Friday, December 5, 2014

காத்திருந்த கிளி


மாமனுக்குக் காத்திருக்கும் மான்விழியாள் பாடுவது:


நீள விழி பூத்திருக்கேன்
நித்திரையைத் தோத்திருக்கேன்
சேர்த்து வச்சிப் பார்த்திருக்கேன்
சித்திரைக்குக் காத்திருக்கேன்
மாமன் நெனப்பு பாவி மனசில்
குந்திவிட்டதே
காமனும் விட்ட அம்பு இவளக்
குத்திவிட்டதே ( நீள விழி பூத்திருக்கேன்)

மாமா என் மாமா
மீசை வெச்ச மாமா
ஆசையைத்தான் காட்டிவிட்டு
மோசம் செய்யலாமா?
அல்லும் பகல் உன்னை நெனச்சி
ஏங்க வைக்கலாமா?
என்னை நீயும் தவிக்கவிட்டு
இப்டி பண்ணலாமா? (நீள விழி பூத்திருக்கேன்)

வீராதி வீரா
ஊருக்குள்ள தேரா?
வீட்டுக்குள்ள அத்தையைச் சுத்தும்
ஆட்டுக்குட்டி நீரா?
பின்னியும்தான் பூமுடிச்சேன்
என்னைச் சுத்தி வாய்யா
பின்னாளில் சாய்ஞ்சுகொள்ள
என்னைத் தாரேன் வாய்யா (நீள விழி பூத்திருக்கேன்)

Thursday, December 4, 2014

பாரதியின் குயில்பாட்டு

பாரதியின் குயில்பாட்டில் குயிலானது தனது காதலனாகிய குரங்கினை மனிதனுடன் ஒப்பிட்டுப் புகழும் கீழ்க்கண்ட வரிகள் மிகவும் அழகு!

வானரர் தம் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர் போலாவரோ?
வாலுக்குப் போவதெங்கே?!!

பாரதியின் பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை. பாரதி, வானரத்தை மனிதனுடன் ஒப்பிட்டு அதன் மேன்மைகளை இப்பாடலில் புகழ்ந்திருப்பதில் உள்ள நகைச்சுவையையும் உண்மையையும் நீங்களும் இரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே வெறும் விளக்க உரையாக இல்லாமல் இந்தப் பாடலை ஒருசில கண்ணோட்டங்களில் பொருத்தி என் கருத்துகளை இங்கு பகிர்கிறேன்.

விளையாட்டு / சாகசம்:
//கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்//
நாம் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்றெல்லாம் விளையாட்டு மற்றும் சாகசங்கள் செய்வதெல்லாம் வானரம் போன்ற விலங்குகளைப் பார்த்தெழும் உந்துதலால்தானே? குரங்கிலிருந்தான நம் பரிணாம வளர்ச்சியிலும் சாகச உணர்வு நமக்கு ஒட்டிவந்திருக்கவேண்டும். மாணவர் தேசியப் படையில்(NCC) இருந்தபோது மரங்களுக்கு இடையில் கட்டிய கயிற்றுப் பாலத்தில் நடந்து சென்றது, தொங்கும் கயிறைப் பிடித்து தண்ணீரைத் தாண்டியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்படித் தாண்டும்போது தண்ணீர்த்தொட்டியில் முழங்காலைத் தட்டிக்கொண்டதும் தான் !! அம்மாடி…என்ன ஒரு வலி..?

காதல் / ஊக்கம் / ஆன்மிகம்:
இந்தப் பாடலைத் தத்துவரீதியாய்க் கொஞ்சம் பார்ப்போம்.
தலைவியானவள் தலைவனை இந்தக் குயிலினைப் போல் புகழ்ந்தால் எந்தத் தலைவன்தான் குரங்கினைப்போல் வாலைச் சுருட்டிக் கிடக்கமாட்டான்?! ஹ்ம்ம்..( புகழ்கிறார்களா என்று தெரியாது.. ஆனால் புகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!! நன்றி கமல்!!)
அனுமனுக்கு அவன் பலம் மற்றவர் சொல்லித்தான் புரிந்தது. வானர வழித்தோன்றல்களான நமக்கும் பிறர் சொல்லும் ஊக்கவார்த்தைகள் நம் பலத்தை நமக்குக் காட்டவும், வளர்க்கவும் உதவும் என்று கருதுகிறேன்.

புவியின் மீது மனிதனின் ஆதிக்கம்:
"காக்கை, குருவி எங்கள் ஜாதி" "உயிர்களிடத்து அன்பு வேணும்" என்றெலாம் எழுதிய பாரதி, வானரத்தைப் புகழ்ந்து எழுதியதில் வியப்பொன்றும் இல்லை. பிற உயிர்களின் மீதும், இயற்கையின் மீதும் நாம் பரிவு கொள்ள வேண்டும் என்பது ஒரு விழைவாக மட்டும் இன்று இல்லை. புவியில் மனித இனம் பிழைத்திருக்கவேண்டுமாயின் இயற்கையின் மீது மனிதன் கவனம் கொள்வதென்பது அவசியத் தேவையுமாகிவிட்டது. புவியை மனிதன் சொந்தம் கொண்டாடுவதையும் அவனின் ஆதிக்க உணர்வையும் தகர்த்துப் பரிகசிக்கிறது இந்தப் பாடல்.

"மூளை என்னும் ஊளைச்சதை கொஞ்சம் அதிகம் இருக்கிறது என்பதற்காக, மனிதா நீ அலட்டிக் கொள்ளாதே" என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லிவிடுகிறான் பாரதி!!

Tuesday, December 2, 2014

மாங்குயிலே பூங்குயிலே - ஆங்கிலமாக்கம்


image source: internet

Hey you Cuckoo
Here you look
Tell me when I ask
Why is our marriage date
Getting very late?
You are like an Idol
I am circling, I’m not idle


இந்த மான் எந்தன் சொந்த மான் – ஆங்கிலமாக்கம்


image source: internet

This deer
My own dear
Oh.. have no fear
Baby, come here
You look at me, then, I catch fire
You are a live wire
I run like a tyre and come near
To take you dear..
It’s happy New Year.. hey hey
It’s a happy New Year

Wednesday, November 26, 2014

நல்வரவு - சிறுகதை


"மாதவி போலாமா?" கார் சாவியைச் சுழற்றியபடி கண்ணன் கேட்டான்.

கணினியை அணைத்துவிட்டு மாதவி கிளம்பினாள். இன்று மாலை கண்ணன் வீட்டில் உணவருந்த அழைத்திருந்தான். வழக்கமான ஹாஸ்டல் உணவுக்கு ஒரு நாள் விடுதலை என்றால் எந்த ஒரு தனி-மனுஷி தான் வேண்டாம் என்பாள்? "தனி ஒரு மனுஷிக்கு உணவில்லை எனில் இஜ்ஜகத்தினை.............." சரி விட்டுவிடுவோம்..ஓவர் பில்ட் அப் வேண்டாம்.

கண்ணன் வீட்டைத் திறக்கவே மாதவி கேட்டாள் "கண்மணி இன்னும் அவங்க அலுவலகத்திலிருந்து வரவில்லையா?"

"இல்லை மாதவி. அவங்க அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்ததாம். அவள் நேரே அங்கே போய்விட்டாள். நீங்க மாதவி டின்னரை கேன்சல் பண்ணாதீங்க. மீன் குழம்பு பண்ணி வச்சிருக்கேன், இட்லி மட்டும் ஊத்திவச்சிடுங்கன்னு சொன்னா... உன்கிட்ட சொன்னா நீ வராம இருந்திடப்போறன்னு சொல்லல..."

"அடடா..." என்று உள்ளே வந்தவளைச் சுவரில் மாட்டியிருந்த 'நல்வரவு' என்ற எழுத்துகள் வரவேற்றன. "இந்த வரவேற்பு எம்ப்ராய்டரி ரொம்ப அழகா இருக்கு கண்ணன்" என்றாள். "இது கண்மணியே போட்டது. அவர்களின் பக்கத்து வீட்டு அத்தையிடம் கற்றுக்கொண்டாளாம்" என்றான் கண்ணன்.

“Welcome என்று ஆங்கிலத்தில் சொல்வதை 'நல்வரவு' என்று தமிழில் மாற்றும் போது பொருள் எவ்வளவு அழகாக மாறிவிடுகிறது? யாரேனும் தீய மனிதர்கள், ஏன் துஷ்ட தேவதைகள் வீட்டுக்குள் வந்தாலும் "நல்வரவு" என்பதைப் பார்த்துவிட்டு நல்லது மட்டும்தானே செய்யத்தோன்றும்?” என்று தமிழின் பெருமையைத் தனக்குள்ளாகவே சிலாகித்துக் கொண்டாள் மாதவி.

சோபாவில் அமர்ந்து கண்ணன்-கண்மணி திருமண ஆல்பத்தில் தனது முகம் எங்கெங்கு தெரிகிறது என்று தேடுகையில் கண்ணன் கொண்டு வந்த காபியைச் சுவைத்தாள். "காபி பிரமாதமாக இருக்கிறது.." என்றவளிடம் "நான் வெறுமனே பாலை மட்டும்தானே கலக்கினேன்.. கண்மணி போட்டுவைத்த பில்டர் டிகாக்ஷனின் சுவை இது" என்று சொல்ல நினைத்தவன் வெறுமனே "தேங்க் யூ" என்றான்.

"சரி நீ ஆல்பம் பார்த்திட்டிரு நான் உணவு தயார் பண்ணிவிடுகிறேன்..." என்று திரும்பிய கண்ணனை மாதவி நிறுத்தினாள். "கண்ணன், நான் இன்னொரு நாள் சாப்பிட வருகிறேன். நீங்க கண்மணிக்கு போன் பண்ணி அவங்க அத்தைக்கு எப்படி இருக்குன்னு பாருங்க.. நான் இப்பவே கிளம்புனா ஆட்டோல பத்து நிமிஷத்துல PVR போயிடலாம்"

“PVR ஆ?"
“ஆமாம். நீங்க சமையலறையில் இருக்கும்போது பிரண்ட் போன் பண்ணினா.. டிக்கட் எடுக்கச் சொல்லிட்டேன்"

“என்ன படம்?”
“நல்வரவு”

Thursday, October 23, 2014

ராஜகீதம் - கீரவாணி

இன்று நான் கேட்டு ரசித்த பாடல் 'பாடும் பறவைகள்' படத்திலிருந்து 'கீரவாணி'

கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ...
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி

க ரி ச ப ம க ப நி ....
ச ரி க ரி க ச நி ப ...
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி....
தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்

1. முதல் interlude-ல் வரும் வயலின் இழைப்பு வேறு எந்தப்பாடலிலும் இல்லாத பிரமாதம்

2. அதே interlude-ல் ஸ்வரம் சொல்கையில் ச ரி க ரி க ச//// நி ப//// என்று சொல்லிவிட்டு ////நீ பா////ர்த்ததால் என்று சரணத்தைத் துவக்குவது அதி அற்புதம். ராஜா/வைரமுத்து சிந்தனை.

Sunday, October 19, 2014

புரட்டாசி - லிமரிக்

புரட்டாசி முடிஞ்சி போச்சி
தைரியமா சாப்பிடலாம் கவுச்சி
அறுத்துத் தொங்குது அங்க ஆடு
வறுத்து வை ஆங்க்ரி பேர்டு
இந்தச் சேவலா காலைல கூவிச்சி?

Sunday, August 3, 2014

அத்தே.. அத்தே..

ஞாயிற்றுக் கிழமை மதியம்....

ஆடிமாதம் புதுமனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு வார இறுதியில்கூட மாமியார் வீட்டு விருந்து சாப்பிட முடியாமல் தனிமையில் தவிக்கும் நம் கதாநாயகன் பாடும் பாடல் வரிகள் இவை...

அத்தே அத்தே அத்தே சோறாச்சோ...?
அத்தே அத்தே அத்தே கொழம்பாச்சோ...?
மீன் சட்டிக்குள்ளாற
மீன் நீந்தித்தான் போச்சோ..?
அத்தே பிரியாணி புலவும்தான் செஞ்சீங்களா?
அந்தத் தொடகறியும் தொக்காட்டம் பண்ணீங்களா?
அதப் பல நாளாப் பாக்காம
பல்தேச்சும் பலனில்ல
பசியோடு கெடக்கேனே நானே.. நானே...


GV தம்பி இந்தப் பல்லவியை OK பண்ணுவாருன்னு தான் நெனக்கிறேன்.

அப்படியே டைரக்டருக்கும் ஒரு scene suggestion சொல்லிடணும்...
"ஹீரோ இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டே பாய் கடை பிரியாணியாவது பார்சல் வாங்கிவரலாம்னு தெருவில் நடந்து போறாரு.. பாட்டு முடியும்போது அங்காளம்மன் கோயில் வருது.. அங்கு ஒரு அக்கா ஆடி மாசம் கூழு ஊத்துறாங்க.. 'தம்பி இந்தாப்பா'ன்னு கொடுக்கவே மறுக்க முடியாம ஒரு டம்ளர் குடிக்கிறாரு. உடம்புக்குக் "குளிர்ச்சிப்பா"ன்னு சொல்லவே மேலும் இரண்டு மூன்று டம்ளர் வாங்கிக் குடித்துவிட்டு ஏப்பம் விடுகிறார்.. இதோடு லஞ்ச் போதும்னு மீசையில் ஒட்டிய கூழை நாவால் ஹீரோ வழிக்கும்போது அப்படியே காமிரா ஜூம் ஆகிறது.."

Wednesday, June 11, 2014

தாரை தப்பட்டை

இசைஞானி இளையராஜா அவர்களின் 1000-ஆவது படமான "தாரை தப்பட்டை" படத்திற்கு நான் எழுதிய Title Song-ஐ (கற்பனை தாங்க!) உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன்
---------------------------------------------------------

தாரை தப்பட்டை ஆதியில் தமிழனின் நாதமடா
தாரை தப்பட்டை ஜாதிகள் மீறிய வேதமடா
தாரையும் இழுத்திடும் மூச்சானதோ
பறைதான் இதயத்தின் பேச்சானதோ - அட
ஊர்விட்டுப் போனாலும்
உடல் கொண்டு போகின்ற
உயிரான இசைஎன்றும்
உயர்வான இசையன்றோ? கேளு – ( தாரை தப்பட்டை )

பரமாடும் நட ராஜன் ராஜன் - அழகு
அரவாடும் முடி சூடும் ராஜன் - அவனின்
சிரமீது நுரை பொங்கி
கரை மீறி நதி ஆட ஆட- அதனில்
படகாக பிறையாட ஆட - இடது
பதம் தூக்கி நடராஜன் ஆட
அட ஆடட்டும் ஆடட்டும் எல்லாம்
என ஆடிடும் அரைபாகம் மாதன்
அந்த விடைபாகன் தடக்கையில்
அடிக்கின்ற உடுக்கையொலி
தடக் என்று தடக் என்று கேட்கும்
அந்த இசை இந்தப் பறையினிலும் கேட்கும்….. கேளு – ( தாரை தப்பட்டை )

மக்கள் பிரதிநிதி

மக்கள் பிரதிநிதி நான்.
ஏழைப் பங்காளன்; பங்காளி அல்ல.
கௌரவம் காப்பேன்.
கௌரவர்களில் ஒருவனல்ல.

என்னது.. லஞ்சமா? என்னது.. கொஞ்சமா?
ஏன்.. எனக்கென்ன பஞ்சமா?
நீரோடி மீனோடிய வயலினில் ஏரோட்டி,
வீதியெலாம் தேரோட்டிய
வீர மண்ணின் மைந்தன் நான்;
ஈர மண்ணின் இளவல் நான்.
பல தலைமுறைக்குச் சோறிட நெல்லுண்டு
சில தலை நிழல் சாய்ந்திட வீடுண்டு
அடுத்தவன் இலையில் கைவைக்க
நான் என்ன பிச்சைக்காரனா?

என்னது? பொண்டாட்டி கேட்பாளா?
பாசமாய்ப் புல்லறுத்துப் பாட்டி வளர்த்த பசுவின்
பேத்தி ஈன்ற பசு, பத்து குடம் பால் கறக்க
என் மனைவியின் பட்டு விரல் படுமா
அவள் சுட்டுவிரல் தொடுமா,
ஊரான் வீட்டு நெய்?

என்னது? பிள்ளைக்குச் சேர்க்கவா?
ஏன்.. என் சிங்கத்துக்குக்
கையில்லையா? காலில்லையா?
தினவெடுத்த தோளில்லையா?
அவன் ஒரு ஆளில்லையா?
அப்பனுக்குப் பிள்ளையிடுவதா-
பிள்ளைக்கு அப்பனிடுவதா வாய்க்கரிசி?

Thursday, May 15, 2014

பெண் பார்க்கும் படலம்

முதல் பார்வையிலேயே
ஒரு பொறி தோன்றியது.
பற்றிக்கொண்ட பார்வைகள்
அடுத்தடுத்துப் பார்க்கையில்
ஆர்க் வெல்டிங் அடித்து
ஒட்டிக்கொண்டன இரும்புத் துண்டுகள்.
வாய்மொழிக்கு முன்பாக
உடல்மொழியில் திருமண உறுதி செய்துவிட்டு
இழுத்துவிட்ட இருவரின் மூச்சிலும்
நாதஸ்வர ஆலாபனை ஆரம்பித்துவிட்டது.
மணநாள் நினைவுகளில்
மேளதாளம் கொட்டி தாலி கட்டுமுன்னே
கோலம்போட்ட உன் கால்விரலில்
கண்களால் மெட்டியணிவித்துவிட்டுக்
காத்திருந்தேன்.
நீ காபி கொண்டுவருகையில்
கண்டேன் உன் கையில் பால்செம்பு.

Saturday, May 10, 2014

மல்லி வைத்து வந்துவிடு

செடியில் கிள்ளித்தான் வைத்தாயோ?
என் அத்தை
சொல்லித்தான் வைத்தாயோ?
என்னத்தைச் சொல்வது..
நீ அள்ளிவைத்த கூந்தலில்
ஆடிவரும் மல்லிகையை?

பள்ளிக்கூட பெஞ்சின் மேல்
நீ பஞ்சு போல் உட்கார
கட்டடத்துள் வட்டமிட்டு
பட்டம்போல பறக்குதடி
நீ கட்டி வந்த மல்லி வாசம்.

பள்ளிச் சீருடையா இல்லை
மல்லிக்கு மேட்சிங்கா
இந்த வெள்ளை சட்டை?
என்னைக் கட்டி வெச்சாலும்
கண்ணக் கட்ட முடியலையே..
திகட்டத் திகட்டப் பார்க்கிறேன்
தின்னாமலே தித்திக்கும்
வெல்லக் கட்டி உன்னையே...

நல்ல நாளைப் பார்த்துவிட்டேன்
நானும் உன்னைக் கட்டிவிட…
கடைசி பரீட்சை முடியும் அந்த
மாலையில் தான் ரிசப்சன்.
மண்டபத்துக்கு மறக்காமல்
மல்லி வைத்து வந்துவிடு.

அம்மா...

உயரத்தைப் பொருட்படுத்தாது
உவப்புடன் கழுத்தை நீட்டி
குடும்பம் எனும் இரட்டை மாட்டு வண்டியில்
அப்பாவின் இழுப்புக்கு மூச்சிரைக்க ஓடி
சில நேரம் முரண்டுபிடித்து
வண்டியைச் சரியான பாதையில் திருப்பி
உன் பிள்ளைகள் நாங்களும்
ஏதேனும் ஒருவிதமாய் உருப்பட
ஓடி ஓடி இன்னும் ஓயாத அன்னையே...
வயதான காலத்திலும்
சுமையான உந்தன் கழுத்து பாரத்தைப்
புனிதமென்று போற்றிப் பொட்டிட்டுக்
கண்களில் ஒற்றிக்கொள்ள
பாட்டனிடம் பாடாய்ப் பட்ட
பாட்டியிடமா கற்றாய்?
பைத்தியம் நீ.

Tuesday, April 8, 2014

இராம நவமி

மாமுனி சொல் கேட்டு வில் முறித்தாய்
தசரதன் சொல் கேட்டு முடி துறந்தாய்
வைதேகி சொல் கேட்டு மான் தொடர்ந்தாய்
சுக்ரீவன் சொல் கேட்டு வாலி வதைத்தாய்
கொடியதோர் குடி சொல் கேட்டு
துணைவியைத் தீ விதைத்தாய்
சொல்வார் சொல் கேட்பவன் ராமனென்று
யானும் உன்னை நிந்திக்கவோ?
நீ வந்துதித்த இந்நாளில்
நீ வந்துதித்த என் நெஞ்சில்
நாட்டம் வேறொன்றும் இல்லை
நின் நாமம் பகர்தலன்றி
ராமா ராமா ராமா

Saturday, March 29, 2014

பலகுரல் கண்ணன்

மகனின் பள்ளியில் இன்று பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. "சீக்கிரம் கிளம்புங்கள்" என்று கண்ணனை விரட்டினாள் கண்மணி. முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் இது தேவையா என்ற ஒரு அலட்சிய எண்ணம் கண்ணனுக்கு. கண்மணிக்கோ தன் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குச் செல்வது போன்ற ஒரு பதட்டம்.

வழக்கப்படி தன் பலகுரல் பேசும் திறமையினால் கண்மணியை இலகுவாக்க முயற்சித்தான் கண்ணன். நடிகர் சூர்யாவின் குரலில் "அட.. ஏன் கண்மணி இப்படி பதட்டப்படுற..." என்றவனிடம்.."குரல் எல்லாம் பரவாயில்லை.. ஆனால் கண்ணாடி பார்த்தால் இது மாதிரி உங்களுக்குப் பேசத் தோன்றாது.. மனசாட்சி உறுத்துமில்ல.." என்று கிண்டல் செய்தாள் கண்மணி.

அது சரி. ‘/மனைவியைச் சமாதானப் படுத்த முயற்சிக்கும் எந்தக் கணவனுக்கும் சமாதானம் உண்டானதில்லை/’ என்ற உலக நீதி தனக்கு மட்டும் பொய்த்துவிடுமா என்ன? - என்று பெருமூச்சு விட்டபடி மகிழ்வுந்தைக் கிளப்பினான்.

"இல்லைங்க.. இந்த தேன்மொழி ஆசிரியை இருக்காங்களே.. அவங்க கொஞ்சம் மோசம்.. போன சந்திப்பில் இலக்கியா அம்மா கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா..?" "இலக்கியா அம்மா .. நீங்க தொலைக்காட்சியில் நெடுந்தொடர் தவறாமா பாக்குற அளவுக்கு உங்க மகளோட வீட்டுக் குறிப்பைப் பாக்குறதில்லை.." அப்படின்னு சொன்னாங்களாம். இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம் இல்லையா...?"

'இருக்குறதத்தானச் சொல்றாங்க' என்று லியோனி குரலில் எண்ணினாலும் "அவங்களச் சொன்னாங்க என்பதற்காக நீ பதட்டப்படாத கண்மணி... உன்னைப் பார்த்தா நெடுந்தொடர் பார்த்து வீணாய்ப் பொழுது போக்கும் வேடிக்கை மனிதி போலவா இருக்கு? ஒரு பெரிய அதிகாரி மாதிரி இல்ல இருக்க நீ...." என்று பனி பொழிந்தான்! 'அட உள்ளே ஒரு குரல்ல பேசிக்கிட்டு வெளியில ஒரு குரல்ல பேசுறோமே.. உண்மையிலேயே நாம ஒரு பல குரல் மன்னன்தான்' என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான்.

எதிர்பார்த்ததுபோல் எந்தச் சிக்கலுமின்றி ஆசிரியை சந்திப்பு நன்றாகவே அமைந்தது. புலிக்குப் பிறந்த புலிக்குட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். கையொப்பம் போட்டுவிட்டு எழும் தருணத்தில் கண்மணி கேட்டாள் "மற்றபடி…. பையன் ஒழுங்காகத் தானே இருக்கிறான்.. மற்ற குழந்தைகளுடன் சண்டை போடுவதெல்லாம் கிடையாதல்லவா..?" "சண்டையெல்லாம் போடுவதில்லை….. ஆனால்…… பேச்சுதான்…. கொஞ்சம்….. அதிகம்...." என்று இழுத்தார் தேன்மொழி. ஆசிரியை தயங்குவதைப் பார்த்த கண்மணி "குழந்தையைக் கூட்டிட்டுக் கொஞ்சம் போங்க. நான் பேசிட்டு வரேன்.." எனவும் மெதுவாய் வெளியேறினான் கண்ணன்.

குழந்தைகளின் கூச்சலுக்கு நடுவிலும் மனைவியிடம் பேசும் தேன்மொழியின் குரல் தெளிவாகக் கேட்டது... "உங்கப் பையன் என்கிட்டே,,,நீங்க அழகா இருக்கீங்க…. நான் பெருசா ஆனதும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறாங்க..." " அடப்பாவி… அப்படியா சொன்னான்..? தொலைகாட்சி பார்த்து இப்படியெல்லாம் பேசுகிறான் போல.. நான் அவனைக் கண்டிக்கிறேன்" என்று எழுந்த கண்மணி முந்தியை இழுத்து விட்டபடி வெளியே வந்தாள்..

எதுவும் தெரியாதவன்போல்.. "என்ன சொன்னாங்க கண்மணி…?” என்ற கண்ணன் "இதோ இரு..வண்டியைத் திருப்பிட்டு வரேன்..போயிட்டே பேசலாம்….." என்றான். புலிக்குட்டியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட பலகுரல் கண்ணனின் இன்னொரு குரல் மனதுக்குள் பேசியது "புலிக்குட்டி சொல்லிடிச்சு... புலியால சொல்ல முடியலையே.."

மலர்

மலர் கொய்து கூடையில்
நிரப்பியவள் சூடிவந்தாள்
மலர்ச்சியை

Monday, March 17, 2014

ஹோலி

நீ கண்ணுக்கிட்ட மையொன்றே போதுமடி
நான் கருப்பு வெள்ளையில்
ஹோலிப் பண்டிகை கொண்டாட....
இருந்தாலும்......
"இந்தா வைத்துக்கொள் வண்ணங்கள்"
என்று தானோ
வானவில் காட்டினாய்
தலைதுவட்டி நீ உதறும்
வாசம் சுமந்த நீர்த்துளிகளில்?

Thursday, January 16, 2014

தாயே... நீ தான் எஞ்சாமி

பாலோடு உன் ரத்தம்
சேர்த்தே உறிஞ்சிப்புட்டேன்
பால் வத்திப் போனதென்று
பரிதவிக்க விடாம
அடுப்பனலில் காய்ஞ்சாலும்
அல்லலுன்னு பாராம
அன்றாடம் நான் தின்ன
எதையாவது ஆக்கிப்போட்ட
தாயே... நீ தான் எஞ்சாமி
பாலோடு உன் ரத்தம்
சேர்த்தே உறிஞ்சிப்புட்டோம்
பால் வத்திப் போனதென்று
பரிதவிக்க விடாம
அடுப்பனலில் காய்ஞ்சாலும்
அல்லலுன்னு பாராம
அன்றாடம் நாங்க தின்ன
எதையாவது ஆக்கிப்போடு
பூமித்தாயே... நீ தான் எங்க சாமி

Saturday, January 11, 2014

தமிழா நீ தமிழ் பேசு

தமிழா நீ தமிழ் பேசு
தமிழா நீ தமிழில் பேசு
தமிழா நீ தமிழ் இல் பேசு

உறவாடுது உயிர்மெய் எழுத்து
மறையாதது மெய் எழுத்து
மறைந்திருப்பது உயிர் எழுத்து
மறவாதே தமிழ் உன் தலை எழுத்து

காலங்கள் தாண்டி நீண்டது வேர்ச்சொல்
ஞாலம் முழுதும் பரந்தது கிளைச்சொல்
கிளை ஒவ்வொன்றிலும் கனியட்டும் தமிழ்ச்சொல்
கனி வேண்டின் வேண்டும் நீர் 'பாய்ச்சல்'

தமிழ் விழுகிறது எனும் மாக்களுக்'குரை'
"சரிதான் போய்யா... போம்மா...
நீ விட்டா தமிழ் விழுது?
நான் விட்டால் தமிழ் விழுது!"

Friday, January 3, 2014

பொய்யாமொழி

கண்மணிக்குக் கோபம் கோபமாக வந்தது. தேன்மொழியின் பேச்சைக் கேட்டுப் பொய்யாமொழி ஐயாவை நேற்று சந்தித்தது எவ்வளவு தவறு என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.

கண்மணியும் தேன்மொழியும் ஒரு கணினி நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிபவர்கள். கண்மணிக்குத் திருமணமாகிவிட்டது. கண்ணன் ஒரு வங்கியில் பணியாற்றுகிறான். கண்ணன் கண்மணி என்று பெயர் பொருத்தம் ஜோராக உள்ளதே தவிர உண்மையில் இவர்களின் பெயர் கீரி, பாம்பு என்று வைத்திருக்கலாம். இதற்குத்தான் சண்டை போடுவதென்று ஒரு வரைமுறையில்லாமல் எப்போதும் வாயும் வசவுமாகத் திரிபவர்கள் இவர்கள். திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகியும் இன்னும் அடங்கவில்லை இவர்கள்.

தேன்மொழிக்கு அவள் ஜாதகத்தில் உள்ள ஏதோ ஒரு கட்டத்தில் சொட்டை இருக்கிறதென்று அவள் அப்பா அம்மா கஷ்டப்பட்டு வரன் தேடிக் கொண்டிருக்க, அவளோ திருமணம் பற்றிய எந்த கவலையும் இன்றித் தனிமையின் இனிமையையும் சுதந்திரத்தையும் குறையின்றி அனுபவித்து வருகிறாள். வார இறுதிகளில் அன்னை இல்லம் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, பொய்யாமொழி அய்யா நடத்தும் யோகா மற்றும் தியான வகுப்புகளுக்குச் செல்வது என்று மனதை அமைதியுடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பாள் தேன்மொழி.

தெரியாதத்தனமாய் தேன்மொழியுடன் தியான வகுப்புக்கு நேற்று மாலை சென்றதுதான் கண்மணிக்கு இன்று மன உளைச்சல் ஏற்படக் காரணமாகிவிட்டது. அதுகூட தியான வகுப்பில் சேருவதற்காக அவள் செல்லவில்லை. வண்டியில் ஏறும்போது தேன்மொழிதான் ஓடி வந்து வழியில் இறக்கிவிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினாள். இறக்கிவிட்டவளை, "உள்ளே தான் வாயேன் பொய்யாமொழி ஐயாவை நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ கிளாஸ்ல எல்லாம் சேர வேணாம். ஐயா கிட்ட ரெண்டு நிமிஷம் பேசினாலே மனசு லேசாயிடும். தீராத பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்" என்றாள்.

"ஐயா, இவள் என் தோழி கண்மணி" என்று அறிமுகப் படுத்திவிட்டு வகுப்புக்குச் சென்றுவிட்டாள். கண்மணிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, வயதானவராய் இருக்கிறார் காலில் விழலாமா என்று யோசித்தவள், எதோ ஒன்று தடுக்கவே வேண்டாம் என்று கைகூப்பி ஒரு வணக்கம் வைத்துவிட்டு அவர்முன் அமர்ந்தாள். மௌனத்தைக் கலைக்கும் வகையில் பொய்யாமொழி ஐயாதான் பேசினார்.. அதுவும் ஒரே ஒரு வாக்கியம்... இல்லை... அரை வாக்கியம். கண்மணிக்குப் பகீரென ஆகிவிட்டது. வயதானவர், எல்லோரும் மதிப்பவர் என்று நினைத்தால் இப்படியா பேசுவார் இவர்? என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பொய்யாமொழி ஐயாவே அவளுக்கு வணக்கம் சொல்லிப் போய் வாருங்கள் என்பதுபோல் வாசலைக் காட்டி சைகை செய்தார். எழுந்தவள் தேன்மொழி எங்கு இருக்கிறாள் என்று கூடப் பார்க்காமல் சரசரவென வண்டியிலேறிச் சென்றுவிட்டாள்…

வீட்டுக்கு வந்தவள் கண்ணனிடம் எதுவும் பேசாமல் தூங்கிவிட்டாள். காலையில் எழுந்து வழக்கம்போல் அலுவலகம் கிளம்பினாள்.

அலுவலகப் பேருந்து சாலை மண்ணைக் கிளப்பிவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்றது. எப்போதும் ஓட்டுனரைப் பார்த்து ஒரு சிறு புன்னகை செய்துவிட்டு உள்ளே ஏறுபவள் இன்று அவரைப் பார்க்காமல் நேராகச் சென்று இருக்கையில் அமர்ந்தாள். பொய்யாமொழி ஐயா சொன்னதின் உறுத்தலில் யாரைப் பார்த்துச் சிரிக்கும் நிலையிலும் கண்மணி இல்லை.

மாலையில் வேறு கசின் ரிசப்சன் இருக்கிறது. கண்ணனுடன் எந்த சண்டையும் போடாமல் இருக்க வேண்டும். நம்ம வீட்டு பங்க்ஷன் என்றால்தான் கண்ணனுக்கு மாப்பிள்ளை முறுக்கைக் காட்டத் தோன்றும். ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் புது மாப்பிள்ளைன்னு நினைப்பு.

அலுவலகத்தில் பேருந்து நின்றதும் இறங்கினாள். வழக்கமாய் இவள் இறங்கும்போது திரும்பிப் பார்த்துப் புன்னகைக்கும் ஓட்டுனர் இன்று திரும்பியே பார்க்கவில்லை. இவள் ஏறும்போது சிரிக்கவில்லை என்ற கோபம் போலும். "போய்க்கோடா.." என்று எண்ணியபடி தனது இடத்துக்கு விரைந்தாள்.

"சொல்லாமலேயே போயிட்டயே கண்மணி. பொய்யாமொழி ஐயா என்ன சொன்னார்? அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதானே..மனதில் ஒரு அமைதி பிறந்திருக்குமே.." என்ற தேன்மொழியிடம், "ஆமாம் அவரைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்று சொல்லிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள் - தன் தனிப்பட்ட அனுபவத்தை வைத்து தோழியின் நம்பிக்கையையோ மகிழ்ச்சியையோ கெடுக்கவேண்டாம் என்ற எண்ணத்தில்.

11 ஓ கிளாக் மீட்டிங்கில் புகழேந்தி கூட கேட்டார். "என்ன தேன்மொழி உங்கள் வழக்கமான புன்னகையைக் காணோம்? ஏன் இப்படி இருக்கீங்க? கண்ணனோட ஏதாவது பிரச்சனையா?".. "அதெல்லாம் இல்ல சார்.. கொஞ்சம் தலைவலி... வேலையைச் சீக்கிரம் முடிக்கணும்னு டென்ஷன். சாயந்திரம் என் கசின் ரிசப்சன் இருக்கு" என்றாள்.

மதியம் ஒன்றாகச் சாப்பிடச் செல்லும் நக்கீரனை பிங் செய்து "யூ கோ அஹட் பார் லஞ்ச் .. ஐ ஹேவ் எ மீட்டிங்" என்றவளுக்கு "ஷல் ஐ வெயிட்" என்று நேக்ஸ் பதில் போடுவதற்குள் "டூ நாட் டிஸ்டர்ப்" என்று ஸ்டேடசை மாற்றிவிட்டாள்.

மாலையில் திரும்பும்போதும் உம்மென்ற முகத்துடனேயே வீடு சென்று அடைந்தாள். வாட்ச்மேனைப் பார்த்துக் கூடச் சிரிக்கவில்லை. வீடு திறந்திருந்தது. வங்கியிலிருந்து கண்ணன் சீக்கிரமே திரும்பிவிட்டிருந்தான். குளித்துவிட்டு இவள் அனுமதிக்கும் ஓரிரு சட்டைகளில் ஒன்றை அணிந்திருந்தான். ஆனால் வழக்கப்படி மேல் பட்டனைப் போடவில்லை. இதற்காகவே பல சண்டைகள் நடந்திருக்கின்றன. "யார் பாக்கணும்னு இப்படி சட்டையைத் திறந்து விடுறீங்க" என்று இவளும், "நீ லோ ஹிப் கட்டுறீயே நான் கேட்கிறேனா?" என்று அவனும் முட்டிக்கொள்வார்கள். இன்று எதுவும் ஆரம்பிக்கவேண்டாம் என்று அமைதியாக உள்ளே சென்றாள். அயன்காரரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பட்டுப் புடவையைக் கண்ணன் பொறுப்பாக வாங்கி வைத்திருந்தது கொஞ்சம் நிம்மதி தந்தது.

தனக்கு கிரீன் டீ போட கிச்சனுக்குச் சென்றவள் பில்டரில் டிக்காஷன் இறங்கியிருப்பதைப் பார்த்து கண்ணனுக்கும் காபி கலக்கிக் கொண்டுவந்தாள். "இந்தாங்க ரிசப்சனில் பில்டர் காபி கிடைக்காது.." வழக்கத்துக்கு மாறான இந்த அமைதியும் உபசரிப்பும் கண்ணனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று புரியாமல் சற்றே வழிவதுபோல் முழித்தான். அதைப் பார்த்ததும் கண்மணிக்கு சிரிப்பு வந்துவிட்டது.. பொய்யாமொழி எபக்டால் காலையிலிருந்து எல்லோரிடமும் உம்மென்று அடக்கி வைத்திருந்த அவள் சிரிப்பு குக்கர் விசில் திறந்ததுபோல் பொங்கிப் பொங்கி வெளி வந்தது. கண்மணியின் திடீர் மாற்றம் புரியாத கண்ணன், அவனும் சிரித்து வைத்தான்.

கோப்பைகளைச் சமையலறையில் வைத்துவிட்டுப் பட்டுப்புடவை கட்ட உள்ளே சென்றாள். நட்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி கண்ணனும் உள்ளே சென்றான். "பின் போட்டுவிடவா.." என்றான். சட்டையின் மேல் பட்டன் போடப் பட்டிருப்பதைக் கவனித்த கண்மணி, புன்னகையுடன் பின்னை அவனிடம் கொடுத்தாள்.

புடவை கட்டிக் கிளம்புகையில் அலமாரியில் தேடி உதட்டுச் சாயம் எடுத்து லேசாகத் தடவிக் கொண்டாள். இந்த லிப் ஸ்டிக்கும் கண்ணனும் கண்மணியும் அடிக்கடி முட்டிக்கொள்ளும் ஒரு விஷயமாகும். கண்ணனின் பரம்பரையில் யாருமே லிப் ஸ்டிக் போட்டதில்லை. எனவே கண்ணன் வீட்டு விழாக்களில் லிப் ஸ்டிக் போடுவதில்லை என்றும் கண்மணி வீட்டு விழாக்களில் மட்டும் போடுவது என்றும் ஒரு உடன்படிக்கை போட்டிருந்தார்கள். உதடுகளைத் தேய்த்துச் சாயத்தை சமன் செய்தவள் சிரித்தவாறே கேட்டாள்..."நல்லாருக்கா...?" சிரித்தவாறே கண்ணன் சொன்னான் "லிப் ஸ்டிக்கை விட இந்த சிரிப்பு உன் உதடுகளுக்கு அழகாக இருக்கிறது"

ஒரு நாள் முழுதும் மன இறுக்கத்தில் இருந்த கண்மணிக்கு இப்போதுதான் புரிந்தது "பொம்பள சிரிச்சா போச்சு" என்று பொய்யாமொழி ஐயா சொன்னதின் உட்பொருள்.