Monday, March 5, 2012

கண்ணால் காண்பது பொய்யா?

காதலில் சொதப்புவது எப்படி? படம் பார்த்து விட்டீர்களா? மற்றவர்கள் சொதப்புவதைப் பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி என்றுமே உண்டு. ஆனால் நாம் சொதப்பிய விஷயங்களை நினைவுபடுத்திப் பார்ப்பது சிரமமான விஷயம்.

ஆபீஸில் பாஸுக்கு தவறான டேட்டா கொடுத்துவிட்டு அதைத் தானாகவே சொல்லிவிடுவது நல்லதா இல்லை அவராகக் கண்டுபிடிக்கட்டும் என்று விட்டுவிடலாமா என்று நண்பர்களிடம் அட்வைஸ் கேட்டுப் பட்டி மன்றம் நடத்தும் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். நண்பர்கள் என்றால் நானும் ஒரு நண்பன் என்பது நான் சொல்லியா உங்களுக்குப் புரிய வேண்டும்?!

ஒரு காலத்தில், அப்பா டியுஷன் எடுக்கும் போது, சின்ன கிளாஸ் பசங்களுக்கு சில நேரம் என்னைச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார். அப்படி சில சமயங்களில் எதையாவது தப்பாகச் சொல்லிவிட்டு டியுஷன் முடிந்ததும் அந்தத் தப்பை உணர்வதுண்டு. மறுநாள் அதைச் சரியாகச் சொல்லிப் பசங்களைத் திருத்தும் வரை ஒரு குற்ற உணர்வு வாட்டிக் கொண்டே இருக்கும். இந்த அனுபவத்தின் காரணமாக, இப்போதெல்லாம் என் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருப்பேன். இருந்தாலும் ஒருமுறை நான் சொல்லிக்கொடுத்ததால் ஒரு பதில் தவறாகி ஒரு மார்க்கில் 'ஓ' கிரேடு போய்விட்டது என்று என் மகன் என் மனைவியிடம் சொல்லிவிட்டான். 'உன்னால் தான் ஓ கிரேடு போய்விட்டது' என்ற பஞ்ச் டயலாக்கை என் மனைவியிடமிருந்து இப்போது அடிக்கடி கேட்க நேர்வது முற்காலத்தில் டியுஷன் பசங்களுக்கு நான் செய்த பாவத்தின் சம்பளம் தான் என்பதை முற்றிலும் உணர்கிறேன்.
 
இதுபோல் சமீபத்திலும் ஒன்று நிகழ்ந்தது.
 
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். இரு சிறு குழந்தைகளுடன் ஒரு பெண் பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் உட்கார இடம் இல்லாததால் ஒரு பையனை மனித நேயத்தின் பொருட்டு(?) என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன். உடனே 'அங்கிள், அங்கிள்' என்று பேச ஆரம்பித்து விட்டான். அவன் பெயர் மோகனகிருஷ்ணன் என்றும் அவன் ஒன்றாம் வகுப்பு படிப்பது முதல் அவன் மிஸ்களின் பெயர்கள் எல்லாம் கூட சொல்லிவிட்டான். அதானே, மிஸ் பெயர் எல்லாம் எதற்கு என்னிடம் சொல்லவேண்டும்? சரி அது கிடக்கட்டும். இந்த வழியாகச் சென்றவர்களுக்குத் தெரியும் - இந்தப் பாதை நெடுகப் பாலாற்றின் கரையிலேயே செல்லும் என்று. பாலாற்றின் கரையில் செல்வதாலேயே இந்தப் பாதையில் செல்வது ஒரு சுகானுபவம். ஒரு திருப்பத்தில் வண்டி திரும்பும்போது மோகனகிருஷ்ணன் பரந்து விரிந்து கிடந்த பாலாற்றைப் பார்த்து 'அங்கிள் இது என்ன பாலைவனமா?' என்று கேட்டான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்தக் குழந்தைக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது - இது ஒரு காலத்தில் பால் போல் பொங்கி ஓடிய ஆறு என்று? 'பாலை வனம்' என்று தமிழில் சொன்னானே என்பதில் மகிழ்ச்சி ஒரு புறம். கொஞ்சம் யோசித்துவிட்டு அது ஒரு ஆறு தான் என்பதை ஒருவாறாக அவனுக்கு விளக்கிவிட்டேன். 

இது நடந்து பத்து நாட்கள் ஆன பிறகு என் மனம் என்னைக் கேட்கிறது டியுஷன் பசங்களுக்கு சொன்னதுபோல் இதுவும் தவறான பதிலோ என்று. தோற்றத்தில் இது பாலைவனம் என்று நிதர்சனமாக ஒரு குழந்தைக்குத் தெரிகிறது.  இதை ஆறு என்று நான் ஏன் கூறவேண்டும்? கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாய் ஓடாத பாலாறு இனி ஓட வாய்ப்புள்ளதா? அண்டை மாநிலங்களில் அணைகள் உடையுமா? இல்லை காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களின் கழிவு நீர் அனைத்தையும் இதில் செலுத்தி கூவம் நதிபோல் வற்றாத ஜீவநதியாக இதை மாற்ற முடியுமா?
உங்கள் மடியில் மோகனகிருஷ்ணன் அமர்ந்திருந்தால் நீங்கள் என்ன பதில் கூறியிருப்பீர்கள்?

பி.கு. இந்த அனுபத்தில் உருவானதே பாலாறு என்ற என் கவிதை. ஆனால் அது ஒரு பரிமாணத்தை மட்டுமே காட்டுவதால் - முழு அனுபவத்தினையும் கட்டுரையாக இங்கு பதிந்துள்ளேன்.

4 comments:

ஸ்ரீராம். said...

இந்திய நதிகளை இணைக்கும் முயற்சியை எடுங்கப்பா...ன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்காம்....அபபடி தப்பித் தவறி நடந்து விட்டால் வாய்ப்பு இருக்கா என்று பார்க்கலாம்!! ஆனால் ஏதோ ஒரு வற்றாத நதி ஒன்று வட நாட்டில் வற்றிப் போனதாக சமீபத்தில் செய்தித் தாளில் படித்ததும் நினைவுக்கு வருகிறது.

கௌதமன் said...

மோ சி பாலன் கவிதைகள், மோ சி பாலன் பதிவுகள் ஆனதில், நிரம்ப சந்தோஷம். மோகனகிருஷ்ணனுக்குத் தெரியாததையா கௌதமனும் சிவபாலனும் சொல்லிவிட முடியும்? மோகன கிருஷ்ணன் த்ரிகால ஞானி - சும்மா உங்களை / உங்கள் மூலமாக எங்களையும் ஆழம பார்க்கிறார். அவர் கேள்வியினால் உங்களுக்கு வந்தது கவிதை; எங்களுக்கு வந்தது எதிர்கால சிந்தனை! அடிக்கடி உங்கள் அனுபவங்களைப் பதிவு போடுங்கள். வாழ்த்துகள்.

Mani said...

நண்ப,
ஒரு காலத்தில் சென்னைக் கடற்கரை மிக அருகில் இருந்ததென்று கேட்டதுண்டு. சிறு வயதில் அதை ஏற்க இயலவில்லை. சமீபத்தில் ட்சுனாமி அதை விளக்கி விட்டது. நிலை மாறும் உலகமிது. நம் அறிவிற்கு எட்டிய அளவு எது சரியோ அதைப் புகட்டினால் போதும். மற்றவை காலத்தின் கையில். அறம் செய்ய விரும்பு என்றார் அவ்வை. அறம் செய்க எனவில்லை. சரியானதை செய்ய முழு முயற்சி செய்தல் நலம். விளைவு நமதல்ல. குற்ற வுனர்விற்கு இடம் கொடதீர்.

மோ.சி. பாலன் said...

நன்றி ஸ்ரீராம். உங்கள் வாக்கு பலித்து நதிகள் இணையட்டும்.
நன்றி கௌதமன் - வாழ்த்துக்களை வணங்கி ஏற்கிறேன்.
நன்றி மணி - குற்ற உணர்வு குறைந்தது!