Thursday, March 9, 2017

வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்யாதே

கானா பாலா குரலில் கற்பனை செய்து எழுதினேன். தேவையான வரிகளை திரைப்படம் / குறும்படத்தில் பயன்படுத்தலாம்.

-------------

வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்யாதே - நீ
அட்டிகை செஞ்சி வட்டிக்கு வைக்காதே

சீட்டுக்குப் பாதி கொடுத்து
சேட்டுக்குப் பாதி கொடுத்து
வீட்டுக்குக் கொண்டு போகாதே வெறுங்கை நீ
விழுந்துடுவ ஏறாதே முருங்கை

மானியமா கொடுப்பான்?
சூனியமா கெடுப்பான்
மாட்டிக்கிட்டு முழிச்சி நிக்காதே நீ
முழிச்சிக்கடா மாட்டிக்கிடாதே

வெத்தலை பாக்கு கொடுப்பான்
பத்தலையான்னும் கேப்பான் - அப்புறம்
நடுத்தெருவில் நியாயம் பேசுவான் - உன்னையும்
நாலு பேரு முன்னாடி ஏசுவான்

எழுதப் படிக்க வேணாம்
கணக்கு மட்டும் போடு
கழுதை கூட கணக்கு போடும்டா - அதுவும்
எடையைப் பார்த்து பொதியைச் சுமக்கும்டா

மணலில் கோட்டை கட்டும்
குழந்தை கூட அறியும்
மழையில் மணலும் கரைந்து போகுமடா - பெரும்
கடனில் வரவு தொலைந்து போகுமடா

வளையல் கழட்டிக் கொடுத்தா
கம்மலைக் கழட்டிக் கொடுத்தா
மஞ்சக் கிழங்க மாட்டிட்டுக் கிடக்கா- நகைய
மொதல்ல போயி மீட்டுட்டு வாடா

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா... ரசித்தேன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தம். அருமை.

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன், ஜம்புலிங்கம் ஐயா