Thursday, October 14, 2010

அன்னைப் பறவை

முடக்குவதற்கல்ல முட்டையில் இட்டது
அடைப்பதற்கல்ல அடைகாத்து  வந்தது
உடைத்து வா வெளியே
நீ பறக்கப் பிறந்தாய்-

உன்னால் நான் பெற்றேன் -
பருந்தை விரட்டும் வீரம்;
உன்னால் நான் பெற்றேன் -
அதிகம் பறக்கும் தூரம்.

அலகு நிறைத்து வருவேன்.
வாய் திற.
வள்ளுவன் பாடட்டும்-
அமிழ்தினும் ஆற்ற இனிதே அன்னையின்
அலகு அளாவிய  அரிசி.

இருளில் தான் வாழ்ந்து வந்தேன்-
இருக்கட்டும் நீ வைத்துக்கொள் இதோ
மின்மினி விளக்கு...
தூரத்து மாமரத்தின் குயிலிசை கேட்கிறதா?
இன்று உறங்கிவிடு-

நாளை ஒன்று செய் -
பெற்ற பொழுதிற் பெரிதுவப்பேன்
கூடுவிட்டு எழும் உன் முதல் சிறகசைப்பில்-

பிறகு என் இறகுகள் உதிர்ந்தால் என்ன?
மனிதன் உதிர்த்தால் என்ன?

1 comment:

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு...