Thursday, February 2, 2017

அவளும் நானும்

அவளும் நானும் உமையும் சிவனும்
அவளும் நானும் விழியும் வழியும்
அவளும் நானும் உரமும் பயிரும்
அவளும் நானும் கதையும் பாட்டும்
அவளும் நானும் அறமும் பொருளும்
அவளும் நானும் காற்றும் குமிழும்
அவளும் நானும் அகமும் புறமும்
அவளும் நானும் அருகும் தொலைவும்
அவளும் நானும் சரியும் தவறும்
அவளும் நானும் சிவப்பும் கறுப்பும்

Friday, January 27, 2017

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 35

சந்தம்: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

எங்கு மனங்கள் அச்சமின்றி
தலை நிமிர்ந்து நிற்குமோ
எங்கு பணத்தின் தேவையின்றி
யார்க்கும் கல்வி கிட்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு பூமி பூசல் கொண்டு
பிரிந்து நிற்கவில்லையோ
எங்கு நெஞ்சின் ஆழம்கண்டு
உண்மை வார்த்தை ஆகுதோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

எங்கு மக்கள் முயற்சி நல்ல
மாற்றம் நோக்கிச் செல்லுமோ
எங்கு தெளிந்த எண்ண ஓடை
பாலை நிலங்கள் தாண்டுமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

பரந்த எண்ணம் செயல்கள் எங்கு
சிந்தையைச் செலுத்துமோ
அந்த சொர்க்க பூமியாக
எந்தன் தேசம் விழிக்கட்டும்

Tagore’s English version:

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

Wednesday, January 11, 2017

பழைய பாய்லர்

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்கையில்
பரணில் பழைய பாய்லர் இருந்தது.
கரி போட்டு வெந்நீர் வைத்த
சிறுவயது நினைவுகள்
நெஞ்சினுள் புகையெழுப்பிக் கிளம்பின
போட்டுவிடலாமா என்று வீட்டில் கேட்டதற்கு
வேண்டாம் இருக்கட்டும் என்றேன்.

சிறுவயது நினைவுகளுடன்
எப்படி நம் காதல் நினைவுகள்
கலந்தன என்று தெரியவில்லை
பாய்லரைத் தொட்டு சூடு பார்த்த நினைவில்
உன் கன்னம் தொட்ட நினைவு வந்தது
குளித்துத் துடைத்த நினைப்பில்
உன் கண்ணீர் துடைத்த நினைவு வந்தது
துடைத்து பத்திரமாய்க் கட்டிவைத்தேன்.

உன் வீட்டுப் பரணிலும்
ஏதோ ஒரு பொருளில்
நம் காதல் ஒளிந்திருக்கக் கூடும்.
அதைப் போடாமல் வைத்திரு
அது இருப்பதால் ஒரு பயனும் இல்லாமல் இருக்கலாம்
அது இருக்கிறது என்ற பயனைத் தவிர

Friday, January 6, 2017

புத்தகத் திருவிழாவில் "பிள்ளைப்பா"

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் "யாமறி" தமிழ்க் குழும நண்பர்கள் பலரின் முயற்சியில் உருவான "பிள்ளைப்பா" மழலையர் பாடல்கள் (புத்தகம்+ஆடியோ CD) நான்கு அரங்குகளில் கிடைக்கும்.
1. பனுவல் (அரங்கு எண் : 471, 472)
2. நூலகம் பேசுகிறது (அரங்கு எண்: 409)
3. புதுகைத் தென்றல் (அரங்கு எண் : 82)
4. தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம் (அரங்கு எண் : 214)
இந்த முறை புத்தகச் சந்தை கழிவு விலையுடன் நமது கூடுதல் சலுகையையும் சேர்த்து 20% கழிவு விலையில்(ரூ 120/-) கிடைக்கும்.

"நேர்மறை எண்ணங்கள்; தாய் மண்ணின் வண்ணங்கள்" நம் மழலைகளுக்கு ஊட்டவேண்டும் என்பதே இந்த வெளியீட்டின் நோக்கம்.

25 பாடல்கள் அடங்கிய இந்தத் தொகுதியின் சில பாடல் துளிகளை இங்கே கேட்கலாம்.







Friday, December 2, 2016

டேக் இட் ஈஸி பாலிசி

A R ரஹ்மானின் கீழ்க்கண்ட Face Book பதிவிற்கு எனது முயற்சி :
Dear friends, I'm trying to rearrange 'Take it Easy Urvasi' for a performance and wish to update the Charanams.
Feel free to contribute.. Ofcourse please do leave out and avoid any reference to Hilary Clinton, Donald Trump or the currency situation for now and try to come up with something interesting & humorous in the same scaling of the original Tamil version..
------------------------------
(சிறிய மழலைகள்)
Fridge-ல் வைத்த தாய்ப்பால் கிடைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
பிஞ்சு உடம்பில் Flu shots கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி

(பள்ளி மாணவர்)
Geometry Box-ஐ அண்ணனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி
Zoology teacher long leave போனால் டேக் இட் ஈஸி பாலிசி

(கல்லூரி இளைஞர்)
அடிக்கடி வீட்டில் உப்புமா செஞ்சா டேக் இட் ஈஸி பாலிசி
Arrears clear பண்ண அப்பாம்மா கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி

(அலுவலகத்தில்)
ஜிம்முக்குப் போயி நண்பனும் இளைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
ஜம்முன்னு ஆன்சைட் எனிமியும் போனால் டேக் இட் ஈஸி பாலிசி

(NRI)
Statue போல் Beauty - Break up சொன்னால் டேக் இட் ஈஸி பாலிசி
Statue of Liberty Torch Light கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி

(முதியவர்கள்)
Skype-ல் பேசப் பேத்தியும் மறுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி
Wife பேச்சைப் பையனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி

Thursday, November 24, 2016

புத்தி உள்ள மனிதன் எவனும்

புத்தி உள்ள மனிதன் எவனும் வட்டிக்கு வாங்குவதில்லை
வட்டி நிறைய கட்டும் மனிதன் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதனிடம் கடன் இருப்பதில்லை
கடன் இருக்கும் மனிதனிடம் பணமும் சேர்வதில்லை
கடமை என்ற பெயரினிலே கடனை வாங்கிக் குவிப்பான்
கௌரவத்தின் பெயரினிலே மானத்தையே இழப்பான்

அவசரத்தில் வாங்கும் கடனை அவசியமாய் நினைப்பான்
அலட்சியத்தால் அதிக வட்டிப் புதைகுழியில் நடப்பான்
ராப்பகலாய் அவன் உழைப்பான் வியர்வையிலே குளிப்பான்
ஆப்படித்து வால் நுழைத்த குரங்கைப் போல முழிப்பான்

நல்லவர்கள் கொடுக்கும் கடனை நாமம் போட நினைப்பான்
பொறுக்கியிடம் வாங்கும் கடனைப் பொறுப்புடனே அடைப்பான்
கருப்புப்பண முதலைக்குத்தான் கறிசோறு படைப்பான்
கழுத்தை நீட்டி வந்தவளைப் பட்டினி போட்டுப் படுப்பான்

Friday, November 18, 2016

பருவ மழை வேண்டுதல்

சஞ்சீவி மலை சுமந்த அனுமனே
எம் ஜீவன் பிழைக்கவும் நீர் அருள்வீர்
மலை போன்ற மேகங்கள் - உம் தந்தை
வாயுவிடம் தந்தனுப்புங்கள்

பள்ளி கொண்ட பெருமானே
கொள்ளி பற்றுமோ எம் பயிர்களை?
கடலினைக் கடைந்தெடுத்து
அமிர்த மழை தாருங்கள்

ஈசனே நீல கண்டரே
பாசம் வைப்பீர் பரமனே
கரியமில நஞ்செல்லாம்
காற்றினிலே நீக்கிவிட்டு
துரிதமாய்த் தாருங்கள்
பருவ மழை மேகங்கள்

ஏழை விவசாயியும் சிலுவையில் மரிப்பதோ?
செந்நீர் சிந்திய பரம பிதாவே உமது
பரிசுத்த ஆவியால் நன்னீர் மேகங்கள் நல்குவீரே

கடனுக்கு வட்டி பாவம் என்ற நபிகளே
பயிர் செய்யக் கடன் வாங்கி
உயிர் மாய்ப்பதா ஒரு விவசாயி?
அல்லாவின் கருணையால்
எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை

ஆசையினால் துன்பமென்றீர் ஐயா
வயிற்றுப் பசி ஆசையா துன்பமா?
புத்தம் புது மேகங்கள் தாருங்கள் புத்தரே

சாய் பாபா விவசாயி பாபா

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 23

சந்தம் : ஆசை முகம் மறந்து போச்சே

மருகி மருளும் அந்த வானம் - புயல்
திரளும் இரவில் உந்தன் பயணம்
உருகும் எனக்கும் இல்லை உறக்கம் - இருள்
திறந்து திறந்து கண்கள் தேடும்
உருவம் எதுவும் இல்லை அங்கே - உந்தன்
வழியும் தெரியவில்லை எங்கே?
கரிய நதிக்கரையின் வழியோ? - அடர்
வனத்தின் விளிம்பின் வழி தானோ?
இனம் புரியா இருட்டு வழியோ - என்னைக்
காண நீ வரும் வழி ஏதோ?

Tagore's English version:

Art thou abroad on this stormy night on thy journey of love, my friend? The sky groans like one in despair.
I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend!
I can see nothing before me. I wonder where lies thy path!
By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest,
through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend?

Friday, November 4, 2016

அம்மாவைப் பார்த்தீங்களா?

நம் முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்த உண்மைகளை அறிய தமிழகமே காத்திருக்கிறது. அவர் நலம்பெற எத்தனையோ வேண்டுதல்கள்.

முதல்வரின் உடல்நிலை பற்றி எண்ணும் போதெல்லாம் "அம்மாவைப் பார்த்தீங்களா?" என்று அன்னக்கிளி பாடலின் மெட்டில் சில வரிகள் என் மனதினுள் ஓடும்.

"அம்மாவைப் பார்த்தீங்களா? அப்போலோ ஆஸ்பிடல்ல
நர்ஸக்கா நீயும் பார்த்தாக்கா சொல்லு - அம்மா
சாப்பிட்டாங்களா தெரியலியே - கண்ணு
முழிச்சாங்களா தெரியலியே

அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
புது ரத்தத்தோடு புது வேகத்தோடு
அம்மாவும் வந்து
தமிழ்நாட்டை ஆள்க
தமிழ்நாட்டை ஆள்க "

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒரு நாள் பணியாற்ற இயவில்லை என்றாலும் அது எவ்வளவு பெரிய இழப்பு? எத்தனை நலத்திட்டங்கள் எத்தனை முடிவுகள் தேங்கி நிற்கும் என்று எண்ணினால் பெரும் வருத்தத்தைத் தருகிறது. முதல்வர் விரைவில் குணமடைய முருகப் பெருமானை வேண்டி வணங்குகிறேன்.

சில நாட்களுக்கு முன் ஒரு கடைமுன்னால் நின்று கொண்டிருந்தபோது ஒரு மூதாட்டி என்னிடம் ஐந்து ரூபாய் கேட்டார். நான் எடுத்துக் கொடுத்தேன். என் மனைவியும் அவர் பையிலிருந்து பணத்தை எடுக்க முற்படும்போது அந்த மூதாட்டி "ஐந்து ரூபாய் போதுமம்மா நான் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் கொள்வேன்" என்றார்.

தர்மம் தலை காக்கட்டும்.

Wednesday, November 2, 2016

ஒத்த ரூபா தாரேன்

மாநகரப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.
ஒரு பயணி 11 ரூபாய் சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்துவிட்டு கூட்டமாய் இருந்ததால் முன்னே நகர்ந்து சென்றார்.

நிறைய நேரம் ஆகியும் அந்தப் பயணி மீதி பணம் ஒரு ரூபாய் தராததால் நடத்துனர் கடுப்பாகி "ஏம்பா எங்க முன்னாடி போயிட்டே.. இன்னும் ஒரு ரூபாய் கொடு..." என்றார். அந்தப் பயணி "இதோ தரேன்" என்று பையில் துழாவிவிட்டு "பத்து ரூபாயா இருக்கு பரவாயில்லையா?" என்றார். "நீ நூறு ரூபாய் நோட்டாயிருந்தாலும் கொடு. மீதி தருகிறேன்" என்றார் மீண்டும் கடுப்பாக.

பயணி ஒருவழியாய் ஒரு பத்து ரூபாய் தாளை வழியில் நிற்பவர்களிடம் கொடுத்தனுப்பினார்.

பணம் கையில் சேர்ந்ததும் நடத்துனர் சொன்னார்..........
"மீதியை இறங்குறப்போ வாங்கிக்கோ !!!!!"

#நடத்து(னர்)டா!