Tuesday, July 28, 2015

அப்துல் கலாம்

கனவுகள் விதைக்கலாம்
விதைத்ததை அறுக்கலாம்
வழிபல வகுக்கலாம்
வறுமையைத் தொலைக்கலாம்
பொருளினைப் படைக்கலாம்
பகிர்ந்துநாம் கொடுக்கலாம்
அறிவியல் படிக்கலாம்
இருளினை விலக்கலாம்
படைக்கலம் வடிக்கலாம்
பகையினை ஒடுக்கலாம்
அமைதியை வளர்க்கலாம்
மகிழ்ச்சியில் திளைக்கலாம்
மழலைகள் வளர்க்கலாம்
மரங்களும் வளர்க்கலாம்
கவலைகள் மறக்கலாம்
காலம் வந்தால் உறங்கலாம்
விடைதந்த அப்துல்கலாம்
விடிவெள்ளி ஆகலாம்

Tuesday, July 21, 2015

அழகொழுகும் அருவி

என்ன சொல்லிப் பாடுவது
அழகொழுகும் அருவியை?

அடர் மரச் செறிவினில்
தொடர் மலைச்சரிவினில்
சுடர் மின்னல் அடிக்கின்ற
படர் வெள்ளிக் கொடியொன்று
வேர் காண வீழ்ந்ததுபோல்
அழகொழுகும் அருவியினை
என்ன சொல்லிப் பாடுவது?

வெள்ளிப்பனி மலையுருக்கிக்
கிள்ளிக் கொஞ்சம் தருகுதோ?
வான் மழைக்கு நிகராக
அள்ளி வந்து தருகுதோ?
உள்ளமெல்லாம் வெள்ளையென
சொல்லிக் கொள்ள வருகுதோ?
உள்ளுறைந்த மீன்களுக்குத்
துள்ளச் சொல்லித் தருகுதோ?
என்ன சொல்லிப் புகழ்வதிந்த
அருள்நிறைந்த அருவியை?

அன்னைபோல் தலைகோதி
அங்கமெல்லாம் நீவுகையில்
அயர்வும் வலிகளும்
வியர்வையும் கண்ணீரும்
கரைத்தெடுத்து-
கரைகளற்ற பெருவெளியில்
கருணை பொழியும் அருவியினை
என்ன சொல்லி வாழ்த்துவது?