Friday, June 19, 2015

பட்டி, தொட்டி மற்றும் சிட்டி

வட்டியோடு சேருதையா வட்டி-
இஷ்டத்துக்கும் போடுதையா குட்டி.

உரத்தோடு மருந்தெல்லாம் கொட்டி
பயிர் செய்த கடனுக்கு வட்டி
வெள்ளாமையைத் தின்னுது வயிறுமுட்டி
விவசாயி நிக்குறான் கையைக் கட்டி.

புதுவீட்டில் குடி வரும்
கடன் வட்டி-
வீட்டைக் காலி பண்ணுமா
இந்த ஜோடி?

பிள்ளைகளைக் கட்டிக்கொடுத்தால்
தாத்தா பாட்டி-
கடனும் வட்டியும்தான்
பேரன் பேத்தி

செத்தவனை வைக்கவேணும்
ஐஸ் பெட்டி -
அதுக்கும் கட்டுறான்
கந்து வட்டி

ஐயகோ, இந்த தேசத்தில்
ஆறு முதல்;
அறுபது வட்டி.

கட்டிக் கட்டி வட்டி ஆறாத கட்டி.

“ஆண்டவரே...”, “இறைவா...”, “சாமி....”
ஆதரிக்க வேணும் இந்த பூமி.
முடிஞ்சா செஞ்சி நீயும் காமி
வட்டியில் மூழ்காத
பட்டி, தொட்டி மற்றும் சிட்டி

Wednesday, June 17, 2015

இன்னும் குமரன்னு நெனப்பு

கண்ணாடி போட்டு உன்னைப் பார்ப்பது
கஷ்டமாக இருக்கிறது
கண்ணாடி போடாவிட்டால் உன்னைப் பார்ப்பது
கஷ்டமாக இருக்கிறது

தட்டாமாலை சுற்றவா? என்றால்
‘முடியாது’ என்கிறாய்..
வேண்டாம்னு சொல்லலாமில்ல?

வளையோசை கலகலவெனப்
பேருந்து படிக்கட்டில் பாடினால்
பதறி-
மேலே வா என்கிறாய்

இன்னும் குமரன்னு நெனப்பு
என்று சிலநேரங்களில் நீ சொல்வது
பாராட்டா பழிப்பா என்று
புரியமாட்டேன் என்கிறது

நீ மட்டும் எனக்கு என்றும் மாறா
இளமையுடன் தோன்றுவது எதனாலோ?

Wednesday, June 3, 2015

இதைச் செய்யாவிட்டால் என்ன?


மசானபு ஃபுகோகா அவர்களின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளேன். (pg 137-138). அதீத வளர்ச்சியை நோக்கி இந்த உலகம் ஓடுவது தேவையற்றது என்ற கருத்தை இயற்கை விவசாயத்தின் ஊடே வலியுறுத்தியுள்ளார்.

வளர்ச்சியோ விஞ்ஞானமோ வீண் என்பதை நான் ஆதரிக்கவில்லை எனினும் பூமிமீதான மனிதத்தின் அளவற்ற அதிகாரத்தையும் உரிமை கோரலையும் விரும்பாதவன் என்கிறவகையில் இதைப் பகிர்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------

"நீங்கள் எதையுமே செய்யாவிட்டால், உலகம் இயங்கிக் கொண்டிராது? வளர்ச்சியற்ற உலகம் எப்படி இருக்கும்?"
"நாம் எதற்காக வளர்ச்சி பெற வேண்டும்? பொருளாதார வளர்ச்சி 5-10 சதவீதமாக உயரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறதா? வளர்ச்சி விகிதம் 0 சதவீதமாக இருந்தால் என்ன தவறு? இது ஒரு நிலையான பொருளாதாரத்தின் அடையாளம் இல்லையா? மிகவும் சாதாரணமாகவும், இயல்பாகவும் வாழ்வது எல்லாவற்றையும் விட சிறந்ததல்லவா?"

மக்கள் எதையாவது கண்டுபிடித்து, அது எவ்வாறு இயங்குகிறது என்று ஆராய்ந்து, இயற்கையைப் பயன்படுத்துகின்றனர். அது மனித இன உய்விற்கான ஒன்று என்றும் நினைத்துக் கொள்கின்றனர். இவையனைத்தும் இது நாள் வரை விளைவித்தது என்ன தெரியுமா? இந்த கிரகம் மாசுபாடடைந்தது; மக்கள் குழப்பமானார்கள்; நவீன காலத்தின் பெருங்குழப்பத்திற்கு வரவேற்பு ராகம் வாசிக்கப்பட்டது.

** இந்தப் பண்ணையில் நாங்கள் 'ஒன்றுமே செய்யத் தேவையற்ற' வேளாண்மையைச் செய்து, முழுமையான, ருசியான தானியங்கள், காய்கறிகள், பழங்களை உண்கிறோம். பொருட்களின் ஆதாரத்திற்கு அருகே வாழ்வதில், பொருளும், ஒரு அடிப்படையான மன நிறைவும் இருக்கிறது. வாழ்க்கை ஒரு பாடல், வாழ்க்கை ஒரு கவிதை.

மக்கள் இந்த உலகை அலசி, ஆராய்ந்து, நாம் இதைச் செய்தால் நல்லது, அதைச் செய்தால் நல்லது என்று தீர்மானிக்கும்போது,.என் ஆராய்ச்சி எல்லாம் இதைச் செய்யாவிட்டால் என்ன? அதைச் செய்யாவிட்டால் என்ன என்ற திசையில் செல்கிறது. எதையுமே செய்யாவிட்டால் இந்த விவசாயிகள் இதைவிட நன்றாக இருப்பார்கள் என்பதை கடந்த முப்பது ஆண்டு அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

மக்கள் அதிக வேலை செய்தால், சமுதாயம் அதிகமாக வளர்ச்சியுறும்; அதிகப் பிரச்சனைகள் ஏற்படும். வளங்கள் தீர்ந்து வருவது, இயற்கை அதிகமாக சீரழிக்கப் பட்டு வருவது, மனித ஆற்றல் நொறுங்கி வருவது ஆகிய அனைத்தும் மனித சமுதாயம் எதையாவது சாதிக்கவேண்டும் என்று வெறி கொண்டதன் விளைவுதான்.

முதலில் முன்னேற்றம் அடையவேண்டிய தேவையில்லாமல் இருந்தது. அதனால் எதுவும் செய்யப்படவில்லை.
எதையும் கொண்டுவரத்தேவையில்லை என்றொரு இயக்கத்தை உருவாக்க வேண்டிய இக்கட்டான நிலையில் நாம் இருக்கிறோம்!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------

** நிலத்தை உழுது பண்படுத்துவது கூடத் தேவையற்ற வெறுமனே விதைத்து, களைகள் பரவாதிருக்க வைக்கோலைப் பரப்பிப் பயிர் செய்யும் முறையை இவர் இவரது பண்ணையில் வெற்றிகரமாய் செய்ததையே "ஒன்றுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை' என்று இங்கு குறிப்பிடுகிறார்.

பி.கு
பூவுலகின் நண்பர்கள் செய்துள்ள தமிழாக்கம் எளிமையாகவே உள்ளது. எனினும் பல இடங்களில் நேரடி மொழிமாற்றம் தவிர்க்க இயலாதது என்கிற புரிதலுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்கவும்.

Sunday, April 12, 2015

கோட்டுக்குப் பதில் பூட்டு

வில்லுக்குள் ஜனகனும்
கண்ணுக்குள் ராமனும்
கோட்டுக்குள் இலக்குவணனும்
வனத்துக்குள் இராவணனும்
மனதுக்குள் அனுமனும்
தணலுக்குள் குடிமகனும்
தனக்குள் பூமகளும்
சிறைவைத்தனர் சீதையை

மாரீசன் செய்தது சதி
ராமன் சென்றது விதி
சீதை இழந்தது கதி
இலக்குவணன் இழந்தது மதி
இருந்தால் போட்டிருப்பான்
கோட்டுக்குப் பதில் பூட்டு

Sunday, April 5, 2015

'நெரிசலாயிட்டேன்' - ஒரு சாலையின் சோககீதம்

கொத்துக் கொத்தா வெட்டிப்புட்ட
எக்குத்தப்பா நீ மூடிவுட்ட
தாரும் தான் இல்லாம கொட்டிவெச்சியே
ஜல்லிக்கல்ல மேல..
நான் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன்

தோசைக்கு மேல தோசை சுட்டியே
ரோட்டு மேல ரோட்டப் போட்டு அடுக்கிவுட்டியே
கிரவுண்டு ப்ளோரத்தான் பேஸுமென்டுபோல்
ரோட்டவுட்டு பத்து அடி எறக்கிவுட்டியே
மழத்தண்ணி போவ ஒரு காவாயும் இல்ல
மனுஷங்க போவ ஒரு ப்ளாட்பார்மும் இல்ல
நான் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன் நெரிசலாயிட்டேன்

Friday, March 20, 2015

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு
சிறகை விரித்துத் தட்டு தட்டு
கிடைக்கும் புது மெட்டு மெட்டு
பாட்டுப் பாடு வட்டம் இட்டு

வீட்டின் உள்ளே சுற்று சுற்று
விசிறி இருக்கு பார்த்து பார்த்து
அரிசி இருக்கு கொத்து கொத்து
சாதம் இருக்கு பாப்பாவுக்கு

கண்ணாடி முன் நின்றுகொண்டு
சிங்காரமும் செய்துகொண்டு
உனக்கு நீயே முத்தமிட்டு
உல்லாசமாய் வாழ்ந்துவிடு

எதிரி எவரும் வீட்டில் இல்லை
குஞ்சைத் திருட யாரும் இல்லை
பல்கிப் பெருகி முன்பு போலே
கண்கள் நிறைய காட்சி கொடு

சின்னச் சின்னச் சின்ன சிட்டு சிட்டு
சிறகை விரித்துத் தட்டு தட்டு
கிடைக்கும் புது மெட்டு மெட்டு
பாட்டுப் பாடு வட்டம் இட்டு

#சிட்டுக்குருவிகள்தினம்

Tuesday, March 17, 2015

அழகோவியம்

கொண்டை குலுங்கிடக் குதித்துக் குளம்பொலி
        செண்டை அடித்திடும் புரவிகள் பூட்டி
கெண்டை சிலம்பெனச் சிலும்பிட அலைஎழும்
        பொன்னி நதிக்கரைப் புழுதியை மாற்றி
அண்டம் நிறைத்து அழகோவியம் தீட்டிடும்
        பெண்ணின் விழிச்சுடர் சோதியும் போற்றி
கண்டு வியந்தனர் அரண்மனை நான்வர
        என்னெழில் ரதிமகள் ரதத்தில் ஏற்றி

Saturday, March 14, 2015

கூடையைக் குடுத்துவுடு

சந்தைக்குப் போனீங்கன்னா மாமா
சாமந்திப் பூ வாங்கி வாங்க

சாமந்திப் பூவெதுக்கு மானே
செண்டு மல்லி வாங்கி வாரேன்

செண்டு மல்லிய வைக்க மாமா
கொண்டை ஊசி வாங்கி வாங்க

கொண்டை ஊசியோட கண்ணே
கண்டாங்கியும் வாங்கி வாரேன்

கண்டாங்கி எனக்கு மாமா
துண்டு வேட்டி உங்களுக்கு

சுருக்கா போயிவாரேன்
சுருக்குப் பைய அவுத்து
சில்லறைய நீயும் குடு

வாங்கப் போற பொருளை எல்லாம்
உள்ளத்துல கொண்டு போலாம்
வாங்குன பொருளை எல்லாம்
உள்ளங்கையிலா கொண்டு வருவீங்க?

குத்திப் பேசாத புள்ள கூடையைக் குடுத்துவுடு

வலக்கையின் விருப்பம்


மூன்று முடிச்சு போட்டு
பின்புறமாய்ச் சுற்றி
எட்டி உனது நெற்றியில்
பொட்டுவைக்க விருப்பமடி
என் வலக்கரத்திற்கு…
இன்னும் கூடி வரவில்லை
அதற்கான நேரம்

துப்பட்டாவைப் போல்
உன் தோள்மீது மெதுவாய்த்
தொட்டுப் படரவும்
காலம் வரவில்லை
என் கரத்திற்கு…

இப்போது அதன் சிறுவிருப்பம்
என்னவென்றால்
உனது இடக்கையின்
இடைவெளியில் இழுத்து
மடிமீது அழுத்தி நீ பிடித்திருக்கும்
புடவை முந்தானையைப்போல்
உன் கரம் பற்றியிருப்பதே..

Thursday, March 5, 2015

சீக்கிரமா வந்துவிடு

இங்கிட்டு நான் இருக்க
அங்கிட்டு நீ இருக்க
பொங்கிட்டு வரும் ஆசையைத்தான்
எங்கிட்டு நான் பங்கு வைக்க?

குளத்தங்கரைப் படிக்கட்டில்
சிலையாட்டம் குந்திவிட்டேன்
சில வார்த்தை உன்கிட்ட
சிரிச்சி நான் பேசினாத்தான்
உசுரு இருக்குதுன்னு என்
உடம்புகூட நம்பும்
உடனடியா வந்துவிடு

உன் நெத்தியிலே வச்சி விட
பொத்திவச்ச திருநீறு
உள்ளங்கையில் ஊறிப்
பசையாட்டம் ஒட்டிடிச்சி.
அசையாம வச்ச கையி
வெளங்காமப் போயிடும்னு
வெசனமா இருக்குதய்யா
வெரசா நீ வந்துவிடு

சாயங்காலம் ஆயிடிச்சி
சொர்ணக்கிளி காணமின்னு
சிறுக்கி ஆத்தா
சித்தப்பனை ஏவுமுன்னே
சீக்கிரமா வந்துவிடு
சிரிச்ச முகம் காட்டுறேன்.