Tuesday, June 20, 2017

எங்கிருந்தோ வந்த மழை

எங்கிருந்தோ வந்த மழை என் மண்ணில் வாசம் கூட்டும்
எங்கிருந்தோ வந்த மழை என் பயிரில் பாசம் காட்டும்
எங்கிருந்தோ வந்த மழை என் மரத்தில் கனிரசமாகும்
எங்கிருந்தோ வந்த மழை என் மனதைப் பரவசமாக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் குளத்தில் மீன் வளர்க்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் மலரில் தேன் நிறைக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் முதுகில் சேறடிக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் அழுக்கைக் கழுவி நீக்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் அழுகை கரைத்து நீர்க்கும்
எங்கிருந்தோ வந்த மழை என் கவிதை வரிகள் சேர்க்கும்

Wednesday, June 7, 2017

ஏண்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு?

ஏண்டியம்மா இதயத்துல மூடியிருக்கு கதவு?
எப்பொழுதும் நானும் வர திறந்து நீயும் உதவு

சத்திரமா இதயம் உனக்கு? போய்விடு நீ தொலைவு
சத்தியமா பிடிக்கவில்லை ஒழிஞ்சி நீயும் உதவு

பத்தியம்தான் இருந்து பார்த்தேன் தெளியவில்லை பித்து
கட்டிப்பிடி நானும் தாரேன் கன்னத்தில முத்து

முத்து தர நீயும் வந்தா நான் விடுவேன் குத்து
குத்து மதிப்பாக உனக்கு எவ்வளவிருக்கு சொத்து?

சோத்துக்கொரு குறையுமில்லை வளந்துநிக்குது நாத்து
போத்திக்கிட்டுப் படுத்து உறங்க கூரை மேல கீத்து

தின்னுவிட்டு தூங்குவதில் பெருமை என்ன இருக்கு?
சொல்லிக்கொள்ள பெருமையாக வேறு என்ன இருக்கு?

அள்ளி அள்ளி சரம் சரமா நான் படிப்பேன் பாட்டு
துள்ளித் துள்ளி குதிக்கப் போற நீயும் அதைக் கேட்டு

பாட்டுக்காரன் வாய் திறந்தா புறப்படுமே பொய்யி
வீட்டுக்காரனாக வந்தா கரையுமே என் மையி

தாலாட்டு நான் படிச்சா சொக்கிப் போகும் கண்ணு
தூங்குகிற கண்ணுல மையி கரையுமாடி கண்ணு?

நல்லாத்தான் விளக்கம் தாரே நடு வீதியில நின்னு
அத்தையைத்தான் கூட்டி வந்து வீட்டுல கேளு பொண்ணு

(...... வெட்கத்துடன் ஓடிப்போகிறாள் )

Tuesday, June 6, 2017

கீதாஞ்சலி - பாரதி பாணியில் : பாடல்கள் 39, 40



(39)
சந்தம் : ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

இதயம் இறுகிப் பாலையாகக் காயும் போதிலே
அதனைக் கருணை மழையில் நனைக்க இறைவ நீயும் வா

நளினம் எந்தன் வாழ்வை விட்டு நீங்கும்போதிலே
பொழியும் இனிய கீதம் கொண்டு இறைவ நீயும்வா 

பணியின் சுமைகள் சூழ்ந்து ஓசை எழுப்பும் போதிலே
ததும்பும் அமைதி அரும்ப எந்தன் அருகில் நீயும் வா

குறுகி எந்தன் வறிய இதயம் முடங்கும் போதிலே
மடைகள் உடைத்து மன்னன்போல மிளிர்ந்து நீயும் வா

ஆசை எந்தன் கண்ணிரண்டை மறைக்கும் போதிலே 
இடிகள் மின்னல் எழுப்பிக்கொண்டு இறைவ நீயும் வா

Tagore’s English version: 
When the heart is hard and parched up, come upon me with a shower of mercy.
When grace is lost from life, come with a burst of song.
When tumultuous work raises its din on all sides shutting me out from beyond,
come to me, my lord of silence, with thy peace and rest.
When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my king,
and come with the ceremony of a king.
When desire blinds the mind with delusion and dust, O thou holy one, thou wakeful,
come with thy light and thy thunder. 

(40) 

சந்தம்:  ஆசை   முகம்   மறந்து   போச்சே 

நாட்கள்   நகர்ந்து   செல்லலாச்சே   நெஞ்சம் 
பாலை   நிலம்   போல்   சுடலாச்சே 
நீண்டு   திறந்த   அடிவானம்   எங்கும் 
ஈர   முகில்கள்   ஒன்றும்   காணேன் 

வீசியடிக்கும்   புயல்   செய்தே  -  விண்ணை 
அதிரவைக்கும்   மின்னல்  தந்தே 
உயிரை   உருக்கும்   ஊமை  வேனில்  -   அதை 
விரைவில்   அகற்றிவிடு   தேவா 

கோபம்  பொழியுந்   தந்தை  முன்னே  -  அன்னை 
குனிந்த  விழி  திரளும்  நீர்  போல் 
வானிலிருந்து  அருள்  மேகம்  -  அதைத்   
தாழ்ந்து  தவழவிடு  தேவா 

Tagore’s English version: 
The rain has held back for days and days, my God, in my arid heart.
The horizon is fiercely naked—not the thinnest cover of a soft cloud,
not the vaguest hint of a distant cool shower.
Send thy angry storm, dark with death, if it is thy wish,
and with lashes of lightning startle the sky from end to end.
But call back, my lord, call back this pervading silent heat,
still and keen and cruel, burning the heart with dire despair.
Let the cloud of grace bend low from above like the tearful look of the mother on the day of the father’s wrath