Friday, May 31, 2013

மேற்கத்திய சிந்தனையும் தமிழ்ச் சிந்தனையும்


ஏழாம் வகுப்பு தமிழ் வீட்டுப் பாடத்துக்கு ஏதோ PhD thesis-க்கு மூளையைக் கசக்குவதுபோல் நானும் என் மகனும் தமிழ்ப் பழமொழிகளைத் தேடிக் கொண்டிருந்தோம். "ஆங்கிலப் பழமொழிகள் தெரிஞ்சாலும் சொல்லுடா.. தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

"Two Birds in One Stone" என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. அதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை ஏற்கனவே எழுதிவிட்டிருந்தோம்...... "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்".... கல் ஒன்றுதான் ஆனால் தமிழன் மாங்காயை அடிக்கிறான். ஆனால் வெள்ளைக்காரன் பறவையை அடிக்கிறான் என்ற வித்தியாசத்தை உணர்ந்த உடனே இந்தப் பதிவுக்கான கரு பிறந்து விட்டது!!

தமிழன் எவ்வளவு நல்லவன்? பிற உயிர்களுக்கு தீங்கு செய்ய நினைக்காதவன். வெள்ளைக்காரனுக்கு மட்டும் ஏன் பிற உயிர்களைக் கொல்லும் எண்ணம்? தமிழன் என்ற கர்வத்தில் காலரை உயர்த்திக் கொண்டிருக்கும் போதே வழக்கப்படி நமது technical மூளையும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. ஒரு பறவை மேல் படும் கல் இன்னொரு பறவை மேல் படுவதற்குள் அது உஷாராகி பறந்து விட வாய்ப்புள்ளது.(இந்தக் கதை நான் நமக்கு ஏற்கனவே தெரியுமே.. ஒரு மரத்தில் பத்து பறவைகள் இருந்தன.. வேடன் ஒரு பறவையை சுட்டான் ..மீதி எத்தனை பறவைகள் இருந்தன?.. விடை: எல்லாப் பறவைகளும் பறந்து விட்டன.) எனவே ஒரு கல்லில் இரு பறவைகளை அடிப்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு. ஆனால் ஒரு மாங்காயை அடித்த கல் மேலும் ஒரு மாங்காயில் படுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. விழுகின்ற மாங்காய் மேலும் ஒரு மாங்காயில் பட்டு அதுவும் விழ வாய்ப்புள்ளது. கல்லடியில் கிளையே குலுங்கி பல காய்கள் விழவும் வாய்ப்புள்ளது. தவிர மாங்காய்களுக்கு பறவைகள் போல உஷாராகத் தெரியாது. ( அதனால் தான் இவன் சரியான மாங்காய் என்கிறார்களோ?). இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தமிழனின் சிந்தனையே சிறந்தது என்று ஒப்புக் கொள்கிறீர்களா மக்களே?

சரி இன்னும் ஒரு உதாரணம் பார்ப்போம். வெள்ளைக்காரன் சொல்கிறான் "make hay while the sun shines". தமிழன் என்ன சொல்லுகிறான்? "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்". இப்போது என்னை சில பேர் மடக்க நினைக்கலாம். தமிழன் சோற்றைப் பற்றியே நினைக்கிறான். நெல்லைத் தூற்றி சாதம் வடித்து சாப்பிடுவதே அவன் நினைப்பு. ஆனால் வெள்ளைக்காரன் மாட்டுக்கு வைக்கோல் காயவைக்க நினைக்கிறான் எனவே அவன் சிந்தனையே சிறந்ததென்று சிலர் வாதிடலாம். இங்கு தான் நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்... வெள்ளைக்காரன் மாட்டுக்கு ஏன் அக்கறையாக வைக்கோல் போடுகிறான்? அது கொழு கொழு என்றானதும் அதை வெட்டுவதற்கையா... வெட்டுவதற்கு..!

பி.கு. இது இன உணர்வைத்தூண்டும் கட்டுரை அல்ல. மொழியியலும் மொழி பேசும் மக்களின் வாழ்வியலும் பற்றிய ஒரு நடுநிலைமையான ஆராய்ச்சிக் கட்டுரையே. மேலும் பல உதாரணங்கள் என் உள்ளத்தில் கொட்டிக்கிடக்கின்றன விரித்து எழுத நேரமில்லை.

A bird in the hand is worth two in the bush. ( மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையிலிருக்கும் களாக்காயே மேல்) கறி உணவு vs காய் உணவு

God helps those who help themselves ( மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்). நாமே உதவி செய்து கொள்வதற்கு கடவுள் எதற்கு? நாம் மரம் போல் நின்றாலும் நமக்கு உதவி செய்வது கடவுளின் கடமையன்றோ? இதை சோம்பேறித்தனம் என்ற நோக்கில் பார்க்கக் கூடாது.. எது உண்மையான நம்பிக்கை - முழுமையான surrendering என்ற நோக்கில் பார்க்கவும்.

Birds of same feather flock together. (ஒரே குட்டையில் ஊறிய மட்டை). வெள்ளைகாரனின் நட்பு இனம் சார்ந்தது. நம் ஆட்களின் நட்பு இடம் சார்ந்தது. மட்டைகள் வெவ்வேறு இனமாக இருக்கலாம். ஆனால் அவற்றை இணைப்பது ஒரே குட்டை.

A friend in need is a friend in deed.(உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.).. வெள்ளைக்காரன் சொல்லும் நட்பு தேவையின் போது உதவுவது. நம் ஆட்களின் நட்பு அவிழும் ஆடையைப் பிடிக்கும் கைபோல் தேடி வந்து செய்யும் நட்பு....எது உயர்ந்ததென்று நீங்களே சொல்லுங்கள்..

5 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆழமான அருமையான சிந்தனை
ஒப்பீடுகளும் விளக்கங்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி ஒரு ஒப்பீடு இன்று தான் தெரியும்...!

வாழ்த்துக்கள்...

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி ரமணி, தனபாலன்

கௌதமன் said...

ஆங்கிலப் பழமொழிகளில் பறவைகள்தான் அதிகம் காணப்படுகின்றனவோ? திடீர் சந்தேகம்!