Saturday, March 29, 2014

பலகுரல் கண்ணன்

மகனின் பள்ளியில் இன்று பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. "சீக்கிரம் கிளம்புங்கள்" என்று கண்ணனை விரட்டினாள் கண்மணி. முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் இது தேவையா என்ற ஒரு அலட்சிய எண்ணம் கண்ணனுக்கு. கண்மணிக்கோ தன் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குச் செல்வது போன்ற ஒரு பதட்டம்.

வழக்கப்படி தன் பலகுரல் பேசும் திறமையினால் கண்மணியை இலகுவாக்க முயற்சித்தான் கண்ணன். நடிகர் சூர்யாவின் குரலில் "அட.. ஏன் கண்மணி இப்படி பதட்டப்படுற..." என்றவனிடம்.."குரல் எல்லாம் பரவாயில்லை.. ஆனால் கண்ணாடி பார்த்தால் இது மாதிரி உங்களுக்குப் பேசத் தோன்றாது.. மனசாட்சி உறுத்துமில்ல.." என்று கிண்டல் செய்தாள் கண்மணி.

அது சரி. ‘/மனைவியைச் சமாதானப் படுத்த முயற்சிக்கும் எந்தக் கணவனுக்கும் சமாதானம் உண்டானதில்லை/’ என்ற உலக நீதி தனக்கு மட்டும் பொய்த்துவிடுமா என்ன? - என்று பெருமூச்சு விட்டபடி மகிழ்வுந்தைக் கிளப்பினான்.

"இல்லைங்க.. இந்த தேன்மொழி ஆசிரியை இருக்காங்களே.. அவங்க கொஞ்சம் மோசம்.. போன சந்திப்பில் இலக்கியா அம்மா கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா..?" "இலக்கியா அம்மா .. நீங்க தொலைக்காட்சியில் நெடுந்தொடர் தவறாமா பாக்குற அளவுக்கு உங்க மகளோட வீட்டுக் குறிப்பைப் பாக்குறதில்லை.." அப்படின்னு சொன்னாங்களாம். இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம் இல்லையா...?"

'இருக்குறதத்தானச் சொல்றாங்க' என்று லியோனி குரலில் எண்ணினாலும் "அவங்களச் சொன்னாங்க என்பதற்காக நீ பதட்டப்படாத கண்மணி... உன்னைப் பார்த்தா நெடுந்தொடர் பார்த்து வீணாய்ப் பொழுது போக்கும் வேடிக்கை மனிதி போலவா இருக்கு? ஒரு பெரிய அதிகாரி மாதிரி இல்ல இருக்க நீ...." என்று பனி பொழிந்தான்! 'அட உள்ளே ஒரு குரல்ல பேசிக்கிட்டு வெளியில ஒரு குரல்ல பேசுறோமே.. உண்மையிலேயே நாம ஒரு பல குரல் மன்னன்தான்' என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான்.

எதிர்பார்த்ததுபோல் எந்தச் சிக்கலுமின்றி ஆசிரியை சந்திப்பு நன்றாகவே அமைந்தது. புலிக்குப் பிறந்த புலிக்குட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். கையொப்பம் போட்டுவிட்டு எழும் தருணத்தில் கண்மணி கேட்டாள் "மற்றபடி…. பையன் ஒழுங்காகத் தானே இருக்கிறான்.. மற்ற குழந்தைகளுடன் சண்டை போடுவதெல்லாம் கிடையாதல்லவா..?" "சண்டையெல்லாம் போடுவதில்லை….. ஆனால்…… பேச்சுதான்…. கொஞ்சம்….. அதிகம்...." என்று இழுத்தார் தேன்மொழி. ஆசிரியை தயங்குவதைப் பார்த்த கண்மணி "குழந்தையைக் கூட்டிட்டுக் கொஞ்சம் போங்க. நான் பேசிட்டு வரேன்.." எனவும் மெதுவாய் வெளியேறினான் கண்ணன்.

குழந்தைகளின் கூச்சலுக்கு நடுவிலும் மனைவியிடம் பேசும் தேன்மொழியின் குரல் தெளிவாகக் கேட்டது... "உங்கப் பையன் என்கிட்டே,,,நீங்க அழகா இருக்கீங்க…. நான் பெருசா ஆனதும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறாங்க..." " அடப்பாவி… அப்படியா சொன்னான்..? தொலைகாட்சி பார்த்து இப்படியெல்லாம் பேசுகிறான் போல.. நான் அவனைக் கண்டிக்கிறேன்" என்று எழுந்த கண்மணி முந்தியை இழுத்து விட்டபடி வெளியே வந்தாள்..

எதுவும் தெரியாதவன்போல்.. "என்ன சொன்னாங்க கண்மணி…?” என்ற கண்ணன் "இதோ இரு..வண்டியைத் திருப்பிட்டு வரேன்..போயிட்டே பேசலாம்….." என்றான். புலிக்குட்டியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட பலகுரல் கண்ணனின் இன்னொரு குரல் மனதுக்குள் பேசியது "புலிக்குட்டி சொல்லிடிச்சு... புலியால சொல்ல முடியலையே.."

மலர்

மலர் கொய்து கூடையில்
நிரப்பியவள் சூடிவந்தாள்
மலர்ச்சியை

Monday, March 17, 2014

ஹோலி

நீ கண்ணுக்கிட்ட மையொன்றே போதுமடி
நான் கருப்பு வெள்ளையில்
ஹோலிப் பண்டிகை கொண்டாட....
இருந்தாலும்......
"இந்தா வைத்துக்கொள் வண்ணங்கள்"
என்று தானோ
வானவில் காட்டினாய்
தலைதுவட்டி நீ உதறும்
வாசம் சுமந்த நீர்த்துளிகளில்?