Showing posts with label பயணக் குறிப்பு. Show all posts
Showing posts with label பயணக் குறிப்பு. Show all posts

Saturday, June 9, 2012

ஒரு பையின் பயணக் குறிப்பு

முதலில் யுவான் சுவாங் என்று இந்தப் பதிவிற்குப் பெயர் வைத்திருந்தேன். 
சரி. இங்கிருக்கிற விசாகப் பட்டினம் சென்று வந்ததற்கு இந்த பில்ட் அப் 
எதற்கு என்று பெயரை மாற்றிவிட்டேன். 
இருவழி ரயில் பயணங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து நாள் பயணம். மூன்று நாட்கள் சுற்றிப் பார்க்க. முதல் நாள் விசாகப்பட்டினத்தைச் சுற்றிப் பார்த்தோம். முதலில் சிம்மாசலம் கோயில் சென்றோம். வழக்கமாக சந்தனக் காப்பிட்டு முகம் மூடிய நிலையில் இருக்கும் பெருமாளை சிலநேரங்களில் தான் முழுதாய்ப் பார்க்கமுடியும். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
அடுத்ததாக பாலச்சந்தர் படங்களில் வரும் அழகிய கடற்கரையில் கால் நனைத்ததில் மகிழ்ச்சி. சிறு பாறைகள் கடற்கரைக்கு அழகூட்டுகின்றன.
ramkrishna-beach-vizag
 கடற்கரையில் விளையாடி மகிழ்ந்த நண்டுக் கால்களையும் வாழைத்தண்டுக் கால்களையும் கண்டு மகிழ்ந்தோம் - வழக்கப்படி. டால்பின் மூக்கு வடிவ மலைமேல் கலங்கரை விளக்கம் நாங்கள் சென்றபோது மூடியிருந்தது. அருகிலேயே  தர்க்கா ஒன்று உள்ளது. தர்க்காவில் 11 சுற்று சுற்றி அல்லாவை வேண்டிக்கொண்டு அங்குள்ள அழகிய ஆலமரத்தடியில் இளைப்பாறினோம்.
கைலாஷ் கிரி பூங்கா அழகாக உள்ளது. பெரிய சிவன் பார்வதி சிலையைச் சுற்றி குட்டி ரயில் பயணம். மலையின் கீழிருந்து மேலே வர கேபிள் கார் வசதியும் உள்ளது. நாமும் சென்னையில் பரங்கிமலையை இப்படி ஒரு சுற்றுலாத் தலமாக ஏன் மாற்றக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
மறுநாள் அரக்கு/அருக்கு பள்ளத்தாக்கு பயணம். விசாகப்பட்டினத்திலிருந்து 120 கி. மீ. தொலைவில். மலைப்பயணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. பழங்குடிகள் அருங்காட்சியகம் கண்டோம். பழங்குடிப் பெண்களின் நடன நிகழ்ச்சியும் கண்டு மகிழ்ந்தோம். இந்தப் பயணத்தில் சிறப்பான விஷயம் போரா(Borra Caves) குகைகள் தான். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய இக்குகைகளுக்குள் படிக்கட்டுகள் அமைத்து விளக்குகள் அமைத்து பார்த்து வியப்புற அற்புதமாக வழி செய்துள்ளனர். விசாகப்பட்டினம் செல்பவர்கள் ஒரு நாள் ஒதுக்கி இக்குகைகளைக் கட்டாயம் பார்த்து விடவும்.
ஆன்மிகப் பயணத்தைக் கூட சிலர் உல்லாசப் பயணமாக மாற்றிவிடும் கதைகளை நீங்கள் அறிவீர்கள். நாங்களோ உல்லாசப் பயணத்தையும் ஆன்மிகப் பயணமாக மாற்றிவிட்டோம். முதல் நாள் சிம்மாசலம், கைலாஷ் கிரி மற்றும் தர்க்கா. இரண்டாம் நாள் போரா குகையிலும் இறை வழிபாடு. மூன்றாம் நாள் முழுக்க முழுக்க ஆன்மிகம் தான். விசாகப்பட்டினத்திலிருந்து 120? கி. மீ தொலைவில் உள்ளது ஸ்ரீகாகுளம். இதை மையமாய் வைத்து அமைந்துள்ள கோயில் தலங்களை தரிசித்தோம். முதலில் ஸ்ரீகாகுளம் சிவன் கோயில். அழகிய பெரிய நந்தியை உடையது. பலராமர் சிவ பூசை புரிய நீர் வேண்டி தனது ஏர் கொண்டு கீற உருவான நாகவலி நதிக்கரையில் அமைந்துள்ளது. அடுத்தது சூரிய நாராயணா  கோயில். கோனார்க் சூரியன் கோயில் போல் வடிவமைக்கப் பட்டுள்ளது இக்கோயில். மேலும் விவரங்கள் அறிய http://www.arasavallisungod.org/ பார்க்கவும். அடுத்தது ஸ்ரீ கூர்மம். கூர்ம வடிவில் மூலவர் அமைந்திருக்கும் கோயில் உலகிலேயே இது ஒன்று தான் என்று கூறினார்கள். ராமானுஜர் தரிசித்த தலம். புராதனக் கோயில்கள் தரிசிக்கும் போது ஏற்படும் பரிபூரண உணர்வு இவ்வாலய தரிசனத்திலும் கிட்டுகிறது. அடுத்தது ஸ்ரீமுகலிங்கம் கோயில். ஒரிய கட்டிட அமைப்பில் அமைந்துள்ள இக்கோயிலில் சிவலிங்கம் முக வடிவில் அமைந்துள்ளதே இதன் பெயர்க்காரணம்.


வெற்றிகரமாக சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பினோம். வேறு எதுவும் சுவாரசியம் இல்லையா இப்பயணத்தில் என்று கேட்கலாம். பல உண்டு. உதாரணத்துக்கு ஒன்று. திரும்பிவர டாட்டா அல்லிபி எக்ஸ்பிரஸ் ரயிலில் பதிவு செய்திருந்தோம். எங்கள் டிக்கட்டில் இருந்த ரயில் எண் வேறு. நாங்கள் ஏறிய ரயில் எண் வேறு. ரயில் எண் தான் தகராறு என்றால் பெட்டி எண்ணிலும் குழப்பம். S2 பெட்டியில் தேடினால் எங்கள் பெயர்களைக் காணவில்லை. டிக்கட்டில் உற்று நோக்க பெட்டி எண் ST2 என்று இருந்தது. ரயில் கிளம்ப மூன்று நிமிடங்களே இருந்தது. அலறி அடித்து ரயிலின் மறு கோடியில் இருந்த பெட்டிக்கு ஓடி ஏறுவதற்குள் உயிர் போய்  உயிர் வந்தது. இக்குழப்பங்களுக்கு காரணம் எழுத தனி பதிவு வேண்டும். அல்லது விவரமறிந்த நண்பர்கள் பின்னூட்டத்தில் எழுதட்டும். S2-ல்  இருந்து ST2 க்கு ஓடும்போது ஒரு பொறுப்பான குடும்பத்தலைவன் என்ற வகையில் இருப்பதிலேயே பெரிய மற்றும் கனமான பையான எனது மாமியாரின் பையைத் தூக்கி ஓடிவந்தேன். பெட்டியில் ஏறியதும் என் மாமியார் சொன்னார்கள் - இந்தப் பையில் wheels இருக்கிறதே,.. இழுத்து வந்திருக்கலாம் என்று!