Saturday, September 15, 2012

இயற்கையின் வெற்றி


நிகழ்ச்சியின் பெயர் திருமண வரவேற்பு.
நிகழ்ந்தது என்னவோ பெண்களின் அழகுப் போட்டி.
கணவர்களின் பொருளீட்டும் திறனைப்
பறைசாற்றும் நவநாகரிக நகைகள் ஒருபுறம்.
பிறந்தவீட்டின் பெருமையைப் போற்றும்
பாரம்பரிய நகைகள் ஒருபுறம்.
பரஸ்பர விசாரிப்புப் பேட்டிகளில்
ஒளிந்திருந்தன போட்டிகள்.
பட்டுப் புடவைகளில் நடந்தது - பார்டர் போர்.
ஜாக்கெட்டுகளிலும் ஜன்னல் போர்.
செயற்கைப் போர்களின் இறுதியில்
வென்றது என்னவோ இயற்கையே-
பெண்களின் கூந்தலில் சீருடையாய் மல்லிகை.

Tuesday, September 4, 2012

எலி உசுரு

எங்கள் ப்ளாக்-ல் கீழ்க்கண்ட பதிவில் வரும் குறும்படத்திற்கு நான் எழுதிய பாடல் வரிகள் இவை. பத்து நிமிடம் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பிறகு பாடலைப் படிக்கவும்
http://engalblog.blogspot.in/2012/06/blog-post_11.html
சந்தம்:
தன்னன்னான தானனன்னா
தானனன்னா தானனன்னா
தன்னன்னான தானனன்னா
தனனனான தானனன்னா

(வெயிலில் கால் மாற்றி நிற்கும் போது)
ஒத்தக்காலு கொக்கைப்போல
வெத்துக் காலில் காத்திருக்கேன்
பத்து ஊரு போறவரே
பசியும் ஆற வாருமையா

(இளைஞர்கள் போட்ட பாட்டிலிலிருந்து தண்ணீர் கீழே கொட்டும்போது)
என்னப்போல தள்ளாடித்தான்
தண்ணியெல்லாம் சிந்திப் போச்சோ
ரெண்டு சொட்டு நான் குடிக்க
தண்ணிக்குந்தான் தாகம் போச்சோ?

(உணவுப் பொட்டலம் எடுத்துகொண்டு வீட்டுக்கு நடந்து போகும்போது)
காத்துலயும் உசுர வச்சான்
சோத்துலயும் உசுர வச்சான்
கால்நடையா போகும் என்னை
மனுசனாக படைச்ச சாமி

(பூனைக்கு சாதம் வைக்கும் போது)
புருஷன் வெச்ச சோத்தினிலே
பூனைக்குந்தான் பங்கு வெச்சா
எங்க உசுரு பொழச்சதுபோல்
எலி உசுரும் பொழச்சதையா