Friday, March 22, 2019

குருவிகள் தினம் - மார்ச் 20


#ramblingthoughts

கம்பங்கதிரிலிருந்த முத்து ஒன்று "குருவி எங்கே? குருவி எங்கே?" என்று கத்திக்கொண்டே இருந்தது. குருவிதான் தன்னை உண்ண வேண்டும் என்று குறியாயிருந்தது அந்த முத்து. ஆனால் அதை நெகிழிப்பையில் போட்டு விற்பனைக்கு வைத்துவிட்டார்கள். அப்போதும் கத்திக்கொண்டே இருந்தது. அதன் ஓலம் தாங்காத மற்ற முத்துகள் அதை ஒரு ஓட்டை வழியே வெளியே தள்ளிவிட்டன.

'கம்பும் தன் வாயால் கெடும்' என்பதுபோல் கீழே விழுந்த முத்தின் "குருவி எங்கே?" ஓலம் கேட்டு எறும்புகள் வந்து அதைத் தூக்கிச் சென்றன. அதிர்ஷ்டவசமாய் வழியில் எறும்புகள் பாரம் இறக்கிவைத்த ஒரு நொடியில் உருண்டு தப்பித்தது அந்தக் கம்பு முத்து. குருவிக்குத்தான் உணவாவேன் என்று "குருவி எங்கே? குருவி எங்கே?" என்று கத்திக்கொண்டே இருந்தது. ஓலமிட்டு ஓலமிட்டு மயங்கிவிட்டது அந்த முத்து.

ஒருநாளா இரண்டு நாட்களா என்று தெரியவில்லை. மயக்கத்திலிருந்து கண் விழித்த கம்பு முத்து திகைத்தது. அதற்கு வேர்விட்டு சிறிய முளை கிளம்பியிருந்தது. அசையமுடியாமல் அழுதழுது மரித்துப்போனது அந்த முத்து. அதன் மறைவில் பிறந்தது புதிய செடி.

பிறிதொருநாள் இந்தச் செடி பெரிதான பிறகு அதில் பறித்த கம்பை மாவாக்கி உணவகம் ஒன்றில் பாஜ்ரா ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த ரொட்டிக்காகக் காத்திருந்த ஒரு சிறுமி, அவள் மேசையில் வைத்திருந்த தாளில் புள்ளிகளை இணைத்துப் படம் வரைந்து கொண்டிருந்தாள். ரொட்டி வந்ததும் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு ரொட்டியை ரசித்துச் சாப்பிட்டாள் சிறுமி. அப்போது ரொட்டியின் சிறு விள்ளல் ஒன்று தாளில் வரைந்த குருவியின் அலகின்மேல் விழுந்தது.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

குருவிகள் தினத்திற்காக சிறப்புப் பதிவு....

படங்களில் மட்டுமே குருவிகளைப் பார்க்க வேண்டிய நிலை.... :(

மோ.சி. பாலன் said...

வேதனையான உண்மை வெங்கட்