டு வா என்பவனை
போட்டுத் தள்ளிவிடு.
கௌரவக் கொலைக்கு வாய்ப்பிருந்தால்
காதலை கருணைக் கொலை புரிந்துவிடு.
ஆணுக்குக் கழிவென்றும்
பெண்ணுக்குக் கருவென்றும் விதித்த
இயற்கையின் சதி உணர்.
காதல் செய்யும் பெண்ணே
கவனமாகப் பண்ணு.

Sunday, February 1, 2015

ஆஹா வந்துருச்சு


Celebrating the receipt of Salary !!

ஆஹா... வந்திருச்சா? ஆசையில் ஓடிவந்தேன்..
பாலும் பழமும் தேவையில்ல.. தூக்கம் வர்ல
காசு இன்னும் எங்கணக்கில் ஏறவில்ல..
(ஆஹா வந்துருச்சா..)

கன்னத்தில் முத்தம் தரும் குட்டிப்பொண்ணு
அந்தக் குட்டிப்பொண்ணு பீஸை இன்னும் கட்டவில்ல
கன்னத்தில் முத்தம் தரும் குட்டிப்பொண்ணு
அந்தக் குட்டிப்பொண்ணு பீஸை இன்னும் கட்டவில்ல
EMI நெருங்க,
நெருங்க நெருங்க
அடுத்தது என்ன? மறந்து போச்சே..
ஹா….ங் ஞாபகம் வந்துருச்சு
போனுல பேலன்ஸ் இல்ல (ஆஹா வந்துருச்சா..)

கிழக்கே போகும் ரயிலுதான்
சென்னைக் கடற்கரை வரைதான் போகுமே
கிழக்கே போகும் ரயிலுதான்
சென்னைக் கடற்கரை வரைதான் போகுமே
வேறொரு ஊருக்கு மனைவிய
வெகேஷன் கூட்டிட்டுப் போகணுமே
குழந்தைகள் ஓட குதித்து ஆட
குடும்பத்தோடு மகிழ்ச்சி கூட
ஹா….ங்.................................
சேலரி வந்துருச்சு
இன்னிமே ஜாலிதானே !!!!!!

சேலரி வந்துருச்சு, வேலைக்கு ஓடி வந்தேன்
பாலும் பழமும் சாப்பிடுவேன் - சேதி சொல்லி
சொந்தங்களைக் கூட்டிவச்சி சோறிடுவேன் !!
சேலரி வந்துருச்சு, வேலைக்கு ஓடி வந்தேன்
சேலரி வந்துருச்சு, வேலைக்கு ஓடி வந்தேன்

பாடலின் ஒலிவடிவம் இங்கே:

https://app.box.com/s/ak606k8reoi658pjscurzeyl1o45qens

எரியும் பகலவன்

Remembering Muthukumar
உன் மரண சாசனத்தை
நகலெடுத்துக் கொடு என்றாயே
முத்துகுமரா-
எரியும் பகலவனை
நகலெடுக்க முடியுமா?
தமிழ் பேசும் உயிர்கள் பல வாடுதென்று
தமிழ் பேசும் உயிர்களில் ஒன்று
குறைந்துபோனதே...
ஆயினும்...
நீ விட்டுச் சென்ற உயிர்
தமிழ் பேசிக் கிடக்குதடா.
உன்னை வணங்கி
நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம்.
வீரர்கள் மரிக்கலாம். தோற்பதில்லை.