Thursday, January 11, 2018

முந்திவிரித்த பாடல்


முந்தி விரித்த செம்பட்டுக் கம்பளத்தில்
சேற்றுக் கறை பூசி நீ செருக்காகப் போனாயோ?

முந்தி விரித்த நம் முன்னோரின் வாய்ச்சொற்கள்
சிந்தி விழும் உன் செவியில் சேர்க்காமல் போனாயோ?

முந்தி விரித்த கொடும் கருநாகப் படம்போல
சீறி விழும் வார்த்தைகளில் விஷம் கக்கிப் போனாயோ?

முந்தி விரித்த துண்டில் வந்து விழும் காசெல்லாம்
சிதறாமல் சேகரித்து சீட்டியடித்துப் போனாயோ?

முந்தி விரிந்த சபை சேர்ந்திருந்த சான்றோரை
மந்திகள் என்று நீ மதி மயங்கிப் போனாயோ?

முந்தி விரிந்த உன் வான விதானம்விட்டு
மஞ்சள் போர்வையின் கீழ் வாடகைக்குப் போனாயோ?

No comments: