Sunday, April 26, 2020

துளி நீர்


நீர்த்துளியாக விடுபட்ட
துளி நீர்,
நீர்த்துளிக்குள் சிறைப்பட்டதாகவே தவித்துப் போகின்றது

நிலையற்ற துளிகளையே
நாம் காண்கிறோம்-
தாமரை இலை மேலும்
மழையின் ஒழுக்கிலும்
விழிகளின் ஓரத்திலும்.

சந்தர்ப்ப சாதுர்ய சதிகளின்
நிகழ்தகவில்
சங்கமித்து சுயமிழக்கின்றன துளிகள் -
சமூகத்தின் தனி மனிதர்களைப் போலவே.

பாலா சிவசங்கரன்
26 04 2020


Wednesday, March 18, 2020

நாவல் கரோனா - REMIX

நாவல் கரோனா - REMIX
(காதல் பிசாசே பாடல் மெட்டு)

நாவல் கரோனா
நாவல் கரோனா
வேணாம் வராதே பரவாயில்லை
நாவல் கரோனா
நாவல் கரோனா
போதும் அவஸ்தைகள் பரவாயில்லை
சீனாவும் சுகமாயில்லை
ஈரானும் நலமாயில்லை
இந்தியாவை விட்டுவிட்டால் பரவாயில்லை
அமெரிக்கா பரவாயில்லை
ஐரோப்பா சரியாயில்லை
எங்களை நீ விட்டுவைத்தால் பரவாயில்லை

கொஞ்சம் ஒதுங்கல் கொஞ்சம் பதுங்கல்
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ
கைகள் கழுவல் தூய்மை பழகல்
சொல்லிக் கொடுத்தாய் நீநீநீ
ஐயோ அம்மம்மா நான் யாரோடும்
பேசாத வெட்கத்தை நீயே தந்தாய்
அப்பா அப்பப்பா நான் யார் மீதும் மோதாத சங்கோஜம் நீயே தந்தாய்
இது போதும் விட்டுச் செல்லு
தாங்காது சொன்னா கேளு
மருந்தொன்று கண்டுபிடித்தால் பரவாயில்லை

Thursday, December 12, 2019

இனிய புத்தாண்டு 2020 -:இளமை அதோ அதோ

என் வயதிற்கு இந்தப் புத்தாண்டில் "இளமை இதோ இதோ" பாடலை அப்படியே பாட முடியாது. அதனால் கீழ்க்'கண்டபடி' மாற்றியுள்ளேன்! சக வயது சகலைகள் சந்தோஷமாக இதைப் பாடலாம்!

*****
ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லாம் என் பெண்ணோட friend-கள்
இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

ராஜா சாரின் ரசிகன்
பாலு ஜானு நேசகன்
கமல் படங்கள் பார்ப்பவன்
ரஜினி ஸ்டைலால் ஈர்ப்பவன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
பெல்பாட்டக்(bell bottom) காலங்கள்
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள்
SPB சாயல்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

தமிழில் மட்டும் பாடுவேன்
இந்திப் பாட்டும் கேட்டுப்பேன்
மை முஜே கே லீயே
இதிலென்ன கேலியே?
தாய் பேசும் மொழியில் பேசம்மா
களத்தூரின் கண்ணம்மா
உனக்காகப் பாடும் நானும் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறுமே Smule பாடுவேன்
நான் தான் சகலைக்கெல்லாம் நல்லவன்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

பைக் எடுத்து ஓட்டுவேன்
மைக் பிடித்துப் பாடுவேன்
சுற்றுவதில் சூரன் நான்
கத்துவதில் வீரன் நான்
புது ஆண்டில் சோகம் கிடையாது
மகிழ்ச்சிக்கு அளவேது?
நமை வெல்ல யாரும் கிடையாது
பகையென்று யார் கூறு?
நாள்தோறுமே கொண்டாட்டம் தான்
வா வா புது வருடம் போகலாம்!

இளமை அதோ அதோ
இனிமை அதோ அதோ

Tuesday, December 10, 2019

"குடி மற" பாடல்


"சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்" பாடல் மெட்டு
---------

குடித்துக் குடித்து குடல் கெடுத்துக் கொண்டாய்
உடல் மிடுக்கும் துடிப்பும் இன்று இழந்து நின்றாய்
படித்த படிப்பும் அதை மறந்து விட்டாய்
சபை நடந்து நடந்து வரும் தரம் இழந்தாய்

எழிலும் இழந்தாய் மொழியும் இழந்தாய்
தொழிலில் வரவும் இழந்தாய்
புழுவின் பெருமை எளிதில் அடைந்தாய்
தெருவில் தனியே நடந்தாய்

இளமை இழந்தாய் இனிமை இழந்தாய் புகழும் பணமும் இழந்தாய்
குடும்பம் இழந்தாய் குழந்தை இழந்தாய் குலத்தின் பெயரும் இழந்தாய்

#குடிமற

Sunday, December 8, 2019

ஐட்டம் சாங


இது ஒரு ஐட்டம் சாங். ஐட்டத்தின் பெயர் Tea!

அறிந்தும் அறியாமலும் படத்தில் வரும் "தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா" பாடல் மெட்டு
------
டீ குடிக்க டீ குடிக்க கேன்டீன் போலாம் வா
என் தலை ரொம்ப வலிக்குது
கேன்டீன் போலாம் வா
பிரேக் எடுத்து பிரேக் எடுத்து
வேலை செய்யலாம்
உன் மணி பர்ஸை மறக்காமல் கையில் கொண்டு வா
சால்ட்டு பிஸ்கட்டு அதைப் போட்டு நொறுக்கு
கோல்டு லிக்விடு அதை சூடா இறக்கு

சரணம்:
(நண்பனிடம்)
நண்பா, அந்த மெனுவைப் பார்த்து
நல்ல பிளேவர் தேர்வு செய்து ஆர்டர் செய்
(டீ போடும் பையனிடம்)
ஹே ப்ரோ, இதழ் பருக பருக
மனம் உருக உருக கொஞ்சம் தேநீர் செய்
பெருகுது பெருகுது நறுமணம்
நொறுங்குவது நொறுங்குவது நுரைமனம்!
இஞ்சிக்கு டீயுடன் திருமணம்!
மாலை மாற்றிடுதே...!
(Yes. Tea changes the evening)
ஓஹூ ஓஹூ ஹோ
ஒஹு ஒஹு ஓஹூ ஹோ!

#TeaSong
#Thanglish
#ThankYouYuvan

Saturday, November 30, 2019

சிறுமழைதான் பொழிகிறதே

மழைநீர் தேங்கிய தெருவில் இறங்கி நடக்கையில் தோன்றியது...
"முன் பனியா முதல் மழையா" நந்தா படப் பாடல் மெட்டு.

***************

சிறு மழைதான் பொழிகிறதே
என் தெருவில் நீர்தான் நிறைகிறதே
வழிகிறதே ஷூ நனைகிறதே...
வடியாத தெருவில் நின்றேன்
புரியாமல் இறங்கிச் சென்றேன்
மாற்றம் தருவது யார் தானோ?

ஒரு காலத்தில்.. ஒரு காலத்தில்
மழை பெய்தாலும் அதுவும் வடியுமடி
இந்தக் காலத்தில் இந்தக் காலத்தில்
மழை போகின்ற பாதை மறைந்ததடி
நடுவினில் குழிகளில் கால் படுமோ?
வழிவரும் வாகனம் சாய்ந்திடுமோ?
வாழ்கிறோம் நாம் நம் சென்னையில்...

என்றும் இயற்கையின் வழி நடக்கையில்
அது எப்போதும் நமக்கு நலம் தருமே
இன்று செயற்கையின் வழி நடக்கிறோம்
அது எப்போதும் நமக்கு இடர் தருமே
மழையையும் வெயிலையும் தாங்கிடுமோ?
மழலையும் முதுமையும் தான் நகுமோ?
மாறுமோ நாளை நம் சென்னையே...?


Monday, August 26, 2019

தமிழ் சொல்லாத நன்னெறியா?


(பனியில்லாத மார்கழியா பாடல் மெட்டு)

தமிழ் சொல்லாத நன்னெறியா?
தமிழில் இல்லாத தேன்சுவையா?
மழலையும் பேசத் தயங்கிடுமா?
மறந்துவிட்டால் அது தாய்மொழியா?

முயற்சியில்லாமல் முடிந்திடுமா?
பயிற்சியில்லாமல் தொடர்ந்திடுமா?
முயற்சியில்லாமல் முடிந்திடுமா?
பயிற்சியில்லாமல் தொடர்ந்திடுமா?
தமிழ் சொல்லாத பள்ளிகளா?
மழலைக்கு ஊட்டும் கள்ளிகளா?
மழலைக்கு ஊட்டும் கள்ளிகளா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

இஷ் இல்லாமல் பெயரில்லையா?
இஷ்டம் இல்லாமல் தமிழ்ப்பெயரா?
இஷ் இல்லாமல் பெயரில்லையா?
இஷ்டம் இல்லாமல் தமிழ்ப்பெயரா?
கஷ்டமில்லாமல் புகுத்திவிட்டார்
நஷ்டமென்றால் அது நமக்கல்லவா?
நஷ்டமென்றால் அது நமக்கல்லவா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

குலத்தினைக் காக்கும் தெய்வங்களும்
மொழியினைக் காக்க மறந்திடுமா?
குலத்தினைக் காக்கும் தெய்வங்களும்
மொழியினைக் காக்க மறந்திடுமா?
நிலத்தினை ஆளப் பிற இனமா?
நாவினை ஆளப் பிறன் மொழியா?
நாவினை ஆளப் பிறன் மொழியா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

(கூடுதலாக இன்னொரு சரணம்)
படகில்லாத பாய்மரமா?
பார்வையில்லாமல் ஓவியமா?
படகில்லாத பாய்மரமா?
பார்வையில்லாமல் ஓவியமா?
நுகர்வில்லாத பூமணமா?
உணர்வில்லாத தமிழினமா?
உணர்வில்லாத தமிழினமா?
(தமிழ் சொல்லாத நன்னெறியா?)

பாலா சிவசங்கரன்
26 ஆக 2019


ஒரே ஒரு காரணம்
------------------

மேற்படி எனது பாடலைப் படித்த நண்பர்கள் சிலர், தம் மழலையருக்கு வடமொழிப் பெயர் வைத்துள்ளது குறித்தும் தமிழை விடுத்து இந்தி அல்லது பிற மொழியை இரண்டாவது மொழிப்பாடமாக வைத்துள்ளது குறித்தும் பேசினர் / வருந்தினர்.

குற்றம் சாற்றுவதும் குற்ற உணர்ச்சி கொள்வதும் எனது நோக்கமல்ல. எனது பாடல் இன்றைய நிலையை எடுத்துரைக்கிறது. இன்றைய நிலையின் புரிதலுடன் மேல் நகர்வோம். இது வரை செய்த தவறுகளை அடுத்த ஒரு தலைமுறைக்குள் சரி செய்ய முயல்வோம் முனைப்பாக.

25 ஆண்டுகளுக்கு முன் "உங்கள் பிள்ளையை தமிழ் வழியில் கற்பிப்பீர்களா ஆங்கில வழியிலா?" என்ற விவாதம் இருந்தது. இப்போது "தமிழ் மொழியை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிப்பீர்களா? மொழிப்பாடம் அவசியமா என்ன?" என்று கேட்கும் அளவிற்கு மொழித் தேய்வு நிகழ்ந்துள்ளது. இதுதான் ஒரு தலைமுறையில் நாம் கண்டுள்ள மாற்றம்.

பெயரில் தமிழில்லை என்ற கருத்து இரண்டாம் பட்சமே. அது ஒரு அவா என்ற அளவில் எடுத்துக்கொண்டு முதன்மையான பிரச்சினைக்கு நகர்வோம். தமிழகப் பள்ளிகளில் தமிழ் என்பது ஒரு மொழிப்பாடமாகக் கூடக் கற்பிக்கப்படுவது மறுக்கப்படுகிறது (அல்லது தமிழ் மொழியைப் பயிலாமலேயே ஒரு மழலையின் கல்வித்தேர்ச்சி சாத்தியமாகிறது) என்பதே நாம் முதலில் சரி செய்ய வேண்டியது.

தமிழ் மொழியைக் கற்பதால் பிள்ளைகளின் வருங்காலத்துக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளைகள் படிக்கும் கணிதம் அறிவியல் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுவது போலவே தமிழ் மொழியும் நிச்சயம் பயன்படும் என்பதை சிறியதொரு அக ஆய்வில் நாம் அனைவருமே உணரலாம். வாழ்வின் எத்தகைய ஒரு சூழலுக்கும் ஒரு குறள் விடையாக அமைகிறது. ஒப்புக்கொள்கிறீர்களா? பாரதியின் பாடல்கள், பண்டைய தமிழ் நூல்கள் அனைத்திலும் எத்தனையோ அறிவார்ந்த சிந்தனைகள் அழகின் வெளிப்பாடுகள் பொற்குவியல்களாகக் குவிந்துள்ளன. ஒப்புக்கொள்கிறீர்களா? இச்செல்வங்களைத் துறப்பதென்பது சொந்த நாட்டிலேயே அகதியாவதற்கு ஒப்பாகும். பாடுபட்டு நம் முன்னோர் தேடிச் சேர்த்த மொழிச்செல்வங்கள் அனைத்தையும் புதைத்துவிட்டு ஏழைச் செல்வந்தராய் இறப்பது அறிவுடையோர் செயலா?

இச்செல்வங்களைத் தொடர்ந்து உரிமை பாராட்டுவதையும், துய்த்து மகிழ்வதையும் நமது வருங்கால சந்ததிகள் இழந்துவிடக் கூடாது என்ற ஒரு காரணம் போதாதா நம் பிள்ளைகளுக்கு நாம் தமிழ் பயிற்றுவிக்க?

Monday, August 19, 2019

வாட்சாப் அதிகாரம்


1.
அகர முதல எழுத்தெல்லாம் அன்று!இன்று
வாட்சாப் முதற்றே உலகு
2.
வேண்டுதல் வேண்டா எலாமுள்ள வாட்சாப்பை
யாண்டும் நோண்டார் இலர்
3.
எப்பொருள் வாட்சாப்வாய் கேட்பினும் அப்பொருள்
கப்சாவா வென்றாய்ந் துணர்
4.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் வாட்சாப் கருமமே கட்டளைக் கல்
5.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையவாட் சாப்
6.
உழைப்பதற்கு இல்லாத நேரம் சிறிதளவு
வாட்சாப்க்கும் ஈயப் படும்
7.
இனிய உளவாக இன்னாத கூறிவிட்டு
சாந்துணையும் சச்சரவு ஏன்?
8.
பீலிபெய் வாட்சாப்பும் போரடிக்கும் பார்வர்ட்கள்
சால மிகுத்துப் பெயின்
9.
மோப்பக் குழையும் அனிச்சம் தலைகுனிந்து
நோக்கக் குழையும் கழுத்து
10.
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்குக்
கேடாகும் வாட்சாப் சுவை

Wednesday, July 24, 2019

மெல்ல நட மெல்ல நட - remix


It is raining in Chennai. Ride your bikes safely.


ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
சாலையை காண்ட்ராக்டர் அமைத்தார்
அதில் லாபத்தை அவர்தான் எடுத்தார்
காணவில்லை அதன் பெயர் தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்
நம் EB நண்பர் அதைப் பெயர்த்தார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
வயதுள்ள மங்கையர் நடப்பார்
இங்கு வடைசுடும் பாட்டியும் கடப்பார்
சமிக்ஞையை அவர்தான் மதிப்பார்
அதை மீறிச்சென்றால் அவர் சபிப்பார்
அதை மீறிச்சென்றால் நம்மைச் சபிப்பார்....
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?

சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
சாலையில் எதற்கிந்த துடுக்கு?
இரு கால்கைகள் உடைந்த பின் துடிப்பு
உயிருக்கும் இங்கில்லை மதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
தினம் ஏறிடுதே இரத்தக் கொதிப்பு
ராஜா மெல்லவிடு மெல்லவிடு பைக்கு என்னாகும்?
குண்டுகுழி சாலைகள் மோசம்
வரும் வண்டிகளைக் கவிழ்த்துவிடும்
நம்மை one not eight (108) ஏற்றிவிடும்

Tuesday, July 9, 2019

யாருக்காக இது யாருக்காக?

யாருக்காக இது யாருக்காக?
எங்கள் காவிரி அகண்ட காவிரி
நீரும் இன்றியே வறண்ட காவிரி
யாருக்காக இது யாருக்காக?
தாகமே போ... போ....
மேகமே வா.... வா....

மலைகள் மீது மழை பொழிந்தது
அது அருவியாகி அழகு தந்தது
சொர்க்கமாக நதியும் பாய்ந்தது
இன்று நரகமாகக் காய்ந்து விட்டது

மலர்கள் தானே நாம் வளர்த்தது
அந்த மலர்கள் இன்று ஏன் உதிர்ந்தது?
குயில்கள் தானே நாம் ரசித்தது
அந்தப் பறவை இன்று ஏன் மறைந்தது?

எழுதுங்கள் நதிநீர் சாசனத்தில்
நதிகள் பூமியின் உடைமை என்று
பாடுங்கள் உலகம் முழுதும் சென்று
உழவு மானிடக் கடமையென்று

உழவு செய்து நாம் பிழைத்தது
அந்த உழவு இன்று ஏன் கசந்தது?
பயிர்கள் காய்ந்து நாம் தவிப்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது

தொன்றுதொட்டு இங்கு வந்தது
அதில் என்றிருந்து பங்கு வந்தது?
அங்கிருந்து ஆட்சி செய்பவர்
தினம் ஆடுகின்ற நாடகம் இது