Monday, August 17, 2015

ப.பி: கரையெல்லாம் செண்பகப்பூ

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவல் படித்தேன்.
அவரின் வழக்கமான விறுவிறு கிளுகிளு பாணியில் எழுதப்பட்ட நாவல். ஆனால் வித்தியாசமாய் கிராமத்துச் சூழலில் அமைந்த மர்மக் கதை. நாயகன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு கிராமத்துக்கு வருகிறான் என்பதால் சுஜாதா தனது முன்னுரையில் வானமாமலை அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அவர் புத்தகத்திலிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களை இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார்.

அந்தப்பாடல்களில் இரண்டு எனக்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நினைவுபடுத்தின. அதைப் பகிரவே இந்தப் பதிவு ..

1. மாமரத்துக் கீழே நின்னு
மங்கை குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இரை உண்ணாது.

பரிவு காட்ட ஏதோ ஒரு உயிர் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.. எல்லா காலத்திலும்.. அது நாய் பூனை என்ற வளர்ப்புப் பிராணி மட்டும் இல்லாமல் - மாமரத்து மயிலாகவும் இருக்கலாம் என்பதே இந்தப் பாடலின் சிறப்பு.

இந்த நாட்டுப்புறப் பாடல் நினைவு படுத்தும் இசைஞானியின் பாடல் "மாங்குயிலே பூங்குயிலே" என்று நான் சொல்லவும் வேண்டுமோ? " மாமரத்துக் கீழிருந்து மங்கை அவள் குளிக்க அந்த மாமரத்து மேலிருந்து புலம்புவது யாரு?"

2. திருச்செந்தூர் ஓரத்திலே
விரிச்சதலைப் பாலத்திலே
விரும்பிச்சொன்ன சத்தியங்கள்
வீணாகப் போகுதையா...

என்ற இன்னொரு நாட்டுப்புறப்பாடல் எனக்கு "ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி.." என்ற பாடலின் மெட்டை நினைவு படுத்தியது.