Friday, January 27, 2017

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 35

சந்தம்: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

எங்கு மனங்கள் அச்சமின்றி
தலை நிமிர்ந்து நிற்குமோ
எங்கு பணத்தின் தேவையின்றி
யார்க்கும் கல்வி கிட்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு பூமி பூசல் கொண்டு
பிரிந்து நிற்கவில்லையோ
எங்கு நெஞ்சின் ஆழம்கண்டு
உண்மை வார்த்தை ஆகுதோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு மக்கள் முயற்சி நல்ல
மாற்றம் நோக்கிச் செல்லுமோ
எங்கு தெளிந்த எண்ண ஓடை
பாலை நிலங்கள் தாண்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

பரந்த எண்ணம் செயல்கள் எங்கு
சிந்தையைச் செலுத்துமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

Tagore’s English version:

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

Wednesday, January 11, 2017

பழைய பாய்லர்

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்கையில்
பரணில் பழைய பாய்லர் இருந்தது.
கரி போட்டு வெந்நீர் வைத்த
சிறுவயது நினைவுகள்
நெஞ்சினுள் புகையெழுப்பிக் கிளம்பின
போட்டுவிடலாமா என்று வீட்டில் கேட்டதற்கு
வேண்டாம் இருக்கட்டும் என்றேன்.

சிறுவயது நினைவுகளுடன்
எப்படி நம் காதல் நினைவுகள்
கலந்தன என்று தெரியவில்லை
பாய்லரைத் தொட்டு சூடு பார்த்த நினைவில்
உன் கன்னம் தொட்ட நினைவு வந்தது
குளித்துத் துடைத்த நினைப்பில்
உன் கண்ணீர் துடைத்த நினைவு வந்தது
துடைத்து பத்திரமாய்க் கட்டிவைத்தேன்.

உன் வீட்டுப் பரணிலும்
ஏதோ ஒரு பொருளில்
நம் காதல் ஒளிந்திருக்கக் கூடும்.
அதைப் போடாமல் வைத்திரு
அது இருப்பதால் ஒரு பயனும் இல்லாமல் இருக்கலாம்
அது இருக்கிறது என்ற பயனைத் தவிர

Friday, January 6, 2017

புத்தகத் திருவிழாவில் "பிள்ளைப்பா"

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் "யாமறி" தமிழ்க் குழும நண்பர்கள் பலரின் முயற்சியில் உருவான "பிள்ளைப்பா" மழலையர் பாடல்கள் (புத்தகம்+ஆடியோ CD) நான்கு அரங்குகளில் கிடைக்கும்.
1. பனுவல் (அரங்கு எண் : 471, 472)
2. நூலகம் பேசுகிறது (அரங்கு எண்: 409)
3. புதுகைத் தென்றல் (அரங்கு எண் : 82)
4. தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம் (அரங்கு எண் : 214)
இந்த முறை புத்தகச் சந்தை கழிவு விலையுடன் நமது கூடுதல் சலுகையையும் சேர்த்து 20% கழிவு விலையில்(ரூ 120/-) கிடைக்கும்.

"நேர்மறை எண்ணங்கள்; தாய் மண்ணின் வண்ணங்கள்" நம் மழலைகளுக்கு ஊட்டவேண்டும் என்பதே இந்த வெளியீட்டின் நோக்கம்.

25 பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதியின் சில பாடல் துளிகளை இங்கே கேட்கலாம்.