Tuesday, July 21, 2015

அழகொழுகும் அருவி

என்ன சொல்லிப் பாடுவது
அழகொழுகும் அருவியை?

அடர் மரச் செறிவினில்
தொடர் மலைச்சரிவினில்
சுடர் மின்னல் அடிக்கின்ற
படர் வெள்ளிக் கொடியொன்று
வேர் காண வீழ்ந்ததுபோல்
அழகொழுகும் அருவியினை
என்ன சொல்லிப் பாடுவது?

வெள்ளிப்பனி மலையுருக்கிக்
கிள்ளிக் கொஞ்சம் தருகுதோ?
வான் மழைக்கு நிகராக
அள்ளி வந்து தருகுதோ?
உள்ளமெல்லாம் வெள்ளையென
சொல்லிக் கொள்ள வருகுதோ?
உள்ளுறைந்த மீன்களுக்குத்
துள்ளச் சொல்லித் தருகுதோ?
என்ன சொல்லிப் புகழ்வதிந்த
அருள்நிறைந்த அருவியை?

அன்னைபோல் தலைகோதி
அங்கமெல்லாம் நீவுகையில்
அயர்வும் வலிகளும்
வியர்வையும் கண்ணீரும்
கரைத்தெடுத்து-
கரைகளற்ற பெருவெளியில்
கருணை பொழியும் அருவியினை
என்ன சொல்லி வாழ்த்துவது?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... குற்றாலம் சென்று வந்த ஞாபகம் வந்தது...

மோ.சி. பாலன் said...

nandri Dhanapalan.. ithu kutralam pazhaiya aruviye thaan