Friday, June 21, 2013

இப்படி இருந்திருந்தால்

என்னிரு கரங்கள் கால்களாகவே இருந்திருந்தால்
உணவினை வாயில் திணித்திருக்க மாட்டேன்.
என் முதுகெலும்பு வளைந்தே இருந்திருந்தால்
இன்றெனது தலைக்குனிவு இயல்பாய் இருந்திருக்கும்.
நானசைத்து ஆட வாலொன்று இருந்திருந்தால்
வாளசைக்கும் விளையாட்டு ஆடியிருக்க மாட்டேன்.
எனக்கறிவு என்றும் ஐந்தாகவே இருந்திருந்தால்
பகுத்தறிவால் பைத்தியம் ஆகியிருக்க மாட்டேன்.
விலங்காக மட்டும் நான் இருந்திருந்தால்
விளங்காத பொருளாய் உலகை மாற்றியிருக்கமாட்டேன்

Monday, June 17, 2013

மனம்

வெற்றுத் தாள், வெறும் பாண்டம்,
வெறும் சாதம், வெற்று மரம்...
வெறும் மூளை கூட உண்டாம்.
வெற்றிடமாய் உலகில் எத்தனை
இருந்தாலும்
வெற்று மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?
ஏதோ ஒன்று நிறைந்திருந்தாலும்
நிறைந்த மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?

Saturday, June 15, 2013

செருப்பு


மிதித்தாலும் உதைத்தாலும்
உன் காலின் கீழ்க் கிடக்கிறேன்.
நீ கழற்றி விட்டாலும்
உனக்காகக் காத்துக் கிடக்கிறேன்

உன் வழியே என் வழி....
மலத்தின் மீது நீ நடந்தால்
நாறிப் போவது நான்...

உனது அன்புத் தெய்வங்களுக்கு
ஆகாது என்பதால்
உன் பூசை அறையில்
நான் இடம் கேட்பதில்லை.
வீட்டுக்கு உள்ளேனும் வையேன்..
வெளியில் நாய்கள் தொல்லை.

Friday, June 7, 2013

மழைக் காதலி

குடையின்றி நிற்கும்போது
திடீரென-
உன் கல கல சிரிப்பில்
எனை முழுவதும் நனைத்துப் போனாய்.

என் முரட்டு மேனியிலும் மயில் தோகையென
சிலிர்த்துக் கொண்டன மயிர்க் கால்கள்.
நீ வந்து போன நெடுநேரம் கழித்தும்
மீசையின் மீது ஒட்டிக் கிடந்தது
உன் முத்தம்.

ஒட்டிப் போன ஆடையில் ஒட்டிக்கொண்டு
பிரிக்க விடாமல் ஏன் பிடிவாதம்...?

ஒரு வழியாய் உடல் துடைத்து
புதுத் துணி அணிந்த போது
உடல் முழுதும் பூசிக் கிடந்தது
உன் ஸ்பரிசத்தின் தூய்மை.