Thursday, March 15, 2012

மண(&மன) உறுதி

ஒரு காலத்தில் கல்யாண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்ததாகப் பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் பிள்ளைகள் சொன்னால்தான் பெற்றோர்களுக்கு அவர்களின் திருமணம் பற்றித் தெரியவருகிறது என்று மிகைப்படுத்திச் சொன்னாலும் - இக்காலத்திலும் பெரும்பாலும் பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் தொடர்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

இன்று மதியம் நண்பர்கள் யாரும் உடன் வராததால் நான் மட்டும் தனியாக எங்கள் அலுவலக உணவகம் சென்றேன். நான் அமர்ந்த மேசையில் இன்னொரு ஓரத்தில் இரண்டு இளம்பெண்கள் வந்து அமர்ந்தனர். அமர்ந்த அடுத்த நிமிடமே பேச ஆரம்பித்துவிட்டனர். நானும் நாகரிகம் கருதி அவர்கள் பேசுவது எதுவும் கேட்காமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். காதைப் பொத்திவைத்தாலும் காதைப் பொத்துக்கொண்டு சில செய்திகள் நம் காதில் விழுமல்லவா, அது தான் நடந்தது. ஒரு பெண் தன் திருமணத்தைப் பற்றி வெட்கமும் குதூகலமும் கலந்து பேசும்போது அதைக் கேட்காமல் எப்படி இருப்பது...?

நிச்சயதார்த்தம் (மண உறுதி விழா) சமீபத்தில் தான் நடந்ததாம்.
இது உறவினர்கள் மட்டும் கலந்துகொண்ட சிறிய விழா என்பதால் நண்பர்களை அழைக்கமுடியவில்லை என்று வருந்தினாள் அந்தப் பெண். கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கிறது.
அழைப்பிதழ் வைக்கிறேன் கட்டாயம் வந்துவிடவேண்டும் என்றாள். அவள் தோழி ஆமோதிக்க, நானும் சம்பந்தா சம்பந்தமின்றி தலையை ஆட்டிவைத்தேன். பேச்சு தொடர்ந்தது. அந்தப் பெண்ணின் வருங்காலக் கணவர் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்புக்
கிடைத்திருப்பதாகவும் திருமணம் முடிந்தவுடன் செல்லவேண்டும் என்றும் கூறினாள்.

இதுவரை ஒரு வழக்கமான கதையாக ஓடிக்கொண்டிருந்த இந்த உரையாடலில் ஒரு சுவாரசியமான திருப்பம் இப்போது வந்தது. கல்யாணத்துக்கு ஆறு மாதம் இருந்தபோதும் -விசா எடுக்க நாளாகும்
என்பதாலும் கல்யாணம் ஆன உடனே புறப்படவேண்டும் என்பதாலும் - அடுத்த வாரம் அவள் கல்யாணத்தைப் பதிவு செய்துகொள்ளப்போவதாகக்
கூறினாள். இச்செய்தி அவள் தோழியைப் போலவே எனக்கும் ஆச்சரியம் அளித்தது. இருந்தாலும் தோழி சமாளித்துக் கொண்டு 'அப்போ ஆறு மாசம் ஜாலி தான்னு சொல்லு' என்று கிண்டல் செய்தாள். 'அடப் போப்பா - போன்ல மட்டும் தான் பேசிக்குவோம் அவ்வளவுதான்' என்றாள் வெட்கத்துடன்.

என் தட்டில் தயிர்சாதமும் காலியாகிவிட்டதால் -அத்துடன் நடையைக் கட்டினேன். உரையாடல் கேட்காவிட்டாலும் கற்பனை மட்டும் எனக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. திருமணப் பதிவு நாளன்று அவன் என்ன பரிசு கொடுப்பான்? அவனும் நம்மைப் போல் பாரதி பக்தனாக இருப்பானோ?
"ஆத்திரம் கொண்டவர்க்கு கண்ணம்மா சாத்திரம் உண்டோடி?
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இதுபார் - கைஎழுத்திட்டுவிடு" என்று card எழுதிக் கொடுப்பானோ? என்ன சார் இந்த மாதிரி situation கௌதம் மேனன் படத்தில் தான் வரும் இதற்குப் போய் பாரதியார் பாட்டு எழுதுகிறீர்களே என்று இளைஞர்களாகிய நீங்கள் கேட்கலாம். எனவே ஒரு re-mix பாடலும் எழுதி அதையும் உடனே வெளியிடுகிறேன். ஒரு வேளை இந்த பாடல் பொருத்தமாக இருந்தால் கௌதம் மேனன் அடுத்த படமான 'நீ தானே எந்தன் பொன் வசந்தம்' படத்தில் பயன்படுத்திக் கொள்ளட்டும். ( என்ன ஒரு பேராசை என்று கேட்கிறீர்களா? கேட்காதீர்கள். அதற்குப்பதில் உங்களுக்கு கெளதமையோ அல்லது இசைஞானியையோ தெரியுமென்றால் அவர்களுக்கு என் பாடலைக் காட்டி புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்!)

மீண்டும் கதைக்கு வருவோம்.

திருமணத்துக்கு முன்பாகவே இப்படிப் பதிவு செய்து கொண்டால் அதில் என்னென்ன பிரச்சினைகள் வரக் கூடும்? இது எந்த விதமான ஒரு நம்பிக்கை..? நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா?

சிறு வயதிலேயே - இவன் உனக்குத்தான் - இவள் உனக்குத்தான் என்று காட்டி-காதல் வளர்த்த நம் தமிழ்ப் பண்பாடு - இந்த இரு உள்ளங்களுக்கும் காதல் வளர்ப்பதன்றி நல்வழியும் காட்டி நலமுடன் வாழவைக்கட்டும் என வாழ்த்துவோம்.

2 comments:

கௌதமன் said...

புதிய தகவலாக இருக்கின்றது. அடுத்த நாள் கல்யாணம் - அதற்கு முதல் நாள் ரிசப்ஷன் என்பதையே சில வீட்டுப் பெரிசுகள் ஏற்றுக் கொள்வதில்லை. தாலி கட்டு முன்பு இந்த மாதிரி எல்லாம் கொண்டாடுவதே கலிகாலம் என்று அலுத்துக் கொள்வார்கள்! அவர்கள் இதற்கு என்ன சொல்வார்களோ!

ஸ்ரீராம். said...

நம்பிக்கையில்தான் வாழ்க்கையே ஓடுகிறது என்றாலும் படித்துக் கொண்டு வரும்போது எனக்கும் அதே சந்தேகம் தோன்றியது!