Wednesday, August 30, 2017

அமைதிச்சோலை அகிலமாக

மிருக மனதை மிருதுவாக்கும்
மதங்கள் யாவும் புனிதமே
மனித மனதில் மனிதம் வளர்க்கும்
வரிகள் யாவும் வேதமே

தேசம் யாவும் கூடிவாழ
நேசபூமி உதயமே
கடவுள் யாவும் கூடிப்பேச
மதங்கள் யாவும் சொந்தமே

தெய்வ சிந்தை செய்யும் யாரும்
மனித சிந்தை மறப்பதோ?
தெய்வ நிந்தை செய்யும் யாரும்
மனித நிந்தை புரிவதோ?

பகைமை உணர்வு மறையும்போது
கரைகள் இரண்டும் பசுமையே
அமைதிச்சோலை அகிலமாக
மதங்கள் நதிகள் ஆகுமே

Tuesday, August 8, 2017

சபரியின் ஆலயமே

சபரியின் ஆலயமே என்றும்
சாமிகள் சரணாலயம்
சரணங்கள் ஆயிரமே எங்கள்
நாவினில் பாராயணம்
ஹரிஹர புத்திரனே எங்கள்
விழிகளில் அருணோதயம்
அரணெனக் காத்திடுவான் ஐயன்
அருள் தரும் கருணாமிர்தம்

நோன்புகள் நாமிருந்தோம் ஐயன்
மாண்பினைப் பாடிவந்தோம்
தேனடை ஈக்களென ஐயன்
கோயிலை நாடி வந்தோம்
வானுயர் ஜோதி கண்டோம் நெஞ்சில்
காரிருள் நீங்கக் கண்டோம்
கானுறை கோயிலிலே எங்கள்
ஊனுறை உயிரும் கண்டோம்