Wednesday, November 11, 2015

தவிர்க்கமுடியாத தீபாவளி

சின்னதாய் ஒரு ஸ்மைலி முதற்கொண்டு அழகிய படங்களுடனான வாழ்த்து மடல்களும் அலாரத்துடன் சேர்ந்துகொண்டு அலைபேசியை அதிகாலையிலேயே உசுப்பிவிட, உற்சாகமாவே விடிந்தது எனது தீபாவளி. மழை என்கிற காரணத்தினாலோ, தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்குச் செல்லவில்லை என்கிற காரணத்தினாலோ, தீபாவளி கொண்டாடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

உறவினருடன் சேர்ந்து சாப்பிடுகையில் தவிர்க்க முடியாத உணவுப் பதார்த்தங்களும், அதிரசம் மற்றும் இனிப்பு வகைகளும் எனது உணவுக் கட்டுப்பாட்டை 'இன்று ஒரு நாள் மட்டும்' என்று தளர்த்திவிட்டன.

தீபாவளியன்று சூழல் மாசுபடுத்தும் வாண வெடிகளைத் தவிர்ப்பது என்ற கொள்கையுடன் இருந்த எனது மகனையும், நண்பர் ஒருவர் கொடுத்த சிவகாசி பரிசுப் பெட்டி 'இந்த ஒரு முறை' என்று தளர்த்திவிட்டது.

கம்பி மத்தாப்புகளை ஈரமண்ணில் நட்டுவைத்துக்கொளுத்தி இவைதான் நான் விடும் ராக்கெட்டுகள் என்று மகள் செய்த குறும்பையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்.

தொலைக்காட்சியை வெகுவாகத் தவிர்த்துவிட்டோம் என்றாலும் வேலை எதுவும் இல்லாத மதிய வேளையில் வேலை இல்லாப் பட்டதாரி படம் பார்த்தோம் (முன்பே பலமுறை பார்த்திருந்தாலும்). அதில் வரும் ஒரு வசனம் சிந்திக்கவைத்தது " முன்பெல்லாம், இல்லாதவங்க இருக்கிறவங்ககிட்ட திருடினாங்க.. இப்போதோ, இருக்கிறவங்க இல்லாதவங்ககிட்ட திருடறாங்க.."

இதில் நமது பங்கு ஏதாவது இருக்கிறதா தவிர்ப்பதற்கு?