Sunday, January 14, 2018

சர்க்கரைப் பொங்கல்

பொங்கலுக்கு விடுப்பு இல்லாததால் ஒரு நாள் பயணமாக அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு வர அதிகாலையில் ஊருக்குக் கிளம்பினோம்.

வழியில், 108 திவ்விய தேசங்களில் ஒன்றான திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமானை தரிசிக்கலாம் என்று வண்டியை நிறுத்தினோம். வண்டிக்கு டோக்கன் போட்ட பெரியவரிடம் பக்கத்தில் ஏதாவது தேநீர்க்கடை உள்ளதா என்று கேட்டோம். இல்லை என்றதால் டோக்கன் போட்டுவிட்டு கோயிலுக்குச் சென்றோம். கோயிலில் பராமரிப்புப் பணி நடப்பதால் மூலவர் சன்னதி மூடப்பட்டிருந்தது. உற்சவரை தரிசித்துவிட்டு வரும்போதுதான் தாயார் சன்னதி திறந்திருப்பதைக் கண்டோம். தாயாரிடம் பெருமாளின் விண்ணப்பத்தைச் சேர்த்துவிட்டுப் புறப்பட்டோம்.

வண்டியை எடுக்கும்போது டோக்கன் போட்ட பெரியவர் ஓடி வந்தார். ஐயா முன்னாடியே பணம் கொடுத்திட்டேனே என்பதற்குள் "இந்தாங்க பிரசாதம். பார்த்து வண்டி ஓட்டுங்கள்" என்று ஒரு பையைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று தொன்னைகளில் நிரம்பும் அளவிற்கு சூடான சர்க்கரைப் பொங்கல் அதில் இருந்தது. கோயில் பணியாளர் என்பதால் அவர் பங்காகப் பெற்ற காலைப் பிரசாதம்தான் அது என்று எண்ணுகிறேன். டீக்கடை இல்லை என்று சொல்லிவிட்டோமே இதையாவது சாப்பிடட்டும் என்ற மனித நேயத்தால் தன் பங்கைக் கொடுத்தாரோ என்று நெகிழ்ந்தோம்.

மனித நேயம் தவிர்த்து ஆன்மிக நோக்கில் இதைப் பார்த்தால் பசியோடு வந்து தம்மைத் தரிசித்த பிள்ளைகளுக்குத் தாயாரின் கருணையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இல்லை தனது சன்னதி மூடியிருந்ததால் தரிசனம் கிடைக்காமல் வருந்தியிருப்போமோ என்று விஜயராகவப் பெருமாள் தான் ஆறுதல் செய்தாரோ? இல்லை நேற்று மார்கழி முடிகிறதே என்று அவசரமாய் திருப்பாவை முப்பது பாக்களையும் படித்ததற்கு ஆண்டாளின் பரிசுதானோ?

எப்படியோ, நெய் சொட்டச் சொட்டச் சூடான சர்க்கரைப் பொங்கல் அதிகாலை முதல் அன்னமாக இந்த பொங்கல் நன்னாளில் எங்களுக்கு வாய்த்ததில் மனம் நிறைந்தது.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

2 comments:

iramuthusamy@gmail.com said...

இனிய அனுபவம்

மோ.சி. பாலன் said...

நன்றி முத்துசாமி ஐயா !