Thursday, May 26, 2011

அன்பருள் அமர்ந்தான்

கூப்பிய கரங்கள் கோபுரமாக
கும்பிடும் மனமே கோயிலுமாக
கூப்பிடும் குரலும் குறையின்றிக் கேட்க
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே
ஐங்கரன் இளையோன் பன்னிரு கரனே

( உள்ளத்தில் கோயில் கொண்ட
அழகு முருகன் பாடல் பாடி
தினமும் அவனின் பாதம் பணிவோம்
வேலாயுதா முருகா வினை தீர்க்கும் திருமுருகா )

காதினில் என்றும் கனிமொழி ஒலிக்க
நாவினில் என்றும் நல்லதே பிறக்க
தாயினைப் போல பரிந்துணவூட்ட
நோயினை நீக்கும் மருந்தொன்று காட்ட
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

நானிலம் எங்கும் நன்மைகள் கூட்ட
மானிட தருமங்கள் தடையின்றி ஆற்ற
மாலையில் நிலவினில் விழிமலர் மூட
காலையில் கதிரொளி கண்களில் காட்ட
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

 சாற்றிய மாலைகள் மார்பினில் ஆட
போற்றிடும் தாயவர் இருபுறம் கூட
வேலும் மயிலும் விரைந்திடத் துடிக்க
சேவலின் கொடியுடன் செங்கோல் நடத்த
அன்பருள் அமர்ந்தான் சங்கரன் மகனே

Thursday, May 19, 2011

காவடிகள் ஆடி வருகுதே

ஆடி மாதம் காவடிகள் ஆடி வருகுதே
ஆடிப் பாடிப் பரவசமாய் ஓடி வருகுதே
கோடி கோடிக் கால்கள் கோயில் தேடி வருகுதே - குமரன்
பக்தர் கூட்டம் குடும்பமாகக் கூடி வருகுதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)

பசும்பாலெடுத்துப் பழமெடுத்துப் படை நடக்குதே
திருநீறெடுத்து மேலுடுத்தி நடை நடக்குதே
பன்னீரோடு பூக்கள் பாலன் உடையுமாகுதே - பக்தர்
பாடல் கூட பாலனுக்குப் படையலாகுதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
சிங்கார வேலா செந்தூரின் பாலா
வண்ண வண்ணக் காவடிகள் ஆடுதப்பா
என்னப்பனே என் ஐயனே உனைக் கண்டாலே
பரவசமும் ஆக்குதப்பா

குருபராவென குவியும் கூட்டத்தில் குன்றும் மறையுதே
அரகராவென அழைக்கும் சத்தத்தில் அமைதி பிறக்குதே
அச்சம் பீதி பயங்கள் யாவும் விடைகொடுக்குதே - இனி
மிச்ச வாழ்வும் மகிழ்ச்சியாக விடை கிடைக்குதே
வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகனுக்கு அரகரோகரா
(ஆடி மாதம்)