Monday, February 29, 2016

கன்னி பேக்கும் காட்டன் பெட்டியும்

"செக்குருட்டி அண்ணா கன்னி பேக் ஏதாவது இருக்குதா பாருங்க...."
பல சரக்குக் கடை ஒன்றில் (super market) நடைவண்டியில் பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது கல்லாப்பெட்டியிலிருந்த பெண் இப்படிச் சத்தம் போடுவதைக் கவனித்தேன்.

வயதான தம்பதியினர் நிறைய பொருட்களை வாங்கிவிட்டு எடுத்துச் செல்லப் பைகள் இல்லாமல் காத்திருந்தனர். நெகிழிப் பைகள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்பதற்காக பைகளை காசுகொடுத்துத்தான் வாங்கவேண்டும் அந்தக் கடையில். ஆனால் அந்தத் தம்பதியினரோ அந்தப் பெண்ணிடம் "மற்ற கடைகளில் இலவசமா பைகள் தரும்போது நீங்கள் மட்டும் ஏன் காசு கேட்கிறீர்கள்?" என்று வாதிட்டுக்கொண்டிருந்தனர். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சரக்குகளைப் பிரித்துப்போட்ட ஏதாவது சாக்குப்பைகளைக்(gunny bag) கொடுப்பார்கள் போலும்.
gunny bag-ஐ கன்னி பேக் என்று கன்னித்தமிழில் ஒரு கன்னிப்பெண் சொன்னதை உங்களிடம் பகிராமல் எப்படி இருப்பது? அதனால்தான் இந்தப் பதிவு. (Kerosene கிருஷ்ணாயில் ஆனது போலத்தானே இதுவும்? )

இதில் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் நமது தமிழ்மக்கள் ஆங்கிலம் சரியாகத் தெரியாதபோதும் கூச்சப்படாமல் இப்படி பேசிப்பேசி ஆங்கிலம் வளர்ப்பதுபோல் நாமும் தமிழில் பிறமொழி வார்த்தைகளுக்கு இணைச்சொற்களைக் கூச்சப்படாமல் பேசிப்பேசித் தமிழை ஏன் வளர்க்கக்கூடாது என்பது தான். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

கதையின் இரண்டாம் பாதி மிகவும் சிறியது. கன்னி பேக் இல்லை என்பதால் அந்தப் பெண் காட்டன் பெட்டி இருக்கிறதா என்று கேட்டார். காட்டன் பெட்டி என்றால் carton என்று ஒருவாறு ஊகித்தேன். சரிதானே?

அதை செக்குருட்டி கொடுத்தாரா என்பது கதைக்குத் தேவையற்றது. இருங்கள் .. இருங்கள்.. செக்குருட்டி என்ற வார்த்தையும் கொஞ்சம் ஆராய்ந்துவிடுவோம். செக்குபோல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதால் செக்குருட்டி ஆகிவிட்டாரோ?!

Sunday, February 21, 2016

தாய்மொழிதினம்‬

தாய்மொழி தினம் பற்றி என் மகனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆங்கில வார்த்தைகளுக்கு இணைச்சொற்கள் தமிழில் உருவாக்காமல் இருப்பது, தமிழ்ச் சொற்களை விடுத்து ஆங்கில வார்த்தைகளை தமிழில் கலந்து பேசுவது இரண்டுமே நமது மொழிவளத்தை பாதிக்கின்றன என்று உணர்ந்தோம்.

சில நாட்களுக்கு முன் ஒரு குறும்பதிவில் ஷவர் என்பதற்கு "நீர்த்தூவி" என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன் என்று கூறி நீ இதற்கு வேறொரு இணைச்சொல் யோசித்துச் சொல் என்றேன்.. "அருவிகருவி" என்றான்!

‪#‎தாய்மொழிதினம்‬

Friday, February 19, 2016

தோற்றுப்போகிறேன்

"ஏய்" என்றவனிடம்
"ஏய்" என்று வீரம் காட்டிவிடுகிறேன்
சிறு குழந்தையின் முன்
மண்டியிட்டு மழலையாகிறேன்-
லுல்லு லுல்லு பேசி.
இறைவனிடம் கூட
படைப்பதிலும் காப்பதிலும்
நானும் நீயும் ஒன்றென்று
சொல்லிவிடமுடிகிறது.
ஆனால்
எதைச்செய்தும்
உனது மென்காதலின்
முன்நிற்க முடியாமல்
தோற்றுப்போகிறேன்
செஞ்சாந்தாய்க் குழைந்தும்
சிறு கீற்று நிலவிடம்
தோற்றொளியும்
அந்திச் சூரியனைப்போல்
‪#‎காதல்_மாதம்‬

Friday, February 12, 2016

சிரிப்பதுபோல் ஒரு செல்ஃபி

பார்க்கவேண்டும் போலிருக்கு
படம் ஒன்று அனுப்பி வையேன்...
அம்மா அப்பாவுடன் நிற்கும் அந்த
அமைதிப்படம் வேண்டாம்.
தோழிகளுடன் அரட்டைக்கச்சேரி?
அம்மா, தாயே, அவர்கள் எனக்கு அலர்ஜி!
அண்ணனின் பிள்ளைகளுடன்
அவர்களைப் போல் நீயும்
வண்டுக்கண் காட்டும்
வண்ணப்படம் அழகுதான்.
ஆனாலும் அது வேண்டாம்.
ம்ம்ம்...
இவைகளை நான் தள்ளியதால்
உனது தனிப்படம் கேட்பதாய் எண்ணி அந்த
ஹால்டிக்கட் போட்டோவை அனுப்பிவிடாதே!
தேர்வு பயம் தொற்றிக்கொள்ளும் எனக்கும்!
சிரிப்பதுபோல் ஒரு செல்ஃபி எடுத்தனுப்பு.
நான் உன்னைப் பார்க்கும்போது
நீ என்னைப் பார்ப்பாயே
அந்த முகபாவம் முக்கியம்!

பேரமைதி

பள்ளியறையில் உன் நினைப்பைப்
பித்தமென்று தள்ளினேன்
பூசையறையிலும் தொடர்ந்த
உன் நினைப்பைப்
பக்தியென்று புரிந்துகொண்டேன்
நீ விலகிச் சென்ற நாள்முதல்
எனக்குப்
பாலைவன தாகமடி....
துயர் அழுத்தும் மூச்சடைப்பில்
உன் நினைப்பே
என் உயிர்ப்பிடிப்பு...
அருகில் நீ வரும் நாளில்
துடிப்புகள் அடங்கி
சவமென நான் உணர்வழிப்பேன்
அன்று நான் கொள்வேன்
பேரமைதி

Thursday, January 14, 2016

அருண மகராசா


படியளந்த பூமியிலே
பஞ்சம் பசி இருக்குதான்னு
பரிவோடு நம்மகிட்ட
பகலவரும் கேட்குறாரு

புத்தம்புதுப் பானையிலே
பச்சரிசிப் பொங்கல்வைத்து
அன்றாடம் பொங்குறத
அவருகிட்ட காட்டிடுவோம்

வெறும் சாதம் போதுமோ
வேறு சுவை ஏதும் உண்டோ?
வெளக்கமாக சொல்லும்படி
வெளக்குசாமி கேட்குறாரு

காய்கறிகள் கிழங்குவகை
பழங்களெல்லாம் படையல் போட்டு
கரும்பு ரெண்டு வெட்டி வச்சி
கதிரவனுக்கு காட்டிடுவோம்

சுவையாக உண்டுறங்கி
சோம்பலும்தான் ஏறிடுமோ?
ஆதங்கத்தோடு அந்த
ஆதவரும் கேட்குறாரு

ஜல்லிக்கட்டு காளையோடு
மல்லுக்கட்டி ஜெயிச்சிடுவோம்
வீரமுள்ள ஜனங்களுன்னு
வெளையாடிக் காட்டிடுவோம்

மனுஷனுக்கு மட்டும்தான்
மகிழ்ச்சியான வாழ்க்கையோ?
கரிசனத்தோடு அந்த
கதிரவரும் கேட்குறாரு

கொம்புசீவி மணிகள் கட்டி
மாடு கன்னை மந்தையிலே
மாலை மயங்குமுன்னே
மகிழ்ச்சியோடு கூட்டிடுவோம்

வேறு ஏதும் குறைகளுண்டோ
வேதனைகள் எதுவும் உண்டோ?
சூசகமாக அந்த
சூரியனார் கேட்குறாரு

வள்ளலுக்கு வள்ளல் அந்த
கர்ண மகராசா அந்த
கர்ணனுக்கே தகப்பன் நீங்க
அருண மகராசா
நீங்க ஆதரிக்கும் வரைக்கும்
இங்கு அல்லல் ஏதும் இல்லையின்னு
ஆர்ப்பரிச்சிக் கூவிடுவோம்
பொங்கலோ பொங்கல்

Wednesday, January 13, 2016

தொழில் தர்மம் - சிறுகதை

'பரமசிவம் அரிசிக்கடை'. அப்பாவின் பெயரில் கடை வைத்ததில் ரொம்பவே மகிழ்ச்சி முருகனுக்கு. அதுவும் சேட்டுக் கடைக்குப் பக்கத்தில் தனது கடை அமைந்ததில் மிகவும் பெருமிதம்.

இந்த சேட்டிடம்தான் அப்பா எவ்வளவு கடன் வாங்கியிருப்பார்? அசலைவிட பல மடங்கு அதிகமாய் எவ்வளவு வட்டி கட்டியிருப்பார்? பணம்போனது ஒரு பக்கம் இருக்க, அம்மாவின் தாமரைச் செயின் கடனைத் திருப்பமுடியாமல் மூழ்கிவிட்டதை ஒருபோதும் மறக்கமுடியாது அவனால். "எங்க அம்மாவுக்கு அவங்க அம்மா போட்ட செயின்..." என்று அம்மா அடிக்கடி புலம்புவதும், "ஏய்.. உங்க அம்மாவும் போயிட்டாங்க.. அவங்க அம்மாவும் போயிட்டாங்க.. செயின் போனா என்ன? போடீ.. " என்று அப்பா அடக்குவதும் முருகன் வீட்டில் வாடிக்கை.

பரமசிவமும் சேட்டிடம் கேட்டுப்பார்த்தார் "பணம் வேணா கூடப்போட்டுத் தாரேன்.. அந்த நகை கெடைக்குமா பாருங்க சேட்டு..." "பரமசிவம் உனக்குத் தெரியாதா எங்க தொழில்.?. மூழ்கின பொருள உடனே உருக்க அனுப்பிச்சிடுவோம்.. இருந்தா தரமாட்டானா?"

தாத்தா காலத்துலயும்தான் பயிர் வெச்சாங்க. வீட்டுலேயே விதை இருக்கும். மாட்டு ஏர். சாணி உரம். போதுமான மகசூல். நிம்மதியா வாழ்ந்தாங்க. இந்தக்காலத்துல பசுமைப் புரட்சி அதிக மகசூல் என்று சொன்னவங்க உரம் மருந்துன்னு அதிக செலவாகும்னு சொல்லலையே. சேட்டுகிட்ட கடன்வாங்கி வியாபாரிகிட்ட பணம்கொடுத்து விவசாயிக்கு மிஞ்சுவதுதான் என்ன?

முருகன் பெரியவனாகி அப்பாவுக்குத் தோள்கொடுத்து உழைத்தபிறகே குடும்பம் மீண்டும் தலைதூக்கியது. விவசாயத்தோடு வண்டி லோடு அடிப்பது அரிசி தயார்பண்ணி கடையில் போடுவது என்று கொஞ்சம் கொஞ்சமாய் கடன்களை அடைத்தான்.

ஒரு சமயம் அப்பாவுடன் கடைவீதியில் முருகன் சென்றபோது "என்னாப்பா பரமசிவம் கடைபக்கமே காண முடியல" என்று சேட்டு கேட்டபோதுதான் அவர் கடைபக்கத்திலேயே சொந்தமாய் கடைபோட வேண்டும் என்ற எண்ணம் முருகனுக்கு உதித்தது. உங்க கடைப்பக்கம் கடன்வாங்க வந்த காலம் போச்சு சேட்டு. இப்போ நெனச்சா சொந்தமா கடையே போடமுடியும் என்று நினைத்தவன் அதை நிறைவேற்றியும் விட்டான். அதுமட்டும் அல்ல. சேட்டு வீட்டுக்கு அவன்தான் இப்போது அரிசி சப்ளை செய்கிறான்.

கல்லாவில் அமர்ந்தபடி பழைய எண்ணங்களில் முருகன் மூழ்கியிருந்தபோது, தொப்பையைத் தூக்கிக்கொண்டு சேட்டு அவன் கடைக்குள் நுழைந்தார். வழக்கமாய் வேலைசெய்யும் பையனிடம் அரிசிக்குப் பணம் கொடுத்து அனுப்புபவர் இப்போது அவரே வந்திருந்தார்.

"என்னப்பா முருகா வழக்கமா ஒரு மூட்டை அரிசிக்கு சீட்டு அனுப்புவ. இப்ப ரெண்டு மூட்டைன்னு எழுதியிருக்க?"

"போன வாரம் உங்க வீட்ல அஞ்சி கிலோ அரிசி கேட்டிருந்தாங்க அனுப்பிவிட்டேன். அஞ்சி நாள் அதிகமாச்சுனா ஒரு மாசத்து வட்டி கேட்பீங்க இல்ல? அதேபோல அஞ்சி கிலோவுக்கு ஒரு மூட்டைன்னு எழுதினேன்"

"முருகா... அது எங்க தொழில் தர்மம். நீ அரிசி எடைக்கு ஏத்த காசு வாங்கிக்க.."

"ஹ ஹ ஹ.. இதச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன் சேட்டு. வெளையாட்டுக்குத்தான் அப்படி எழுதினேன். ஒரு மூட்டைக்கு காசு கொடுங்க! "

"அப்போ அந்த அஞ்சி கிலோ?"

"சேட்டு, நான் வியாபாரம் பண்ணாலும் விவசாயிதான். இதான் எங்க தர்மம். அஞ்சி கிலோவ தள்ளி விடுங்க"

Friday, January 8, 2016

பசுவும் மனிதனும்

கன்று மறந்து கறந்தோர்க்கு பால்தரும்
தின்று செரிக்காத புல்லை அசைபோடும்
துஞ்சிடும் போதிலும் கொம்பின் சுமையோடு
நெஞ்சில் பசுந்தாள் நினைப்பு





விளக்கம்:
1 கடமை மறந்து அடங்கி உழைக்கும்
2 அற்ப நினைவுகளை(புல்லை) அசைபோடும்
3 உறங்கும்போதும் உறவின்(கொம்பு) சுமை
4 உறங்கும்போதும் பசுந்தாள்(புல்/பணத்தாள்) நினைப்பு

Wednesday, December 23, 2015

கேளுங்கள் தரப்படும்

விவித்பாரதி வானொலி நிலையத்தில் காலை நேரத்தில் தெய்வீகப் பாடல்களை எனது பள்ளிப்பருவத்தில் தினமும் கேட்கும் வழக்கம் உண்டு. மத நல்லிணக்கம் கருதி மும்மதப்பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். பிற மதங்களின் மீதான எனது இணக்கத்திற்கு இளம்வயதில் இந்தப்பாடல்களைக் கேட்டது முக்கிய காரணம்.
கிருஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு 'கேளுங்கள் தரப்படும்' என்ற பாடல் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை ஒரு சிறு பதிவாய் இங்கு பகிர்கிறேன்.

'கேளுங்கள் தரப்படும்' 'இறைவனிடம் கையேந்துங்கள்' 'கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே' என்று மும்மதப்பாடல்கள் பலவும் இறைவனிடம் கேளுங்கள் என்று உரைக்கின்றன. இறைவனிடம் மட்டுமல்ல, செய்ய இயன்றவர்களிடம் அவசியமான உதவி கேட்பதில் தவறில்லை. தேவை என்று வந்தபின் தேவையில்லாத கௌரவம் கருதத் தேவையில்லை என்கின்ற புரிதல் ஏற்பட்டது.
கேளுங்கள் தரப்படும் பாடலில் அடுத்து வரும் சொற்றொடர் 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது முயற்சியை விடாதே என்றும் 'தேடுங்கள் கிடைக்கும்' என்ற சொற்றொடர் தேடலை நிறுத்தாதே என்றும் இன்றுவரை என்னை ஊக்கப்படுத்தி வருகின்றன.

?? வயதிலேயே ..ஆகமங்கள் 56-னையும் ஐயம் தீர உணர்ந்தார்' என்கிற வரி - இளைமையில் கல் என்பதையும் கற்க கசடற என்பதையும் சிறுவயதில் எனக்கு புரியவைத்தன.

'முப்பது காசுக்காகவே காட்டிகொடுத்தாரே' என்கிற வரிதான் இந்தப்பாடலிலேயே என்னை மிகவும் பாதித்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்கிற கோபம் அப்போதெல்லாம் வரும். ஆனால் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்கிற புரிந்துணர்வுடன் எப்போதும் நடந்துகொள்ளவேண்டும். அதற்கான தற்காப்பையும் இயன்றவரை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் எனும் கருத்தை வளர வளரப் புரிந்து கொண்டேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Tuesday, December 22, 2015

மணிகண்டன் தரிசனம்

மழைமுகிலெனவே இருமுடி சுமந்து
மலைதனைக் கடந்தால் மணிகண்டன் தரிசனம்

நெய்யென உருகிடும் உள்ளத்தில் ஒளிர்வான்
சந்தனமாய் எங்கள் சிந்தையில் குளிர்வான்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

அன்னையின் துயரற புலிப்பால் கொணர்வான்
அன்பரின் குறைகளைக் குறிப்பால் உணர்வான்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

பதினெட்டு படிதரும் பலவித மாற்றம்
படிப்படியாய் வரும் வாழ்வில் முன்னேற்றம்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்