Wednesday, December 23, 2015

கேளுங்கள் தரப்படும்

விவித்பாரதி வானொலி நிலையத்தில் காலை நேரத்தில் தெய்வீகப் பாடல்களை எனது பள்ளிப்பருவத்தில் தினமும் கேட்கும் வழக்கம் உண்டு. மத நல்லிணக்கம் கருதி மும்மதப்பாடல்களையும் ஒலிபரப்புவார்கள். பிற மதங்களின் மீதான எனது இணக்கத்திற்கு இளம்வயதில் இந்தப்பாடல்களைக் கேட்டது முக்கிய காரணம்.
கிருஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு 'கேளுங்கள் தரப்படும்' என்ற பாடல் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை ஒரு சிறு பதிவாய் இங்கு பகிர்கிறேன்.

'கேளுங்கள் தரப்படும்' 'இறைவனிடம் கையேந்துங்கள்' 'கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே' என்று மும்மதப்பாடல்கள் பலவும் இறைவனிடம் கேளுங்கள் என்று உரைக்கின்றன. இறைவனிடம் மட்டுமல்ல, செய்ய இயன்றவர்களிடம் அவசியமான உதவி கேட்பதில் தவறில்லை. தேவை என்று வந்தபின் தேவையில்லாத கௌரவம் கருதத் தேவையில்லை என்கின்ற புரிதல் ஏற்பட்டது.
கேளுங்கள் தரப்படும் பாடலில் அடுத்து வரும் சொற்றொடர் 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது முயற்சியை விடாதே என்றும் 'தேடுங்கள் கிடைக்கும்' என்ற சொற்றொடர் தேடலை நிறுத்தாதே என்றும் இன்றுவரை என்னை ஊக்கப்படுத்தி வருகின்றன.

?? வயதிலேயே ..ஆகமங்கள் 56-னையும் ஐயம் தீர உணர்ந்தார்' என்கிற வரி - இளைமையில் கல் என்பதையும் கற்க கசடற என்பதையும் சிறுவயதில் எனக்கு புரியவைத்தன.

'முப்பது காசுக்காகவே காட்டிகொடுத்தாரே' என்கிற வரிதான் இந்தப்பாடலிலேயே என்னை மிகவும் பாதித்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்கிற கோபம் அப்போதெல்லாம் வரும். ஆனால் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்கிற புரிந்துணர்வுடன் எப்போதும் நடந்துகொள்ளவேண்டும். அதற்கான தற்காப்பையும் இயன்றவரை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் எனும் கருத்தை வளர வளரப் புரிந்து கொண்டேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Tuesday, December 22, 2015

மணிகண்டன் தரிசனம்

மழைமுகிலெனவே இருமுடி சுமந்து
மலைதனைக் கடந்தால் மணிகண்டன் தரிசனம்

நெய்யென உருகிடும் உள்ளத்தில் ஒளிர்வான்
சந்தனமாய் எங்கள் சிந்தையில் குளிர்வான்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

அன்னையின் துயரற புலிப்பால் கொணர்வான்
அன்பரின் குறைகளைக் குறிப்பால் உணர்வான்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

பதினெட்டு படிதரும் பலவித மாற்றம்
படிப்படியாய் வரும் வாழ்வில் முன்னேற்றம்
அமைதியின் வடிவாய் ஐயனின் தரிசனம்
அவனது பார்வையில் அத்தனை கரிசனம்

Friday, November 27, 2015

Thanksgiving Sale

நமது அமெரிக்க நண்பர்கள் Thanksgiving Sale-ஆன இன்றைய பொழுதில் தள்ளுபடி விலையில் பொருட்களைத் தேடி எப்படி ஓடியிருப்பார்கள் என்றொரு கற்பனை.... சரி, சரி, ஒப்புக்கொள்கிறேன்.. நான் அமெரிக்காவில் இருந்தபோது ஓடிய அனுபவமும்தான்!
(மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன மெட்டில்)

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்
உன்னை என்னைப்போலே நூறு பேரறிவார்
எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்
உன்னை என்னைப்போலே நூறு பேரறிவார்
பாரு என் முகம் பாரு பாவமாய்
பாரு என் முகம் பாரு பாவமாய்
எந்தன் cartக்குள் நீ ஏற வேண்டாமா?
எந்தன் cartக்குள் நீ ஏற வேண்டாமா?
நாடவா தேடவா ஓடவா வெறும் cart-ஐ ஓட்டவா?

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

Target-டிலே உந்தன் விலை கேட்டேன் பின்பு
Walmart-டிலே உந்தன் நிலை கேட்டேன்
Target-டிலே உந்தன் விலை கேட்டேன் பின்பு
Walmart-டிலே உந்தன் நிலை கேட்டேன்
Aisle Aisle-ஆய் என்னை சுற்றவிட்டு
Aisle Aisle-ஆய் என்னை சுற்றவிட்டு
ஒரு ஓரத்திலே சென்று ஒளிந்ததென்ன?
நாடவா தேடவா ஓடவா வெறும் cart-ஐ ஓட்டவா?

அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?
இங்கு விலை குறைவா? அங்கு விலை குறைவா? - என்று
அலைந்தலைந்தே தேடும் பொருட்கள் எங்கே?

Wednesday, November 11, 2015

தவிர்க்கமுடியாத தீபாவளி

சின்னதாய் ஒரு ஸ்மைலி முதற்கொண்டு அழகிய படங்களுடனான வாழ்த்து மடல்களும் அலாரத்துடன் சேர்ந்துகொண்டு அலைபேசியை அதிகாலையிலேயே உசுப்பிவிட, உற்சாகமாவே விடிந்தது எனது தீபாவளி. மழை என்கிற காரணத்தினாலோ, தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்குச் செல்லவில்லை என்கிற காரணத்தினாலோ, தீபாவளி கொண்டாடுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

உறவினருடன் சேர்ந்து சாப்பிடுகையில் தவிர்க்க முடியாத உணவுப் பதார்த்தங்களும், அதிரசம் மற்றும் இனிப்பு வகைகளும் எனது உணவுக் கட்டுப்பாட்டை 'இன்று ஒரு நாள் மட்டும்' என்று தளர்த்திவிட்டன.

தீபாவளியன்று சூழல் மாசுபடுத்தும் வாண வெடிகளைத் தவிர்ப்பது என்ற கொள்கையுடன் இருந்த எனது மகனையும், நண்பர் ஒருவர் கொடுத்த சிவகாசி பரிசுப் பெட்டி 'இந்த ஒரு முறை' என்று தளர்த்திவிட்டது.

கம்பி மத்தாப்புகளை ஈரமண்ணில் நட்டுவைத்துக்கொளுத்தி இவைதான் நான் விடும் ராக்கெட்டுகள் என்று மகள் செய்த குறும்பையும் இங்கு பதிவு செய்துவிடுகிறேன்.

தொலைக்காட்சியை வெகுவாகத் தவிர்த்துவிட்டோம் என்றாலும் வேலை எதுவும் இல்லாத மதிய வேளையில் வேலை இல்லாப் பட்டதாரி படம் பார்த்தோம் (முன்பே பலமுறை பார்த்திருந்தாலும்). அதில் வரும் ஒரு வசனம் சிந்திக்கவைத்தது " முன்பெல்லாம், இல்லாதவங்க இருக்கிறவங்ககிட்ட திருடினாங்க.. இப்போதோ, இருக்கிறவங்க இல்லாதவங்ககிட்ட திருடறாங்க.."

இதில் நமது பங்கு ஏதாவது இருக்கிறதா தவிர்ப்பதற்கு? 

Friday, November 6, 2015

தீபாவளி நல்வாழ்த்துகள்

அதிரசம்போல் மின்னிடுமே
எண்ணெய் தேய்த்த மேனி
அடுக்கடுக்காய் முறுக்கு தட்டை
அடித்து நொறுக்கத் தீனி
தீபாவளி மருந்து சாப்பிட்டும்
விருந்து சாப்பிடலாம்
விருந்து சாப்பிட்டும்
மருந்து சாப்பிடலாம்
வெடிக்கின்ற வெடிகள்
வெற்றி முரசு கொட்டும்
வெடிக்காத வெற்று வேட்டும்
தோல்வி பழக வைக்கும்
மத்தாப்போ கம்பியோ
எதையாவது பற்றவைப்பதென்பது
யாருக்குத்தான் பிடிக்காது?!
ஏற்றிவைத்த தீபம் நமது
இல்லம் கோயிலாக்கும்
ஏற்றிவைத்த புன்னகையும்
இதழ்களை எழிலாக்கும்
புத்தாடை புதுப் படம்
குறைவிலாக் கொண்டாட்டம்
நரகாசுரன் என்பதெல்லாம்
நமுத்துப்போன காரணம்
பண்டிகைகள் வாழ்வதற்கு
கொண்டாட்டமே காரணம்
கொண்டாட்டமாய் வாழ்வதற்கு
பண்டிகைகளே காரணம்!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
அன்புடன் பாலா சிவசங்கரன்

Friday, October 9, 2015

என்னிலே பாதியில்லை

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ..." என்று பாடிக் கொண்டிருந்த என்னை, 'காதலிக்கு பதில் மனைவியின் பிரிவாற்றாமையில் பாடும் பாடலாக இதைப் பாடக்கூடாதா?' என்று ஒருவர் கேட்டுவிட்டார். 

நமக்குதான் ரீமிக்ஸ் செய்வது அல்வா சாப்பிடுவது ஆயிற்றே... 
மனித குலத்தின் பாதியான மனைவி குலத்திற்கு இந்தப் பாடலைச் சமர்ப்பிக்றேன்

-------------------------------------------------------------------------------------------------------
வண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ
என்னிலே பாதியில்லை. உன்னைத்தொட ஏணியில்லை

பக்கத்தில் நீயும் இல்லை. பால் பழங்கள் இனிக்கவில்லை
சொந்தமாய் சமைக்கவில்லை.. சாதமும் மீதமில்லை.. 
HSB -யில் ருசியுமில்லை சங்கீதாவில் சுவையுமில்லை
அன்னை அரவிந்தரிலும் உன் கையின் மணம் காணவில்லை
நீயும் வந்து சேர்ந்துவிட்டால் உப்பு காரம் குறைவதில்லை

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
அம்மா வீடு சென்றுவிட்டால் ஏம்மா என்னை நினைப்பதில்லை?
சும்மாவாச்சும் என்னையழைத்து பேசவுமா நேரமில்லை?
வீடு வந்து சேர்ந்த பின்னே வைய மட்டும் மறப்பதில்லை 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
என்னிலே பாதியில்லை உன்னைத்தொட ஏணியில்லை
----------------------------------------------------------------------------------------------- 

பி.கு:தனது பாடலை இப்படி உட்டாலக்கடி செய்து எழுதிய எனக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் ஏதேனும் பரிசு கொடுப்பாரா என்று யாரவது கேட்டுச் சொல்லுங்கள்!

Thursday, October 1, 2015

களிகொண்டு நிறைவாக

வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் “தமிழ்நாடு அரசுதமிழ் இணையக் கல்விக் கழகம்“ ...இணைந்து நடத்தும்...உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டியில் வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி : இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை எழுதி வெளியிட நேரம் நிறைவடைந்துவிட்டாலும் வருத்தமில்லாமல் விருத்தமொன்று எழுதினேன்.. நேரம் கிடைக்கையில் இதை விரித்தும் எழுத உத்தேசம்!

ஈரெட்டு வயதினில் இளமையின் திறனோடு 
     நீர்விட்டு வளர்த்திடும் பயிராக   
நேரென்று நிமிர்ந்திடு நிலைமைகள் மாற்றிடு    
     நேற்றோடு குனிந்திடும் குணம்நீங்க 
வேரென்று பரவிடும் வீரத்தை விளைத்திடு 
     யாருக்கும் எதிர்நிற்கும் துணிவாக  
பாரெட்டிப் பரவிடும் பாராட்டிப் புகழ்வரும்  
     நீபெற்ற பெயர்மாறும் உயர்வாக 

ஏகட்டும் வீணது இணையட்டும் இனியது 
      நீயெட்டும் தொலைவின்று அருகாக 
பூகட்டும் நாரது பரமன்தோள் ஏறுது 
      நீசுற்றும் சுற்றங்கள் நனிதாக 
போகட்டும் போனது ஆகட்டும் ஆனது
      நீசெல்லும் வழியென்றும் புதிதாக  
 நீகட்டும் கொடியுயர் வான்முட்டிப் பறக்கட்டும்
      கைகொட்டி களிகொண்டு நிறைவாக  

Wednesday, September 30, 2015

பயன்பாட்டில் வைத்திருப்போம் பண்பாடு

மின்னணுக் கருவிகளின் உச்சங்கள்  
நுண்ணலைக் கதிர்களின் எச்சங்கள்
தலைமிராது நடக்கும் ஏஞ்சல்கள்   
தலைகுனிந்து பார்ப்பது மின்னஞ்சல்கள்;  
குறுஞ்செய்திக் கொஞ்சல்கள் 
காதடைத்த குமிழிக்குள் பாடல்கள் 
பாழடைந்த கிணற்றினுள் ஓலங்கள்
கருவிலிருந்து வந்தனவா இக்கருவிகள்?
உருவிழந்து போயினவோ இங்கு பிற உயிர்கள்?
யாகங்கள் வளர்புகையாய் வாகனங்கள்
வேகத்தில் உயிர்பறிக்கும் எமவாகனங்கள் 
நடைபாதை இல்லாத நெடுஞ்சாலைகளா 
வளநாட்டின் முன்னேற்ற அறிகுறிகள்?
தனிமமாய்ப் போவதா மனிதம்?

கண்களைப் பார்த்து நாம் பேசிடுவோம் 
காதுகள் கொடுத்து நாம் கேட்டிடுவோம்  
கால்களும் இடறி விழுந்தவரை 
கைகளைக் கொடுத்து நாம் தூக்கிடுவோம் 
உதவிகளுக்கு ரிப்ளை செய்திடுவோம்
சகிப்புத்தன்மையை பார்வர்ட் செய்திடுவோம்
வெறுப்புணர்வை டெலீட் செய்திடுவோம் 
மனிதர்களை  லைக் செய்திடுவோம்  
மனிதநேயம்   ஷேர் செய்திடுவோம் 
செல்போனில் வைத்திருப்போம் சிம்கார்டு 
பயன்பாட்டில் வைத்திருப்போம்  பண்பாடு

-----------------------------------------------------------------------------

இந்தக் கவிதை 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் 'மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015' - புதுக்கவிதைப் போட்டிகாகவே எழுதப்பட்டது.

இது என்னுடைய சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

Monday, September 21, 2015

உழுதவன் பசியும் உழைப்பவன் வறுமையும்

உழுதவன் பசியும்
உழைப்பவன் வறுமையும்
இந்த நாட்டிலே விந்தையடா
ஆள்பவனுக்கும் ஆண்டவனுக்கும்
ஆடம்பரத்தில் சிந்தையடா

வியர்வையும் சிந்தி
கண்ணீரும் சிந்துதல்
எந்த ஊரிலே தர்மமடா?

செலவினை மீறிய வரவென்பதிங்கு
செல்வந்தருக்கு மட்டும் ஏனடா?
உழுதவன் விளைவித்த பொருளுக்கு
விலை வைக்கும் உரிமை
வியாபாரிக்கு ஏனடா?

ஓய்வுக்கும் ஊதியம்
வாய்த்தவனுக்குக்
கடமையில் கவனம் ஏதடா?
லஞ்சம் வாங்கித் தின்பவனுக்குக்
கொஞ்சமும் இரக்கம் ஏதடா?
அரசியல் என்பது இந்த நாட்டிலே
ஏழை அரிசியில் கலந்த கல்லடா

பாரியும் ஓரியும்
வள்ளலென்று வாழ்ந்த
பாரத நாடும் இது தானடா
வெள்ளையரின் பின்
கொள்ளையரெனில் இனி
மக்களின் சகாயம் யாரடா?

Monday, August 17, 2015

ப.பி: கரையெல்லாம் செண்பகப்பூ

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ நாவல் படித்தேன்.
அவரின் வழக்கமான விறுவிறு கிளுகிளு பாணியில் எழுதப்பட்ட நாவல். ஆனால் வித்தியாசமாய் கிராமத்துச் சூழலில் அமைந்த மர்மக் கதை. நாயகன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு கிராமத்துக்கு வருகிறான் என்பதால் சுஜாதா தனது முன்னுரையில் வானமாமலை அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அவர் புத்தகத்திலிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களை இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார்.

அந்தப்பாடல்களில் இரண்டு எனக்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்களை நினைவுபடுத்தின. அதைப் பகிரவே இந்தப் பதிவு ..

1. மாமரத்துக் கீழே நின்னு
மங்கை குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இரை உண்ணாது.

பரிவு காட்ட ஏதோ ஒரு உயிர் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.. எல்லா காலத்திலும்.. அது நாய் பூனை என்ற வளர்ப்புப் பிராணி மட்டும் இல்லாமல் - மாமரத்து மயிலாகவும் இருக்கலாம் என்பதே இந்தப் பாடலின் சிறப்பு.

இந்த நாட்டுப்புறப் பாடல் நினைவு படுத்தும் இசைஞானியின் பாடல் "மாங்குயிலே பூங்குயிலே" என்று நான் சொல்லவும் வேண்டுமோ? " மாமரத்துக் கீழிருந்து மங்கை அவள் குளிக்க அந்த மாமரத்து மேலிருந்து புலம்புவது யாரு?"

2. திருச்செந்தூர் ஓரத்திலே
விரிச்சதலைப் பாலத்திலே
விரும்பிச்சொன்ன சத்தியங்கள்
வீணாகப் போகுதையா...

என்ற இன்னொரு நாட்டுப்புறப்பாடல் எனக்கு "ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி.." என்ற பாடலின் மெட்டை நினைவு படுத்தியது.