Friday, March 2, 2012

கிலுகிலுப்பை

மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் ஹாலில்.
மகளை அழைத்தார்..
"ஏம்மா... உன் மாமன் வந்திருக்கான் காபி போடு......."

நான் திரும்பிப் பார்ப்பதற்குள் முதுகின் பின்னால்
மல்லிகைவாசம் தூவிவிட்டு சமையலறைக்குள்
சலசலத்து நுழைந்தன கொலுசுகள்.
கையின் கீழிருந்து மேல் இறங்கிய
வளையல் சத்தம் உணர்த்தியது-
அலமாரியில் அவள் காபி பொடி எடுப்பதை.

மீண்டும் சிணுங்கிய வளையல்கள் சொல்லின-
சர்க்கரை... சர்க்கரை...கலப்பதை.
"காபி நுரையில் ஒளிந்த வளையல் சத்தம்"
என்று கவிதைக்குள் கவிதை எழுதிக் காத்திருந்தேன்-
அவள் அழகு முகம் தாங்கி வரும் கொலுசொலிக்காக.

"ஒரு கிலுகிலுப்பை கூட வாங்கித்தராத கஞ்சனடா உன் மாமன்"
சிறு வயதில் அம்மா சொன்னது
அபத்தமாய்த் தோன்றியது இப்போது!

Statutory Warning: நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வது மருத்துவ ரீதியாக உகந்ததல்ல.

10 comments:

கௌதமன் said...

படிச்சுட்டேன். (ஆனால் புரியலை)

Anonymous said...

அழகிய படைப்பு..

அப்பாதுரை said...

பட்டுத்தாவணி பட்ட சுகம் கவிதையில்.

மோ.சி. பாலன் said...

அப்பாதுரை, ரெவெரி - மிக்க நன்றி

கௌதமன் - e-mail அனுப்பியுள்ளேன்

கௌதமன் said...

மின்னஞ்சல் படித்தேன். என்னைக் குழப்பிய வார்த்தை, கஞ்சனடா என்பதில் உள்ள 'டா'

மோ.சி. பாலன் said...

கௌதமன் - டா என்பது அம்மா அவர் தம்பியைச் சொல்வது... அண்ணன் என்று நினைத்துவிட்டீரோ?

மோ.சி. பாலன் said...

கௌதமன் -
முதல் வரியை - அத்தைக்குப் பதில் மாமனென்று மாற்றிவிடுகிறேன்.. மற்றவர்களுக்கம் இக்குழப்பம் நேராதிருக்க..
மிக்க நன்றி..
உங்கள் குழப்பத்தால் எனக்குத் தெளிவு பிறக்க வேண்டுமென்பது அவன் செயலன்றி வேறில்லை.. !

ஸ்ரீராம். said...

பேச்சு மாமனிடம், கவனம் 'கவிதை'யிடம்!

Mani said...

இந்த மாமன் மகள், அத்தை மகன் என்ற இயற்கைக்கு எதிரான மரபு என்றுதான் மாறுமோ ? ஒரு முறை ஒரு எஞ்சினீர் திரைப்படம் இயக்கப்போவதாக கூறியதும், இந்த மரபை மாற்றுமாறு வேண்டினேன். கல்வியையும் அறிவையும் பிரித்து கையாளும் ஆற்றல் படைத்தவர் என்பதை அவருடைய விடையில் உணர்ந்து வருந்தினேன். முதல் முறையாக பூ என்ற தமிழ் திரைப்படம் இதை சரியாக கையாண்டது ஆறுதல் அளித்தது.

மோ.சி. பாலன் said...

நன்றி ஸ்ரீராம்.
நன்றி மணி - ஒரு பதிவில் குற்ற உணர்வைக் குறைத்து, இதில் குற்ற உணர்வைக் கூட்டிவிட்டீர்கள். சாப நிவர்த்திக்காக statutory warning போட்டுவிட்டேன் !