Thursday, December 4, 2014

பாரதியின் குயில்பாட்டு

பாரதியின் குயில்பாட்டில் குயிலானது தனது காதலனாகிய குரங்கினை மனிதனுடன் ஒப்பிட்டுப் புகழும் கீழ்க்கண்ட வரிகள் மிகவும் அழகு!

வானரர் தம் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிர் உமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர் போலாவரோ?
வாலுக்குப் போவதெங்கே?!!

பாரதியின் பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை. பாரதி, வானரத்தை மனிதனுடன் ஒப்பிட்டு அதன் மேன்மைகளை இப்பாடலில் புகழ்ந்திருப்பதில் உள்ள நகைச்சுவையையும் உண்மையையும் நீங்களும் இரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே வெறும் விளக்க உரையாக இல்லாமல் இந்தப் பாடலை ஒருசில கண்ணோட்டங்களில் பொருத்தி என் கருத்துகளை இங்கு பகிர்கிறேன்.

விளையாட்டு / சாகசம்:
//கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்//
நாம் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்றெல்லாம் விளையாட்டு மற்றும் சாகசங்கள் செய்வதெல்லாம் வானரம் போன்ற விலங்குகளைப் பார்த்தெழும் உந்துதலால்தானே? குரங்கிலிருந்தான நம் பரிணாம வளர்ச்சியிலும் சாகச உணர்வு நமக்கு ஒட்டிவந்திருக்கவேண்டும். மாணவர் தேசியப் படையில்(NCC) இருந்தபோது மரங்களுக்கு இடையில் கட்டிய கயிற்றுப் பாலத்தில் நடந்து சென்றது, தொங்கும் கயிறைப் பிடித்து தண்ணீரைத் தாண்டியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்படித் தாண்டும்போது தண்ணீர்த்தொட்டியில் முழங்காலைத் தட்டிக்கொண்டதும் தான் !! அம்மாடி…என்ன ஒரு வலி..?

காதல் / ஊக்கம் / ஆன்மிகம்:
இந்தப் பாடலைத் தத்துவரீதியாய்க் கொஞ்சம் பார்ப்போம்.
தலைவியானவள் தலைவனை இந்தக் குயிலினைப் போல் புகழ்ந்தால் எந்தத் தலைவன்தான் குரங்கினைப்போல் வாலைச் சுருட்டிக் கிடக்கமாட்டான்?! ஹ்ம்ம்..( புகழ்கிறார்களா என்று தெரியாது.. ஆனால் புகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!! நன்றி கமல்!!)
அனுமனுக்கு அவன் பலம் மற்றவர் சொல்லித்தான் புரிந்தது. வானர வழித்தோன்றல்களான நமக்கும் பிறர் சொல்லும் ஊக்கவார்த்தைகள் நம் பலத்தை நமக்குக் காட்டவும், வளர்க்கவும் உதவும் என்று கருதுகிறேன்.

புவியின் மீது மனிதனின் ஆதிக்கம்:
"காக்கை, குருவி எங்கள் ஜாதி" "உயிர்களிடத்து அன்பு வேணும்" என்றெலாம் எழுதிய பாரதி, வானரத்தைப் புகழ்ந்து எழுதியதில் வியப்பொன்றும் இல்லை. பிற உயிர்களின் மீதும், இயற்கையின் மீதும் நாம் பரிவு கொள்ள வேண்டும் என்பது ஒரு விழைவாக மட்டும் இன்று இல்லை. புவியில் மனித இனம் பிழைத்திருக்கவேண்டுமாயின் இயற்கையின் மீது மனிதன் கவனம் கொள்வதென்பது அவசியத் தேவையுமாகிவிட்டது. புவியை மனிதன் சொந்தம் கொண்டாடுவதையும் அவனின் ஆதிக்க உணர்வையும் தகர்த்துப் பரிகசிக்கிறது இந்தப் பாடல்.

"மூளை என்னும் ஊளைச்சதை கொஞ்சம் அதிகம் இருக்கிறது என்பதற்காக, மனிதா நீ அலட்டிக் கொள்ளாதே" என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லிவிடுகிறான் பாரதி!!

No comments: