Wednesday, June 3, 2015

இதைச் செய்யாவிட்டால் என்ன?


மசானபு ஃபுகோகா அவர்களின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளேன். (pg 137-138). அதீத வளர்ச்சியை நோக்கி இந்த உலகம் ஓடுவது தேவையற்றது என்ற கருத்தை இயற்கை விவசாயத்தின் ஊடே வலியுறுத்தியுள்ளார்.

வளர்ச்சியோ விஞ்ஞானமோ வீண் என்பதை நான் ஆதரிக்கவில்லை எனினும் பூமிமீதான மனிதத்தின் அளவற்ற அதிகாரத்தையும் உரிமை கோரலையும் விரும்பாதவன் என்கிறவகையில் இதைப் பகிர்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------

"நீங்கள் எதையுமே செய்யாவிட்டால், உலகம் இயங்கிக் கொண்டிராது? வளர்ச்சியற்ற உலகம் எப்படி இருக்கும்?"
"நாம் எதற்காக வளர்ச்சி பெற வேண்டும்? பொருளாதார வளர்ச்சி 5-10 சதவீதமாக உயரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறதா? வளர்ச்சி விகிதம் 0 சதவீதமாக இருந்தால் என்ன தவறு? இது ஒரு நிலையான பொருளாதாரத்தின் அடையாளம் இல்லையா? மிகவும் சாதாரணமாகவும், இயல்பாகவும் வாழ்வது எல்லாவற்றையும் விட சிறந்ததல்லவா?"

மக்கள் எதையாவது கண்டுபிடித்து, அது எவ்வாறு இயங்குகிறது என்று ஆராய்ந்து, இயற்கையைப் பயன்படுத்துகின்றனர். அது மனித இன உய்விற்கான ஒன்று என்றும் நினைத்துக் கொள்கின்றனர். இவையனைத்தும் இது நாள் வரை விளைவித்தது என்ன தெரியுமா? இந்த கிரகம் மாசுபாடடைந்தது; மக்கள் குழப்பமானார்கள்; நவீன காலத்தின் பெருங்குழப்பத்திற்கு வரவேற்பு ராகம் வாசிக்கப்பட்டது.

** இந்தப் பண்ணையில் நாங்கள் 'ஒன்றுமே செய்யத் தேவையற்ற' வேளாண்மையைச் செய்து, முழுமையான, ருசியான தானியங்கள், காய்கறிகள், பழங்களை உண்கிறோம். பொருட்களின் ஆதாரத்திற்கு அருகே வாழ்வதில், பொருளும், ஒரு அடிப்படையான மன நிறைவும் இருக்கிறது. வாழ்க்கை ஒரு பாடல், வாழ்க்கை ஒரு கவிதை.

மக்கள் இந்த உலகை அலசி, ஆராய்ந்து, நாம் இதைச் செய்தால் நல்லது, அதைச் செய்தால் நல்லது என்று தீர்மானிக்கும்போது,.என் ஆராய்ச்சி எல்லாம் இதைச் செய்யாவிட்டால் என்ன? அதைச் செய்யாவிட்டால் என்ன என்ற திசையில் செல்கிறது. எதையுமே செய்யாவிட்டால் இந்த விவசாயிகள் இதைவிட நன்றாக இருப்பார்கள் என்பதை கடந்த முப்பது ஆண்டு அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

மக்கள் அதிக வேலை செய்தால், சமுதாயம் அதிகமாக வளர்ச்சியுறும்; அதிகப் பிரச்சனைகள் ஏற்படும். வளங்கள் தீர்ந்து வருவது, இயற்கை அதிகமாக சீரழிக்கப் பட்டு வருவது, மனித ஆற்றல் நொறுங்கி வருவது ஆகிய அனைத்தும் மனித சமுதாயம் எதையாவது சாதிக்கவேண்டும் என்று வெறி கொண்டதன் விளைவுதான்.

முதலில் முன்னேற்றம் அடையவேண்டிய தேவையில்லாமல் இருந்தது. அதனால் எதுவும் செய்யப்படவில்லை.
எதையும் கொண்டுவரத்தேவையில்லை என்றொரு இயக்கத்தை உருவாக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருக்கிறோம்!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------

** நிலத்தை உழுது பண்படுத்துவது கூடத் தேவையற்ற வெறுமனே விதைத்து, களைகள் பரவாதிருக்க வைக்கோலைப் பரப்பிப் பயிர் செய்யும் முறையை இவர் இவரது பண்ணையில் வெற்றிகரமாய் செய்ததையே "ஒன்றுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை' என்று இங்கு குறிப்பிடுகிறார்.

பி.கு
பூவுலகின் நண்பர்கள் செய்துள்ள தமிழாக்கம் எளிமையாகவே உள்ளது. எனினும் பல இடங்களில் நேரடி மொழிமாற்றம் தவிர்க்க இயலாதது என்கிற புரிதலுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்கவும்.

No comments: