Saturday, July 20, 2013

பொண்ணு

பொண்ணு,

உனக்கு முதன் முதலில் நான் வைத்த செல்லப் பெயர் பொண்ணு என்பது உனக்கு நினைவிருக்கிறதா? இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் இந்தப் பெயர் உனக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

நாளை நமக்குத் திருமணம்.... என் மனைவியான உனக்கு உன் காதலனாக நான் எழுதும் ஒரே கடிதம் இது.

நமது நிச்சயதார்த்ததுக்கும் திருமணத்துக்கும் இடையிலிருந்த இந்த ஆறு மாதங்களை நமக்குத் திருமணமான நாட்களாகவே நான் கருதுகிறேன். நீயோ, பெண்ணென்ற பாதுகாப்பு வளையத்திலிருந்து இவற்றை நம் காதல் மாதங்களாகக் கணக்கிடுகிறாய்.

“ஜோசியக் காரன் இதைவிட நல்ல நாள் கிடையாது என்கிறான்...” “கல்யாண மண்டபம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது..” என்பதான காரணங்கள் கூறி நம் கல்யாணத்தைப் பெரியவர்கள் தள்ளிப் போட்டபோது, காய்ந்த காளையான எனக்கு பெருத்த ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது பார்க்கும்போது இந்த ஆறுமாத "arranged" காதல் மிகவும் அருமையாகத் தான் இருந்திருக்கிறது.

இந்த ஆறு மாத காலத்தில் தான் நீ என்னைவிட வெண்மையானவள் மட்டுமல்ல என்னை விட உண்மையானவள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்த ஆறு மாத காலத்தில் தான் உனது அன்பின் ஆழத்தை அறிந்து கொண்டேன். ஊடல் நாளொன்றில் என்னிடம் கோபித்து "போங்க... உங்ககிட்ட இனி பேசமாட்டேன்" என்றதும் நான் பதைத்துப் போனேன். "இன்னும் ரெண்டு நாளைக்கு எனக்குப் போன் பண்ணாதீங்க" என்ற போதுதான் புரிந்தது என்னோடு பேசாமால் உன்னால் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது என்று.

உனது கைக்குட்டையில் நீ எம்பிராயிடரி செய்திருந்த சிறு பூக்களைப் பார்த்த பின்புதான் உனது கலையுணர்வும் அழகுணர்வும் எனக்குப் புரிந்தது. கல்யாண நகை வாங்க நமது பெற்றோர்களுடன் கடைக்குச் சென்று திரும்பும்போது பெற்றோர்களை முன்னால் நடக்கவிட்டு உன்னிடமிருந்து கைக்குட்டையைப் பறித்து வந்தது நினைவிருக்கிறதா? நீ செய்த பூக்களினால் அந்தக் கைக்குட்டை ஒரு காதல் சின்னமாகி நான் certificate-கள் வைக்கும் பெட்டிக்குள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது!

அவ்வப்போது நாம் தேனீர் அருந்தும் சரவணபவன் வாசலில் ஒருநாள் "எனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுங்கள்" என்று சொன்னபோது தான் நான் கண்டேன் இந்தக் குமரிக்குள் தவழும் குழந்தை!

கல்யாணத்துக்கு முன்பே (பிரம்மச்சாரியாய் இருக்கும் போதே!) சபரி மலைக்குச் சென்று வரவேண்டும் என்று நான் சென்று வந்தபோது நீ கேட்டாய். "ஐயப்பனிடம் என்ன வேண்டி வந்தீர்கள்?". "என் கண்மணி கேட்கும் வரத்தை அருள்வாய் ஐயப்பா" என்று நான் வேண்டியதைச் சொன்ன போது நீ நம்பினாயா என்று தெரியவில்லை. இப்போதும் சொல்கிறேன் இதுதான் நான் இறைவனிடம் வேண்டுவது. என் நண்பன் சொன்னான் "அடப் பாவி.. தசரதன் மாதிரி வரம் கொடுத்து மாட்டிக்கொள்ளப் போகிறாய்". அவனிடம் சொன்னேன்; உன்னிடமும் சொல்கிறேன், நான் தசரதன் போல் நல்ல கணவனாய் இருக்கவே விரும்புகிறேன்.

இறைவன் தருவது இருக்கட்டும் நீ என்ன தருவாய் என்று கேட்கிறாயா?

"உனது வாய் மொழிக்கு என் செவி தருவேன்
உனது இதழில் என்றும் நகை தருவேன்
உனது தலை சாயத் தோள் இரண்டு தருவேன்
நனையாத தலையணை நான் தருவேன்
இருக்கும் வரையில் என்னைத் தருவேன்
இல்லாத போதும் என் நினைவு தருவேன்"

கவிதையின் மிகைகளை மீறி என் எழுத்துக்களில் ஒளிந்துள்ள உண்மை உனக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கும் நேரத்தில்தான் இறைவன் அவன் லீலையைக் காட்டினான் அல்லவா? திருமணத்துக்கு ஒரு மாதம் கூட இல்லாதபோது திடீரென எனக்கு முதுகுவலி அதிகமாகி மருத்துவமனையில் படுக்கும்படி ஆகிவிட்டதே. Disc Prolapsed ஆகியுள்ளது. பத்து நாளைக்கு traction போடவேண்டும் என்று டாக்டர் சொன்னபோது நான் மிகவும் பதறிப் போனேன்". வலி அதிகமாக இருந்ததால் நிற்கவும் முடியவில்லை உட்காரவும் முடியவில்லை.. திருமணத்தைத் தள்ளிபோட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ..?"என்று உனக்கு போன் செய்தேன். நீயோ உறுதியாய்.. "அதெல்லாம் ஒன்றும் ஆகாது. முதுகுவலி சரியாகிவிடும் திட்டமிட்ட நாளில் திருமணம் நடக்கும்" என்றாய். அப்போது தான் எனக்குப் புரிந்தது பெண்மையின் மனோபலம் .. பெண்மையின் நம்பிக்கை. அதோடு நிறுத்தாமல் "அப்படியே வலி குறையவில்லை என்றாலும் ரிசப்ஷன் கொஞ்ச நேரம் நின்று adjust பண்ணிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னும் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாதென்று.."டோண்ட் வொரி..ஐ கேன் வெயிட்" என்றாயே என் கண்ணம்மா..விம்மி விம்மி அழுதுவிட்டேன்.

இதோ... இன்று மாலை இக்கடிதத்தைக் கொடுத்துவிட்டு உன்னுடன் கைகோத்து நிற்கப்போகிறேன். வலியெல்லாம் போய்விட்டது..... அண்ட் யூ டோண்ட் ஹேவ் டு வெயிட்!

திருமண வரவேற்பு முடிந்ததும் பரிசுப் பொருட்களைப் புறந்தள்ளிவிட்டு இந்தக் கடிதத்தை நீ படிப்பாய் என்று தெரியும். இது இன்றைக்கான கடிதமன்று என்றைக்குமான கடிதம். புகைப்பட ஆல்பம் பார்ப்பது போல் பின்னொரு காலத்தில் நாமோ நம் பிள்ளைகளோ இக்கடிதத்தைப் படித்து ஒரு சிறு புன்னகை பூத்தோம் என்றால் நம் காதல் வென்றுவிட்டது என்று அர்த்தம்.

நாளை சீக்கிரம் எழ வேண்டும். படுத்துத் தூங்கிவிடு-------இன்றொரு இரவு!

இப்படிக்கு

உனது அன்புக் கணவன் (இதிலும் இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் நன்றாகப் பொருந்துகிறது தானே?)


______________________________________________________________

திடங்கொண்டு போராடு காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக நான் எழுதிய காதல் கடிதம் இது. இதில் கலந்துகொள்ள எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன் மற்றும் KG கௌதமன் இருவருக்கும் எனது நன்றி. இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதி அளிக்கிறேன்.

13 comments:

ஸ்ரீராம். said...

காதல் வாழ்வில் ஒற்றைக் கடிதம்? சுவாரஸ்யம். ன ண பொருத்தங்களும். லிங்க் சீனுவுக்கு அனுப்பி விட்டீர்களா?

திண்டுக்கல் தனபாலன் said...

// "அதெல்லாம் ஒன்றும் ஆகாது. முதுகுவலி சரியாகிவிடும் திட்டமிட்ட நாளில் திருமணம் நடக்கும்" // என்னவொரு நம்பிக்கையான ஆறுதல்... காதல் கவி வரிகளும் அருமை...

போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

மோ.சி. பாலன் said...

ஸ்ரீராம்,
சீனுவுக்கு அனுப்பிவிட்டேன்.
நேரில் சந்திப்பது, போனில் பேசுவது என்றாகிவிட்டதால்- இது எழுத நினைத்த - ஒற்றைக்கடிதம். ( Greeting Cards தவிர )

தனபாலன். ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி.

Tamizhmuhil Prakasam said...

அருமையான காதல் கடிதம்.கவிதையும் அருமை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவருக்கும் அன்பு  said...

"உனது வாய் மொழிக்கு என் செவி தருவேன்
உனது இதழில் என்றும் நகை தருவேன்
உனது தலை சாயத் தோள் இரண்டு தருவேன்
நனையாத தலையணை நான் தருவேன்
இருக்கும் வரையில் என்னைத் தருவேன்
இல்லாத போதும் என் நினைவு தருவேன்" கவிதையில் தொக்கி நிற்கும் காதல் அருமை ..........வாழ்த்துக்கள்

VOICE OF INDIAN said...

அருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....

மோ.சி. பாலன் said...

தமிழ்முகில், சரளா, பாலா - உங்கள் ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி -

Manimaran said...

பொண்ணை பொன்னாக நினைத்து எழுதிய கடிதம் சும்மா கிண்ணுனு இருக்கும்... அருமை..!

Manimaran said...

/ இருக்கும்/ -இருக்கு.

மோ.சி. பாலன் said...

நன்றி மணிமாறன்

Ranjani Narayanan said...

// இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் இந்தப் பெயர் உனக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.//

மூன்றாம் சுழியாருக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். :)

'ண, ன ' என்று ஆரம்பித்து அதிலேயே முடித்தது சுவை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

வெண்மையானவள் உண்மையானவளிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்தேன். மிகவும் ரசித்த கடிதம். பாராட்டுக்கள்.

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி ரஞ்சனி, அப்பாதுரை