Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, October 20, 2021

விஷமுங்கோ

 மலைமலையாய் மாம்பழங்கோ

மருந்து வச்ச மாம்பழங்கோ


பளபளக்கும் பப்பாளிங்கோ

கல்லு வச்ச பப்பாளிங்கோ


குவிச்சு வெச்ச கொய்யாங்கோ

கெமிக்கல் வெச்ச கொய்யாவுங்கோ


குலை குலையா 

திராட்சைங்கோ

மருந்து தெளிச்ச

திராட்சைங்கோ


மழமழன்னு ஆப்பிளுங்கோ

மெழுகு போட்ட

ஆப்பிளுங்கோ


ஏழைக்கேத்த பழமுங்கோ

எங்க வாழைப்பழமுங்கோ

பாழும் வயிற்றைக்

கெடுக்கவே ஸ்ப்ரே

அடிச்ச பழமுங்கோ


நல்ல உணவு நாமும் தின்னு

நாப்பது வருசம் ஆச்சுங்கோ


சோத்துலயும் விஷமுங்கோ

கொழம்புலயும்

விஷமுங்கோ

கறியும்மீனும்

விஷமுங்கோ

காய்கறியும்

விஷமுங்கோ

கடைசியிலே

பாக்கப் போனா

கனிஞ்ச பழமும்

விஷமுங்கோ


விஷத்தைத் தின்னு

வாழும் மனுசன்

நல்லவனாவது

எப்படிங்கோ?

Thursday, October 14, 2021

கட்டுக்குள் அடங்காதவை

 செரிமானமாகாத அவமானங்களை 

அசைபோட்டுக் கொண்டிருக்கும்போதே

புதிதாய் ஒன்று நிகந்துவிட

தூரவரிசையில் மேலும் பல நிற்பதுபோல்

துணுக்குற்று ஒடுங்குகின்றது மனம்


பொறுமை எனும் ஆமை ஓடு

கவசமா இல்லை அவமானமா?

என்ற கேள்விக்கு

சுமை என்று வருகின்றது விடை


ஊர்-வதை அஞ்சி ஊர்வதை

வீழ்ச்சியென்றால் வருத்தம் வரக்கூடும்.

பதுங்குதலென்று கொள்வோம்...


மடித்து எழுதிய கட்டுக்குள் அடங்காத

காயங்களைக் காட்டவும் முடியாமல்

மறைக்கவும் முடியாமல்

தவிக்கின்றன வரிகள்

-பாலா சிவசங்கரன்

14 10 2020

Tuesday, August 3, 2021

மொச்சை விழி!

பெண்: பச்சைத் தமிழா, பச்சைத் தமிழா,
பசைபோல் உனை நான் ஒட்டிக்கொள்ளவா?
ஆண்: மொச்சை விழியே, மொச்சை விழியே,
மசிபோல் உன்னை நான் தொட்டுக் கொள்ளவா?

பெண்: உச்சிக் கிளையே,  உச்சிக் கிளையே 
கனிபோல் உன்னில் நான் ஒட்டிக் கொள்ளவா?
ஆண்: இச்சைக் கனியே, இச்சைக் கனியே 
கிளிபோல் உன்னை நான் கொத்திச் செல்லவா?

ஆண்: செப்புச்சிலையே, செப்புச்சிலையே
செப்ப ஒரு செய்யுள் நான் சொல்லித் தரவா?
பெண்: மெச்சும் கவியே, மெச்சும் கவியே,
கச்சையென உன்னை நான் கட்டிக் கொள்ளவா?! 

Wednesday, January 6, 2021

உறவுகள் தொடர்கதை; வார்த்தைகள் சிறுகதை

வார்த்தைகளால் காயமுற்ற உள்ளங்களுக்கு மருந்தாக, கவியரசர் கண்ணதாசன் அவர்களின் "உறவுகள் தொடர்கதை" பாடல் வரிகளைச் சில மாற்றங்கள் செய்து எழுதியுள்ளேன்.. 
 
***** 

உறவுகள் தொடர்கதை 
வார்த்தைகள் சிறுகதை 
கொடிய சொல் இன்று முடியட்டும் 
இனிய சொல் என்றும் தொடரட்டும் 
இனியெல்லாம் நலமே 

நாள் ஒன்றிலும் சோகம் 
வளர்கின்றதோ வாதம் 
வாழ்வெங்கிலும் ஆதங்கம் 
நீ கண்டதோ துன்பம் 
இனி காணலாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம் 
நதியிலே புதுப் புனல் 
நாவிலே புது மொழி 
நம் சொந்தமோ இன்று கனிந்தது 
துன்பம் மறைந்தது 

உன் நெஞ்சிலே பாரம் 
உனக்காகவே நானும் 
ஒரு ஆறுதல் கூறுவேன் 
உன் கண்களின் ஓரம் 
எதற்காகவோ ஈரம் ? 
நல்வார்த்தை நான் கூறுவேன் 
வேதனை தீரலாம் 
வரும் பகை விலகலாம் 
எந்நாளுமே நீயென் 
தமிழெனும் தேனில் நனையலாம் 

இந்தப் பாடல் Smule-ல் 
https://www.youtube.com/watch?v=0bvTADuRJp0

Tuesday, June 2, 2020

HAPPY BIRTHDAY RAJA SIR

(முத்தைத்தரு - திருப்புகழ் பாடல் மெட்டில் )
 
வித்தை பல கற்றுக் கலைமகள் மெச்சத்தகு புத்திக்கு அதிபதி
தித்தித்திடும் மெட்டுத் தரவல்ல இசைஞானி
எட்டுத் திசை பட்டத் தமிழரின் இட்டத்தினில் நித்தம் நிலவிடும் 
மட்டத்துயர் தட்டில் திரவியம் இசைஞானி
 
பட்டிக்கொரு கட்டிக்கரும்பென சிட்டிக்கொரு சீனிக்கழியென
எட்டுத்திசை எங்கும் இனித்திடும் இசைஞானி
பட்டப் பகல் முட்டும் குளிர்ந்திட கொட்டும் பனி மெட்டில் மகிழ்ந்திட
எட்டும் இருள் மட்டும் துணைவரும் இசைஞானி
 
கெட்டும் மனம் முற்றும் நலம்பெற ஒட்டும் உயிர் ஊனில் நிலைபெற 
கொட்டும் உயிர் மெட்டில் குருதியில் இசைஞானி 
பட்டத் துயர் எட்டிச் சிதறிட பக்தர்க்கருள் கொட்டித் தருகிற
கிட்டத்தினில் கிட்டும் இறைவனும் இசைஞானி 
 
இசைஞானிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
 
பாலா சிவசங்கரன்
02 ஜூன் 2020
=====-----=====-----=====


Thursday, May 21, 2020

பெட்டி உடுப்பெடுத்து

தண்டவாளத்தில் நடந்து உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்

(உச்சி வகுந்தெடுத்து பாடல் மெட்டு)

பெட்டி உடுப்பெடுத்து
புள்ளைங்கள தோளில் வெச்சி
தண்டவாளம் மேல்நடந்து
சொந்த ஊரு போனாங்க
சொந்த ஊரு போனவங்க
போன கதி என்னாத்தா?
(பெட்டி உடுப்பெடுத்து)

உண்டி சுருங்க வெச்சு
உண்டியலில் சேத்து வெச்சு
வண்டிக்குத்தான் சீட்டெடுக்கப் போனாங்க - அட
போகும் வழி யாருக்குமே தெரியலையே - ஐயோ
போற வழி ஆபத்துன்னு புரியலையே
(பெட்டி உடுப்பெடுத்து)

துபாயி சிங்கப்பூரு
துட்டு உள்ள தூர ஊரு
ஏரோபிளேன் போனதுன்னு சொன்னாங்க - அட
இங்கருக்கு இவங்க ஊரு தெரியலையே - அட
ஏத்திச் செல்ல வண்டி ஏதும் வரவில்லையே
(பெட்டி உடுப்பெடுத்து)

பங்குச் சந்த மூடவில்ல
வங்கி வட்டி கொறையவில்ல
கூலி வேலை செய்ய மட்டும் வழியில்லை - அட
ஏழை சனம் எண்ணிக்கையில் கொறையலையே - எவர்
எண்ணத்திலும் இவங்களுக்கு எடமில்லையே

(பெட்டி உடுப்பெடுத்து)

Friday, May 15, 2020

பஞ்சபூதக் காதல்


 
காதல் என்றொரு காற்று - அது
பூமி முழுதும் நிறைந்ததடி(டா)
கண்ணில் மறைந்தே போனாலும் - அது
நம்மை விட்டுப் பிரிவதில்லை
 
காதல் என்றொரு பூமி -  அதன்
ஈர்க்கும் வலிமை குறைவதில்லை
திசைகள் மாறிப் போனாலும் - அதன்
விசைகள் என்றும் அழிவதில்லை

காதல் என்றொரு வானம் - அது
உள்ளம் முழுதும் விரிந்ததடி(டா)
தூரம் தாண்டிப் போனாலும் - அது
எல்லைக் கோட்டில் முடிவதில்லை
 
காதல் என்றொரு வெப்பம் - அது
உயிரின் உள்ளே கலந்ததடி(டா)
கூடும்போது கொதிக்குதடி - அது
குறையும் போது நடுங்குதடி
 
காதல் என்றொரு நீரில் - நம்
இருவர் உயிரும் மீன்களடி(டா)
அலைகள் என்றும் ஓய்வதில்லை - நம்
காதல் என்றும் அழிவதில்லை

பாலா சிவசங்கரன்
15 05 2020
=====-----=====-----=====

Sunday, April 26, 2020

துளி நீர்


நீர்த்துளியாக விடுபட்ட
துளி நீர்,
நீர்த்துளிக்குள் சிறைப்பட்டதாகவே தவித்துப் போகின்றது

நிலையற்ற துளிகளையே
நாம் காண்கிறோம்-
தாமரை இலை மேலும்
மழையின் ஒழுக்கிலும்
விழிகளின் ஓரத்திலும்.

சந்தர்ப்ப சாதுர்ய சதிகளின்
நிகழ்தகவில்
சங்கமித்து சுயமிழக்கின்றன துளிகள் -
சமூகத்தின் தனி மனிதர்களைப் போலவே.

பாலா சிவசங்கரன்
26 04 2020


Wednesday, March 18, 2020

நாவல் கரோனா - REMIX

நாவல் கரோனா - REMIX
(காதல் பிசாசே பாடல் மெட்டு)

நாவல் கரோனா
நாவல் கரோனா
வேணாம் வராதே பரவாயில்லை
நாவல் கரோனா
நாவல் கரோனா
போதும் அவஸ்தைகள் பரவாயில்லை
சீனாவும் சுகமாயில்லை
ஈரானும் நலமாயில்லை
இந்தியாவை விட்டுவிட்டால் பரவாயில்லை
அமெரிக்கா பரவாயில்லை
ஐரோப்பா சரியாயில்லை
எங்களை நீ விட்டுவைத்தால் பரவாயில்லை

கொஞ்சம் ஒதுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
கைகள் கழுவல் தூய்மை பழகல்
சொல்லிக் கொடுத்தாய் நீநீநீ
ஐயோ அம்மம்மா நான் யாரோடும்
பேசாத வெட்கத்தை நீயே தந்தாய்
அப்பா அப்பப்பா நான் யார் மீதும் மோதாத சங்கோஜம் நீயே தந்தாய்
இது போதும் விட்டுச் செல்லு
தாங்காது சொன்னா கேளு
மருந்தொன்று கண்டுபிடித்தால் பரவாயில்லை

Thursday, December 12, 2019

இனிய புத்தாண்டு 2020 -:இளமை அதோ அதோ

என் வயதிற்கு இந்தப் புத்தாண்டில் "இளமை இதோ இதோ" பாடலை அப்படியே பாட முடியாது. அதனால் கீழ்க்'கண்டபடி' மாற்றியுள்ளேன்! சக வயது சகலைகள் சந்தோஷமாக இதைப் பாடலாம்!

*****
ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லாம் என் பெண்ணோட friend-கள்
இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

ராஜா சாரின் ரசிகன்
பாலு ஜானு நேசகன்
கமல் படங்கள் பார்ப்பவன்
ரஜினி ஸ்டைலால் ஈர்ப்பவன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
பெல்பாட்டக்(bell bottom) காலங்கள்
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்
SPB சாயல்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

தமிழில் மட்டும் பாடுவேன்
இந்திப் பாட்டும் கேட்டுப்பேன்
மை முஜே கே லீயே
இதிலென்ன கேலியே?
தாய் பேசும் மொழியில் பேசம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காகப் பாடும் நானும் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறுமே Smule பாடுவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

பைக் எடுத்து ஓட்டுவேன்
மைக் பிடித்துப் பாடுவேன்
சுற்றுவதில் சூரன் நான்
கத்துவதில் வீரன் நான்
புது ஆண்டில் சோகம் கிடையாது
மகிழ்ச்சிக்கு அளவேது?
நமை வெல்ல யாரும் கிடையாது
பகையென்று யார் கூறு?
நாள்தோறுமே கொண்டாட்டம் தான்
வா வா புது வருடம் போகலாம்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

Tuesday, December 10, 2019

"குடி மற" பாடல்


"சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்" பாடல் மெட்டு
---------

குடித்துக் குடித்து குடல் கெடுத்துக் கொண்டாய்
உடல் மிடுக்கும் துடிப்பும் இன்று இழந்து நின்றாய்
படித்த படிப்பும் அதை மறந்து விட்டாய்
சபை நடந்து நடந்து வரும் தரம் இழந்தாய்

எழிலும் இழந்தாய் மொழியும் இழந்தாய்
தொழிலில் வரவும் இழந்தாய்
புழுவின் பெருமை எளிதில் அடைந்தாய்
தெருவில் தனியே நடந்தாய்

இளமை இழந்தாய் இனிமை இழந்தாய் புகழும் பணமும் இழந்தாய்
குடும்பம் இழந்தாய் குழந்தை இழந்தாய் குலத்தின் பெயரும் இழந்தாய்

#குடிமற

Sunday, December 8, 2019

ஐட்டம் சாங


இது ஒரு ஐட்டம் சாங். ஐட்டத்தின் பெயர் Tea!

அறிந்தும் அறியாமலும் படத்தில் வரும் "தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா" பாடல் மெட்டு
------
டீ குடிக்க டீ குடிக்க கேன்டீன் போலாம் வா
என் தலை ரொம்ப வலிக்குது
கேன்டீன் போலாம் வா
பிரேக் எடுத்து பிரேக் எடுத்து
வேலை செய்யலாம்
உன் மணி பர்ஸை மறக்காமல் கையில் கொண்டு வா
சால்ட்டு பிஸ்கட்டு அதைப் போட்டு நொறுக்கு
கோல்டு லிக்விடு அதை சூடா இறக்கு

சரணம்:
(நண்பனிடம்)
நண்பா, அந்த மெனுவைப் பார்த்து
நல்ல பிளேவர் தேர்வு செய்து ஆர்டர் செய்
(டீ போடும் பையனிடம்)
ஹே ப்ரோ, இதழ் பருக பருக
மனம் உருக உருக கொஞ்சம் தேநீர் செய்
பெருகுது பெருகுது நறுமணம்
நொறுங்குவது நொறுங்குவது நுரைமனம்!
இஞ்சிக்கு டீயுடன் திருமணம்!
மாலை மாற்றிடுதே...!
(Yes. Tea changes the evening)
ஓஹூ ஓஹூ ஹோ
ஒஹு ஒஹு ஓஹூ ஹோ!

#TeaSong
#Thanglish
#ThankYouYuvan

Saturday, November 30, 2019

சிறுமழைதான் பொழிகிறதே

மழைநீர் தேங்கிய தெருவில் இறங்கி நடக்கையில் தோன்றியது...
"முன் பனியா முதல் மழையா" நந்தா படப் பாடல் மெட்டு.

***************

சிறு மழைதான் பொழிகிறதே
என் தெருவில் நீர்தான் நிறைகிறதே
வழிகிறதே ஷூ நனைகிறதே...
வடியாத தெருவில் நின்றேன்
புரியாமல் இறங்கிச் சென்றேன்
மாற்றம் தருவது யார் தானோ?

ஒரு காலத்தில்.. ஒரு காலத்தில்
மழை பெய்தாலும் அதுவும் வடியுமடி
இந்தக் காலத்தில் இந்தக் காலத்தில்
மழை போகின்ற பாதை மறைந்ததடி
நடுவினில் குழிகளில் கால் படுமோ?
வழிவரும் வாகனம் சாய்ந்திடுமோ?
வாழ்கிறோம் நாம் நம் சென்னையில்...

என்றும் இயற்கையின் வழி நடக்கையில்
அது எப்போதும் நமக்கு நலம் தருமே
இன்று செயற்கையின் வழி நடக்கிறோம்
அது எப்போதும் நமக்கு இடர் தருமே
மழையையும் வெயிலையும் தாங்கிடுமோ?
மழலையும் முதுமையும் தான் நகுமோ?
மாறுமோ நாளை நம் சென்னையே...?


Wednesday, July 24, 2019

மெல்ல நட மெல்ல நட - remix


It is raining in Chennai. Ride your bikes safely.


ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
காணவில்லை அதன் பெயர் தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
சமிக்ஞையை அவர்தான் மதிப்பார்
அதை மீறிச்சென்றால் அவர் சபிப்பார்
அதை மீறிச்சென்றால் நம்மைச் சபிப்பார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
உயிருக்கும் இங்கில்லை மதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

Tuesday, July 9, 2019

யாருக்காக இது யாருக்காக?

யாருக்காக இது யாருக்காக?
எங்கள் காவிரி அகண்ட காவிரி
நீரும் இன்றியே வறண்ட காவிரி
யாருக்காக இது யாருக்காக?
தாகமே போ... போ....
மேகமே வா.... வா....

மலைகள் மீது மழை பொழிந்தது
அது அருவியாகி அழகு தந்தது
சொர்க்கமாக நதியும் பாய்ந்தது
இன்று நரகமாகக் காய்ந்து விட்டது

மலர்கள் தானே நாம் வளர்த்தது
அந்த மலர்கள் இன்று ஏன் உதிர்ந்தது?
குயில்கள் தானே நாம் ரசித்தது
அந்தப் பறவை இன்று ஏன் மறைந்தது?

எழுதுங்கள் நதிநீர் சாசனத்தில்
நதிகள் பூமியின் உடைமை என்று
பாடுங்கள் உலகம் முழுதும் சென்று
உழவு மானிடக் கடமையென்று

உழவு செய்து நாம் பிழைத்தது
அந்த உழவு இன்று ஏன் கசந்தது?
பயிர்கள் காய்ந்து நாம் தவிப்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது

தொன்றுதொட்டு இங்கு வந்தது
அதில் என்றிருந்து பங்கு வந்தது?
அங்கிருந்து ஆட்சி செய்பவர்
தினம் ஆடுகின்ற நாடகம் இது

Thursday, August 30, 2018

உனக்கென்று ஒரு மழைச்செய்தி


பறவைகளைப் போல் உதறிவிடமுடியாமல்
மழையில் ஊறிக்கிடக்கிறது மனது..
கண்ணாடி மூடிய பேருந்தில்
எனக்கு என் ஆடைகளும்
என் ஆடைகளுக்கு நானும்
கதகதப்பு அளித்துக்கொண்டு செல்கிறோம்..
குளித்து மகிழும் கொழுந்துகளுக்கு வேண்டுமென
மேலும் கொஞ்சம் நீருறிஞ்சிக் கொள்கின்றன செடிகள்-
பாலூட்டும் அன்னை ஒரு கவளம்
அதிகம் உண்பது போல்.

வர்ணனைக்கே வார்த்தையெல்லாம்
வழி நெடுகே தீர்ந்துவிட
உனக்கென்று ஒரு மழைச்செய்தி
மறைத்தனுப்பத் தேடுகிறேன்
காலைவணக்க வாழ்த்துமடல்களை.

Thursday, April 19, 2018

குறுங்கவிதை - கிழிசல்

அங்கங்கே கிழித்த ஜீன்ஸ்
போட்டவனுக்கு இருப்பதில்லை
கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்

Wednesday, April 18, 2018

குறுங்கவிதை - மரணதண்டனை


சாலை மறியல் செய்ததால்
மரண தண்டனை கிடைத்தது-
ஆலமரத்திற்கும் அதில் வாழ்ந்த
ஆயிரம் கிளிகளுக்கும்

Thursday, January 11, 2018

முந்திவிரித்த பாடல்


முந்தி விரித்த செம்பட்டுக் கம்பளத்தில்
சேற்றுக் கறை பூசி நீ செருக்காகப் போனாயோ?

முந்தி விரித்த நம் முன்னோரின் வாய்ச்சொற்கள்
சிந்தி விழும் உன் செவியில் சேர்க்காமல் போனாயோ?

முந்தி விரித்த கொடும் கருநாகப் படம்போல
சீறி விழும் வார்த்தைகளில் விஷம் கக்கிப் போனாயோ?

முந்தி விரித்த துண்டில் வந்து விழும் காசெல்லாம்
சிதறாமல் சேகரித்து சீட்டியடித்துப் போனாயோ?

முந்தி விரிந்த சபை சேர்ந்திருந்த சான்றோரை
மந்திகள் என்று நீ மதி மயங்கிப் போனாயோ?

முந்தி விரிந்த உன் வான விதானம்விட்டு
மஞ்சள் போர்வையின் கீழ் வாடகைக்குப் போனாயோ?

அடிக்கரும்பு

மங்கி கேப்பை மாட்டிக்கிட்டு
மங்கலிலே கோலமிட்டு
பொங்கி வச்ச பொங்கலைப் போல்
பல்லைக் காட்டி இளிக்குறேனே
மச்சான்,
கல்லுளி மங்கனைப் போல்
கண்டுக்காம நிக்குறியே..

அடியே,
உறங்கி நான் நிக்கவில்லை
கெறங்கிப் போய் கவுந்துப் புட்டேன்....
அரும்புபோல பல்ல வச்சி
இரும்புபோல கரும்புக் கழி
எப்படி நீ கடிப்பேன்னு
ரோசனை நான் செய்யுறேன்டி

அடிக்கரும்பு வேரெல்லாம்
ஆசை மச்சான் மீசையின்னு
கடி கடின்னு கடிச்சிடுவேன்
கலங்காதே ராசாவே

சால்சாப்பு சொல்லாதே
சட்டுபுட்டுனு உரிச்சுத் தாரேன்
சாறெல்லாம் உறிஞ்சிப்புட்டு
சக்கரையா சுத்தி வாடி