Tuesday, April 26, 2011

மயிலேறி வருவான் குகன்

மயிலேறி வருவான் குகன் -கயிலை
மலையாளும் மன்னன் மகன் - மடல்விரி (மயிலேறி)

காலையில் கதிராக
மாலையில் மதியாக
வேலனவன் கோல எழில்
ஞாலத்தின் ஒளியாக
எந்தன் மன இருளது விலகிட
கந்தன் அவன் சுடர்விழி அருள்தர
பொங்கும் செங்கதிரென விடிந்திட (மயிலேறி)

பாடிடும் பொருளாக
பாடலின் பொருளாக
பார்முழுதும் பக்தர் உள்ளம்
நாடிடும் பொருளாக
இன்பம் அவன் அடியவர் வசமுற
இன்னல் பனித்துளியென விலகிட
மின்னல் அவன் விரைவென வழிவிட (மயிலேறி)

கோயிலில் சிலையாக
ஆழியில் அலையாக
நாடி வரும் சீடர் உயிர்
நாடியில் நிலையாக
கொஞ்சும் அருந்தமிழென சுவையுற
கொஞ்சம் அருமருந்தென பிணியற
நெஞ்சம் அதில் நினைவென நிலைபெற (மயிலேறி)

Friday, April 8, 2011

உனையன்றி யாரறிவார்

உனையன்றி யாரறிவார் என் துயரங்கள்
உனையன்றி யார் துடைப்பார்?
ஐங்கரன் தோழன் சிவ நேசன் உமை பாலன் எனதையன்.. (உனையன்றி)

குறையாத பெருஞ்செல்வம் தேடி… என்றும்
கலையாத கலைஞானம் நாடி
விலகாத உயிர் என்றும் வேண்டி என்
உடலிங்கு படும் பாடும் ஏனோ?
ஒரு- கனிக்காக உலகத்தை வலம் வந்த உமைபாலா
உனையன்றி யாரறிவார் என் உயர்விங்கு
உனையன்றி யார் அருள்வார்?

சினம் கொண்ட இனம் என்னைச் சூழ... எந்தன்
குணத்தாலும் பிறர் உள்ளம் வாட
பகையென்றும் பழியென்றும் வாழ்வில்
அடர் புகையாக இடர் சூழ்தல் ஏனோ?
வெகு- சினத்தாலே மலையேறி தனி நின்ற சிவபாலா
உனையன்றி யாரறிவார் என் சினமிங்கு
உனையன்றி யாரறுப்பார்??

மகவென்றும் மனையென்றும் வாழ்ந்து..
முக-நகும் நட்பில் நெடுங்காலம் தோய்ந்து
ஆசைகள் நிலையான மண்ணில் - மனம்
அன்புக்கு அலைபாய்தல் ஏனோ?
வள்ளி- மணம் கொள்ள மத யானை துணைகொண்ட மணவாளா
உனையன்றி யாரறிவார் என் துணையிங்கு
உனையன்றி யார் வருவார்?

Tuesday, March 15, 2011

அம்மா என்றேன்... முருகா என்றேன்

அம்மா என்றேன்... முருகா என்றேன்
அன்னையும் முருகனும் ஒன்றே
எனதையா என்றேன்… கந்தா என்றேன்
கந்தனும் தந்தையும் ஒன்றே...
புகழிலும் பழியிலும் உடன் வரும் ஒருபொருள்
அழகா உனதருள் ஒன்றே (அம்மா என்றேன்)

வேலனவன் குண-சீலனவன்
திரு-மாலவனின் மருகன் - சுவாமிமலை முருகன்
உயர்விலும் சரிவிலும் உடன் வந்து காப்பது
குருபரன் கருணைவேல் ஒன்றே (அம்மா என்றேன்)

சூரர் படை அழித்த வீரனவன்
நக்கீரர் படை புகழும் வேந்தனவன்
இரவிலும் பகலிலும் வழித்துணை வருவது
குமரனின் கதிர்வேல் ஒன்றே (அம்மா என்றேன்)

ஆண்டியின் கோலம் கொண்ட அரசனவன்
அலங்காரங்கள் ஏதுமற்ற அழகனவன் குமரன்
பொலிவிலும் நலிவிலும் புகலிடமாவது
பழனியின் மலையடி ஒன்றே (அம்மா என்றேன்)

கந்தா சரணம் முருகா சரணம்
கந்தா முருகா சரணம் சரணம்


Wednesday, March 9, 2011

மேதினியின் மேய்ப்பர்

மேதினியின் மேய்ப்பரே
மெய்ப்பொருள் நீரே
பாமரரின் பிதாவும் நீரே
சோதரரின் சகாயம் நீரே
ஊழியர்க்கோர் உபாயம் நீரே
ஊழ்வினைக்கோர் அபாயம் நீரே (மேதினியின்)

விரலில் இயங்கும் விசையாவீர்
குரலில் மயங்கும் இசையாவீர்
திசையின் இருளில் ஒளியாவீர்
அசையும் பொருளில்  உயிராவீர்
விசையும் இசையும் தேய்ந்தாலும்
ஒளியும் உயிரும் ஓய்ந்தாலும்
ஜெபமே என்றும் ஓயாது எம்
ஜெபமே என்றும் ஓயாது (மேதினியின்)

முள்ளின் மகுடம் அணிந்தீரே
செந்நீர் மழையில் நனைந்தீரே
சிலுவை பளுவைச் சுமந்தீரே
சிதைவும் வதையும் சகித்தீரே
செந்நீர் மண்ணில் விழுந்தாலும்
கண்ணீர் விழியில் வழியாமல்
கருணை மழையைப் பொழிந்தீரே என்றும்
கருணை மழையைப் பொழிந்தீரே (மேதினியின்)
(சமீபத்தில் இறைவனடி சேர்ந்த நண்பன் சேவியர் நினைவில் எழுதிய இறை துதி)

Tuesday, November 30, 2010

மண்புழு

தார்ச் சாலையில் மண்புழு
பிட்டுக்கு மண்சுமந்தான் முக்கண்ணன் - மூவடியில்
எட்டி உலகளந்தான் மால்வண்ணன் - பூவுலகில்
துட்டுக்கு மாந்தர் அலைந்து அளந்து-கை
விட்டமண் தேடும் புழு

Friday, November 19, 2010

கார்த்திகை தீபம்

திருவாய் திறந்து மணிகள் ஒலிக்கத்
திருநாள் அறிந்து திசைகள் சொலிக்கத்
திருமகள் சூடும் மணியாகும் - தீபத்
திருவிழா சூழும் சுடர் 

அருவாய்த் தகிக்கும் தணலில் லர்ந்து
உருவாய்த் திகைக்கும் ஒளியில் மிளிர்ந்து
தருவாய்த் தழைத்துத் தரணி நிறைக்கும்
இருளில் அகலால் பகல்

கருணை மழையைப் பொழிந்திட வானில்
வருணன் கடலை அழைத்திடத் தேரில்
அருணன் வரவழி காட்டும் விளக்கே
அருணை மலையில் மலர் 

அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்  

Thursday, November 18, 2010

பேரா நீ நல்ல பேரா எடுடா

பேரா நீ நல்ல பேரா எடுடா

என் அப்பனுக்கும் உன் அப்பனுக்கும்
இடையேன் சொல்வதைக் கேளடா
உன் விழைவிற்கும் உன் உயர்வுக்கும்
இடையில் வருவது வியர்வையடா
உன் உறுதிக்கும் உன் உயர்வுக்கும்
தடையாய் அயர்வதைத் தள்ளடா ... ( பேரா...)

என் சோற்றிலும் உன் சோற்றிலும்
விழாது பிழைத்த நெல்லடா
மண் சேற்றிலும் பின் நாற்றிலும்
கெடாது தழைத்த நெல்லடா
சிறிது சோறுமாய் நிறைய நெல்லுமாய்
நீ வாழும் நாட்களை மாற்றடா ... ( பேரா...)
____________________________________

தாமதமான மழலையர் தின வாழ்த்துக்கள்.
என் தந்தை என் மகனுக்குச் சொல்வதாய் நான் அமைத்த பாடல்
படத்தில்: என் தந்தையும் என் மகனும்



Sunday, October 31, 2010

கனவு வேலை


ஒரே கருத்து  -  இரண்டு வடிவங்களில் : 

கனவு வேலை (லிமரிக்)


மதிய இடைவேளையில் அடிப்பது அரட்டை
மற்ற இடைவெளிகளில் படிப்பது இன்டர்நெட்டை
தேடியதோ கனவு வேலை
செய்வதோ தூங்கும் வேலை
அலாரமாய் வைப்பதோ தன்னுடைய குறட்டை !!

இரு(க்)கைச் சயனம் (வெண்பா)

கயல்போல் விழிகள் இரவில் உறங்கி
அயராது மீண்டும் துயில்வதும் ஏனோ?
சயனம் செயவோ பணியில் இரு(க்)கை?
வியப்புன் குறட்டை விழிப்பு!


பயணம் புரிவதில் பாதையும் தேயப்
புயலாய்ப் புகையும் புழுதியும் மேவ
முயலென முந்தியே வந்துமேன் தூக்கம்?
உயரும் கரிகால் பதிவு! (carbon footprint)

Thursday, October 14, 2010

அன்னைப் பறவை

முடக்குவதற்கல்ல முட்டையில் இட்டது
அடைப்பதற்கல்ல அடைகாத்து  வந்தது
உடைத்து வா வெளியே
நீ பறக்கப் பிறந்தாய்-

உன்னால் நான் பெற்றேன் -
பருந்தை விரட்டும் வீரம்;
உன்னால் நான் பெற்றேன் -
அதிகம் பறக்கும் தூரம்.

அலகு நிறைத்து வருவேன்.
வாய் திற.
வள்ளுவன் பாடட்டும்-
அமிழ்தினும் ஆற்ற இனிதே அன்னையின்
அலகு அளாவிய  அரிசி.

இருளில் தான் வாழ்ந்து வந்தேன்-
இருக்கட்டும் நீ வைத்துக்கொள் இதோ
மின்மினி விளக்கு...
தூரத்து மாமரத்தின் குயிலிசை கேட்கிறதா?
இன்று உறங்கிவிடு-

நாளை ஒன்று செய் -
பெற்ற பொழுதிற் பெரிதுவப்பேன்
கூடுவிட்டு எழும் உன் முதல் சிறகசைப்பில்-

பிறகு என் இறகுகள் உதிர்ந்தால் என்ன?
மனிதன் உதிர்த்தால் என்ன?