Friday, April 8, 2011

உனையன்றி யாரறிவார்

உனையன்றி யாரறிவார் என் துயரங்கள்
உனையன்றி யார் துடைப்பார்?
ஐங்கரன் தோழன் சிவ நேசன் உமை பாலன் எனதையன்.. (உனையன்றி)

குறையாத பெருஞ்செல்வம் தேடி… என்றும்
கலையாத கலைஞானம் நாடி
விலகாத உயிர் என்றும் வேண்டி என்
உடலிங்கு படும் பாடும் ஏனோ?
ஒரு- கனிக்காக உலகத்தை வலம் வந்த உமைபாலா
உனையன்றி யாரறிவார் என் உயர்விங்கு
உனையன்றி யார் அருள்வார்?

சினம் கொண்ட இனம் என்னைச் சூழ... எந்தன்
குணத்தாலும் பிறர் உள்ளம் வாட
பகையென்றும் பழியென்றும் வாழ்வில்
அடர் புகையாக இடர் சூழ்தல் ஏனோ?
வெகு- சினத்தாலே மலையேறி தனி நின்ற சிவபாலா
உனையன்றி யாரறிவார் என் சினமிங்கு
உனையன்றி யாரறுப்பார்??

மகவென்றும் மனையென்றும் வாழ்ந்து..
முக-நகும் நட்பில் நெடுங்காலம் தோய்ந்து
ஆசைகள் நிலையான மண்ணில் - மனம்
அன்புக்கு அலைபாய்தல் ஏனோ?
வள்ளி- மணம் கொள்ள மத யானை துணைகொண்ட மணவாளா
உனையன்றி யாரறிவார் என் துணையிங்கு
உனையன்றி யார் வருவார்?

1 comment:

ஸ்ரீராம். said...

முருகனை ஜெபி மனமே...!நானன்றி யார் வருவார் என்ற டி ஆர் மகாலிங்கம் பாடல் நினைவுக்கு வருகிறது!