Monday, September 21, 2015

உழுதவன் பசியும் உழைப்பவன் வறுமையும்

உழுதவன் பசியும்
உழைப்பவன் வறுமையும்
இந்த நாட்டிலே விந்தையடா
ஆள்பவனுக்கும் ஆண்டவனுக்கும்
ஆடம்பரத்தில் சிந்தையடா

வியர்வையும் சிந்தி
கண்ணீரும் சிந்துதல்
எந்த ஊரிலே தர்மமடா?

செலவினை மீறிய வரவென்பதிங்கு
செல்வந்தருக்கு மட்டும் ஏனடா?
உழுதவன் விளைவித்த பொருளுக்கு
விலை வைக்கும் உரிமை
வியாபாரிக்கு ஏனடா?

ஓய்வுக்கும் ஊதியம்
வாய்த்தவனுக்குக்
கடமையில் கவனம் ஏதடா?
லஞ்சம் வாங்கித் தின்பவனுக்குக்
கொஞ்சமும் இரக்கம் ஏதடா?
அரசியல் என்பது இந்த நாட்டிலே
ஏழை அரிசியில் கலந்த கல்லடா

பாரியும் ஓரியும்
வள்ளலென்று வாழ்ந்த
பாரத நாடும் இது தானடா
வெள்ளையரின் பின்
கொள்ளையரெனில் இனி
மக்களின் சகாயம் யாரடா?

2 comments:

தனிமரம் said...

கவிதை அருமை ஐயா!

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி தனிமரம்