Thursday, March 30, 2017

செவ்வந்தி மாலை இதோ

சாய்ந்த உன் முகம் பார்த்து
சட்டென்று தலை கவிழும்...
பாய்ந்த உன் நகை பார்த்து
பட்டென்று சிரிப்பு வரும்...

காற்றினில் பூ கட்டும்
கைவிரல் அசைவினுடன்
நீ பேசிய கதைகளெல்லாம்
நெஞ்சத்தில் கோத்துவைத்தேன்

சில பல நாட்களாக
செய்தி ஒன்றும் காணவில்லை..

செவ்வந்தி மாலை இதோ...
சீக்கிரமாய் அழைத்திடடி - உன்
செஞ்சேலைப் படம் ஒன்றை
செல்போனில் திறந்து வைத்தேன்...
கன்னத்தில் முத்தமிட்டு நீ பேச

Monday, March 20, 2017

இளைஞர்களின் கை கோருங்கள்

இளைஞர்களின் கை கோருங்கள்
அவர்கள் களைப்படைந்து ஓய்வது இல்லை
பெருமைகளைப் பேசிப் பாருங்கள் அவர்கள் புகழுரையை நாடுவதில்லை

நெல்லை மென்று தின்னும் மனம் இல்லாதவர்
நில்லாமல் பேசும் நாட்டம் துளியும் அற்றவர்
கொல்லை வழியில் நுழைந்து ஒட்டும் தன்மையற்றவர்
தொல்லையற்ற வாழ்வை விரும்பும் விரதம் ஏற்றவர்
அல்லல்படும் பெரியவரே அஞ்சாதீர்கள்
எல்லாமே அவர் அறிவார் தள்ளி நில்லுங்கள்
ஆளுகின்ற உரிமை அவர்க்குத் தந்து செல்லுங்கள்
அமைதி இந்த உலகில் திரும்பும் வந்து பாருங்கள்

(பாடல் மெட்டு: இறைவனிடம் கையேந்துங்கள்)

Friday, March 17, 2017

நிறைவேறாத கனவுகளும்
நிறைவேற்றாத கடமைகளும்
ஊஞ்சலாட்ட மகிழ்கிறேன்!

Thursday, March 16, 2017

செல்லாதே நில்லுடா கண்ணு


பச்சை நிற விளக்கு மறைந்தபின்னாலும்
பத்து வண்டி கடந்திருக்கு
பச்சை நிற விளக்கு மறைந்தபின்னாலும்
பத்து வண்டி கடந்திருக்கு
தினம் பத்து உயிர் போகுது ஒஒஒஓ
தெரு ரத்தக்கறை ஆகுது ஒஒஒஓ
பள்ளிக்கு மழலையர்
தள்ளாடும் முதியவர்
கடந்திடும் சாலையடா
விதிகளை மதித்திடடா

வராது போனா உயிரு
ஒரே உயிர் தான்டா இருக்கு
செல்லாதே நில்லுடா கண்ணு
சமிக்ஞையில் இருக்கட்டும் கண்ணு

(பாடல் மெட்டு: வராக நதிக்கரை ஓரம்)

#சாலைவிதிகளைமதிப்போம்

Thursday, March 9, 2017

வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்யாதே

கானா பாலா குரலில் கற்பனை செய்து எழுதினேன். தேவையான வரிகளை திரைப்படம் / குறும்படத்தில் பயன்படுத்தலாம்.

-------------

வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்யாதே - நீ
அட்டிகை செஞ்சி வட்டிக்கு வைக்காதே

சீட்டுக்குப் பாதி கொடுத்து
சேட்டுக்குப் பாதி கொடுத்து
வீட்டுக்குக் கொண்டு போகாதே வெறுங்கை நீ
விழுந்துடுவ ஏறாதே முருங்கை

மானியமா கொடுப்பான்?
சூனியமா கெடுப்பான்
மாட்டிக்கிட்டு முழிச்சி நிக்காதே நீ
முழிச்சிக்கடா மாட்டிக்கிடாதே

வெத்தலை பாக்கு கொடுப்பான்
பத்தலையான்னும் கேப்பான் - அப்புறம்
நடுத்தெருவில் நியாயம் பேசுவான் - உன்னையும்
நாலு பேரு முன்னாடி ஏசுவான்

எழுதப் படிக்க வேணாம்
கணக்கு மட்டும் போடு
கழுதை கூட கணக்கு போடும்டா - அதுவும்
எடையைப் பார்த்து பொதியைச் சுமக்கும்டா

மணலில் கோட்டை கட்டும்
குழந்தை கூட அறியும்
மழையில் மணலும் கரைந்து போகுமடா - பெரும்
கடனில் வரவு தொலைந்து போகுமடா

வளையல் கழட்டிக் கொடுத்தா
கம்மலைக் கழட்டிக் கொடுத்தா
மஞ்சக் கிழங்க மாட்டிட்டுக் கிடக்கா- நகைய
மொதல்ல போயி மீட்டுட்டு வாடா

Wednesday, March 8, 2017

சுட்டுப் போட்டபோதும்


படகெடுத்துப் போனான் ஐயோ விடை கொடுத்துப் போனான்
வலை எடுத்துப் போனான் ஐயோ விலை கொடுத்துப் போனான்
மீனைத் தேடிப் போனான் ஐயோ ஊனை விட்டுப் போனான்
ஊரை விட்டுப் போனான் ஐயோ உலகை விட்டுப் போனான்
கதவு எதுவும் இல்லை ஐயோ கடலில் மதிலும் இல்லை
எல்லை மீறல் என்றான் ஐயோ இலங்கைக் காரன் சுட்டான்
நமது நாட்டின் படைகள் ஐயோ நமக்குக் காவல் இல்லை
நமது மந்திரிமார்கள் ஐயோ மதியில் நாமும் இல்லை
நிம்மதியா வாழ ஐயோ தமிழர் விதியில் இல்லை
எழவு பாட்டுப் பாடி ஐயோ எதுவும் மாற வில்லை
சுட்டுப் போட்டபோதும் ஐயோ சொரணை வருவதில்லை

Tuesday, March 7, 2017

எழுவாய் எரிகின்ற நிலவாய்

We for We தன்னார்வ அமைப்பிற்காக பிரபல பின்னணிப் பாடகி அனுபமா கிருஷ்ணசாமி அவர்கள் ஆங்கிலப் பாடல் ஒன்றை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார். ( பாடலைக் கேட்க: https://soundcloud.com/chandralekhaa68/01-woman-theme-song-english )

இப்பாடலுக்குத் தமிழ் வடிவம் கொடுக்க அவர் விரும்பியபோது, தோழர் ராஜராஜன் அவர்கள் செய்த அறிமுகத்தால் கீழ்க்கண்ட வரிகளை எழுதினேன். மகளிர் தினத்தில் இவ்வரிகளை அரங்கேற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

எழுவாய் எரிகின்ற நிலவாய்
மொழிவாய் அதிரட்டும் முரசாய்
பெண்ணே நீ போரிட வா
வானும் மண்ணும் வெல்ல வா
உன்னோடு மோதிடுமா எந்த மலையும்?
சிறகை விரித்து வா

பெண்ணே உன் கனவென்ன?
கைவரும் பெரு வெற்றியே
வானமும் வெகுதூரமில்லை
சிகரம் பார் உன் சிறகை விரி

வா பெண்ணே வா
வா பெண்ணே வா
வா பெண்ணே வா

மின்னல் பிறக்கும் ஒளியாய் கண்கள்
ஜன்னல் திறந்த வெளியாய் எண்ணம்
உன்னுள்ளே தேடி எடு
உன்பேரும் கேட்கும் தனியே
உள்ளதை நீயும் கொடு
எந்த நொடியும் இனிக்கும் இனிமேல்

பெண்ணே உன் கனவென்ன?
கைவரும் பெரு வெற்றியே
வானமும் வெகுதூரமில்லை
சிகரம் பார் உன் சிறகை விரி

வா பெண்ணே வா
வா பெண்ணே வா
வா பெண்ணே வா

அவளும் பயிரும்


நட்ட விரல் நழுவிவிட
வேரை மண்ணு பிடிச்சிக்கிடும்
பொட்டச்சி நட்ட நாத்து
பொல பொலன்னு வளந்து நிக்கும்

கண்ணில் பட வேணுமின்னு
களைகளெல்லாம் தல தூக்கும்
கைப்பற்றி அவ இழுக்க
கெழங்கோட கழன்று வரும்

வரப்பு மேல அவ நடந்தா
கால்களுக்கு விசிறி விடும்
அறுத்த கதிரில் கால் பட்டா
கொலுசுபோல சிலுசிலுக்கும்

நெல்லு குத்தி அவ புடைச்சா
நித்திலமா பல்லிளிக்கும்
பானையிலே வடிச்ச சோறு
பூவப்போல வாசம் வீசும்

------------

அனைவருக்கும் முன்கூட்டிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்