Tuesday, March 8, 2016

மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"
வள்ளுவன் அன்று சொன்னது இன்றைக்கும் எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள்!

"தன்னைக் காத்துக்கொண்டு தான் அன்புகொண்ட அனைவரையும் காத்து, தனக்கு வாய்த்த நற்பெயரைக்காத்து(அ)சொன்ன சொல்லைக் காத்து சோர்வில்லாதவளே பெண்"
பழமை பண்பாட்டுப் போர்வைகளை நீக்கி இக்குறளின் பொருள் புரிந்துகொள்ளவேண்டும்.

குறிப்பாய் இக்குறளின் முதலிலும் கடைசியிலும் உள்ள கருத்துகளை இந்த மங்கையர்தினத்தில் நமது தோழியருக்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

*** தன்னைக் காத்தல் என்பது மிகவும் அவசியம். தியாகம் என்ற பெயரில் தம்மை வருத்திக்கொள்ளாமல் தங்களின் உடல் நலம், உள்ள நலம், பணி நலம், பண நலம் அனைத்திலும் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டும் ***

*** சோர்வில்லாதிருத்தல் என்று வள்ளுவன் சொல்வது உடற்சோர்வு கொள்ளாமல் உழைத்துக்கொட்டவேண்டும் என்பதல்ல. மகளிர் மனச்சோர்வு கொள்ளாமல் மகிழ்வுடன் இருக்கவேண்டும் என்பதே அவர் சொல்வது ***

எத்துயர் வரினும் எடுத்தெறிந்துவிட்டு இன்று பூத்த பூவென என்றும் புத்துணர்வுடன் பூவுலகில் நம் தோழியர் வாழ்கென வாழ்த்துகிறேன்.