Friday, November 18, 2016

பருவ மழை வேண்டுதல்

சஞ்சீவி மலை சுமந்த அனுமனே
எம் ஜீவன் பிழைக்கவும் நீர் அருள்வீர்
மலை போன்ற மேகங்கள் - உம் தந்தை
வாயுவிடம் தந்தனுப்புங்கள்

பள்ளி கொண்ட பெருமானே
கொள்ளி பற்றுமோ எம் பயிர்களை?
கடலினைக் கடைந்தெடுத்து
அமிர்த மழை தாருங்கள்

ஈசனே நீல கண்டரே
பாசம் வைப்பீர் பரமனே
கரியமில நஞ்செல்லாம்
காற்றினிலே நீக்கிவிட்டு
துரிதமாய்த் தாருங்கள்
பருவ மழை மேகங்கள்

ஏழை விவசாயியும் சிலுவையில் மரிப்பதோ?
செந்நீர் சிந்திய பரம பிதாவே உமது
பரிசுத்த ஆவியால் நன்னீர் மேகங்கள் நல்குவீரே

கடனுக்கு வட்டி பாவம் என்ற நபிகளே
பயிர் செய்யக் கடன் வாங்கி
உயிர் மாய்ப்பதா ஒரு விவசாயி?
அல்லாவின் கருணையால்
எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை

ஆசையினால் துன்பமென்றீர் ஐயா
வயிற்றுப் பசி ஆசையா துன்பமா?
புத்தம் புது மேகங்கள் தாருங்கள் புத்தரே

சாய் பாபா விவசாயி பாபா

கீதாஞ்சலி பாரதி பாணியில் - பாடல் 23

சந்தம் : ஆசை முகம் மறந்து போச்சே

மருகி மருளும் அந்த வானம் - புயல்
திரளும் இரவில் உந்தன் பயணம்
உருகும் எனக்கும் இல்லை உறக்கம் - இருள்
திறந்து திறந்து கண்கள் தேடும்
உருவம் எதுவும் இல்லை அங்கே - உந்தன்
வழியும் தெரியவில்லை எங்கே?
கரிய நதிக்கரையின் வழியோ? - அடர்
வனத்தின் விளிம்பின் வழி தானோ?
இனம் புரியா இருட்டு வழியோ - என்னைக்
காண நீ வரும் வழி ஏதோ?

Tagore's English version:

Art thou abroad on this stormy night on thy journey of love, my friend? The sky groans like one in despair.
I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend!
I can see nothing before me. I wonder where lies thy path!
By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest,
through what mazy depth of gloom art thou threading thy course to come to me, my friend?

Friday, November 4, 2016

அம்மாவைப் பார்த்தீங்களா?

நம் முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்த உண்மைகளை அறிய தமிழகமே காத்திருக்கிறது. அவர் நலம்பெற எத்தனையோ வேண்டுதல்கள்.

முதல்வரின் உடல்நிலை பற்றி எண்ணும் போதெல்லாம் "அம்மாவைப் பார்த்தீங்களா?" என்று அன்னக்கிளி பாடலின் மெட்டில் சில வரிகள் என் மனதினுள் ஓடும்.

"அம்மாவைப் பார்த்தீங்களா? அப்போலோ ஆஸ்பிடல்ல
நர்ஸக்கா நீயும் பார்த்தாக்கா சொல்லு - அம்மா
சாப்பிட்டாங்களா தெரியலியே - கண்ணு
முழிச்சாங்களா தெரியலியே

அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
அஞ்சாறு வாரம் ஆனாக்கா என்ன?
அம்மா உடம்பு நல்லானா போதும்
புது ரத்தத்தோடு புது வேகத்தோடு
அம்மாவும் வந்து
தமிழ்நாட்டை ஆள்க
தமிழ்நாட்டை ஆள்க "

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒரு நாள் பணியாற்ற இயவில்லை என்றாலும் அது எவ்வளவு பெரிய இழப்பு? எத்தனை நலத்திட்டங்கள் எத்தனை முடிவுகள் தேங்கி நிற்கும் என்று எண்ணினால் பெரும் வருத்தத்தைத் தருகிறது. முதல்வர் விரைவில் குணமடைய முருகப் பெருமானை வேண்டி வணங்குகிறேன்.

சில நாட்களுக்கு முன் ஒரு கடைமுன்னால் நின்று கொண்டிருந்தபோது ஒரு மூதாட்டி என்னிடம் ஐந்து ரூபாய் கேட்டார். நான் எடுத்துக் கொடுத்தேன். என் மனைவியும் அவர் பையிலிருந்து பணத்தை எடுக்க முற்படும்போது அந்த மூதாட்டி "ஐந்து ரூபாய் போதுமம்மா நான் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் கொள்வேன்" என்றார்.

தர்மம் தலை காக்கட்டும்.

Wednesday, November 2, 2016

ஒத்த ரூபா தாரேன்

மாநகரப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.
ஒரு பயணி 11 ரூபாய் சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்துவிட்டு கூட்டமாய் இருந்ததால் முன்னே நகர்ந்து சென்றார்.

நிறைய நேரம் ஆகியும் அந்தப் பயணி மீதி பணம் ஒரு ரூபாய் தராததால் நடத்துனர் கடுப்பாகி "ஏம்பா எங்க முன்னாடி போயிட்டே.. இன்னும் ஒரு ரூபாய் கொடு..." என்றார். அந்தப் பயணி "இதோ தரேன்" என்று பையில் துழாவிவிட்டு "பத்து ரூபாயா இருக்கு பரவாயில்லையா?" என்றார். "நீ நூறு ரூபாய் நோட்டாயிருந்தாலும் கொடு. மீதி தருகிறேன்" என்றார் மீண்டும் கடுப்பாக.

பயணி ஒருவழியாய் ஒரு பத்து ரூபாய் தாளை வழியில் நிற்பவர்களிடம் கொடுத்தனுப்பினார்.

பணம் கையில் சேர்ந்ததும் நடத்துனர் சொன்னார்..........
"மீதியை இறங்குறப்போ வாங்கிக்கோ !!!!!"

#நடத்து(னர்)டா!

Sunday, October 23, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் பாடல்-21

(சந்தம் : ஆசை முகம் மறந்து போச்சே)

காலம் கரைந்து செல்லலாச்சே எந்தன்
கலத்தினைச் செலுத்திட வேண்டும்
வாச மலர்கள் செய்யும் வசந்தம் அந்த
வசந்தம் கரைந்து செல்லலாச்சே

ஆடிடும் அலை தீண்டும் கரையில் இங்கு
வாடிய மலர் சுமந்து நின்றேன்
மூடிய நிழற்பாதை எங்கும் இலை
காய்ந்து உதிர்ந்து விழலாச்சே

ஏதுமில்லா வெளி கண்டே நீயும்
வெறுமையை உணர்வதும் ஏனோ?
தூரக் கரையின் இசை தீண்டி உந்தன்
மேனி சிலிர்த்து அதிராதோ?

Tagore's English version:

I must launch out my boat. The languid hours pass by on the shore—Alas for me!
The spring has done its flowering and taken leave. And now with the burden of faded futile flowers I wait and linger.
The waves have become clamorous, and upon the bank in the shady lane the yellow leaves flutter and fall.
What emptiness do you gaze upon! Do you not feel a thrill passing through the air with the notes of the far-away song floating from the other shore?

Sunday, September 18, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் பாடல்-20

குளமெங்கும் குமுதங்கள் பூக்கும் அதை
அலைபாயும் எனதுள்ளம் அறியாது போகும்
மலரின்றி பூக்கூடை ஏங்கும் ஒரு
கரமேதும் பறிக்காத மலர்க்கூட்டம் தூங்கும்

கனவோடு துயில்நீங்கும் பொழுதில் புது
மணமொன்று தென்றலில் இதமாகத் தோன்றும்
விவரிக்க முடியாத உணர்வும் - வெப்பம்
தணிக்கின்ற தென்றலின் ஆர்வத்தைக் காட்டும்

அருகிலோ தூரமோ அறியேன் இதுவும்
என்னவோ என்னதோ எதுவுமே அறியேன்
என்றும் உணராத ஏகாந்தம் நெஞ்சில்
ஏதோவோர் ஆழத்தில் எழிலாக மலரும்

Tagore's English version:

On the day when the lotus bloomed, alas, my mind was straying, and I knew it not.
My basket was empty and the flower remained unheeded.
Only now and again a sadness fell upon me, and I started up from my dream and felt a sweet trace of a strange fragrance in the south wind.
That vague sweetness made my heart ache with longing and it seemed to me that is was the eager breath of the summer seeking for its completion.
I knew not then that it was so near, that it was mine,
and that this perfect sweetness had blossomed in the depth of my own heart.

Sunday, September 11, 2016

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 17

காதல் உன் கைத்தலத்தில் கொண்டு சேர்க்கவே மிகத்
தாமதமும் ஆனதென்று காத்திருக்கிறேன்
என்னைச் சிறைப்பிடிக்க யாவரும் வந்தார் எனில்
ஏய்த்துமே விலகி வந்தேன் எந்தன் இறைவா

என்னைப் பழிகள் சொல்லி ஏளனம் செய்வார் அவை
யாவையுமே ஏற்றுக் கொள்வேன் எந்தன் இறைவா
சந்தைக் கடையடைத்து யாவரும் சென்றார் எந்தைக்கு
ஈந்திடக் காதல் வரக் காத்திருக்கிறேன்

(சந்தம் : கண்ணன் மனநிலையைக்)

Tagore's English version:

I am only waiting for love to give myself up at last into his hands. That is why it is so late and why I have been guilty of such omissions.
They come with their laws and their codes to bind me fast; but I evade them ever, for I am only waiting for love to give myself up at last into his hands.
People blame me and call me heedless; I doubt not they are right in their blame.
The market day is over and work is all done for the busy. Those who came to call me in vain have gone back in anger.
I am only waiting for love to give myself up at last into his hands.

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 18

கூடிக் குவியுது மேகம் - இருள்
கவ்விக் கவ்வி மறைத்திடும் நேரம்
வாடி வெளியினில் நின்றேன் - அன்பே
மூடிக் கிடக்கும் நின் வாசலின் ஓரம்

பட்டப் பகலெனும் நேரம் - பலர்
சூழக் கடக்கும் என் பணியினில் காலம்
எட்டி இரவிங்கு வந்தால் - எனைச்
சூழ்ந்து பிடிக்கும் உன் நினைவெனும் மோகம்

அன்பு முகமும் காட்டாது - என்னை
அங்கொரு புறமாய்த் தள்ளியும் வைத்தால்
எங்ஙனம் தான் எதிர்கொள்வேன் - இங்கு
நீண்டு வளர்ந்திடும் குளிர் மழைக்காலம்?

வானில் இருள்வெளி கண்டேன் - எந்தன்
வாழ்வில் புயலொன்று வீசிடக் கண்டேன்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

Tagore's English version:

Clouds heap upon clouds and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone?
In the busy moments of the noontide work I am with the crowd, but on this dark lonely day it is only for thee that I hope.
If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass these long, rainy hours.
I keep gazing on the far-away gloom of the sky, and my heart wanders wailing with the restless wind.

கீதாஞ்சலி - பாரதி பாணியில் - பாடல் 19

பேசவும் மறுத்துவிட்டால்
எந்தன் மனதில் உன் மௌனத்தை நிறைத்திடுவேன்
மௌனமும் நிறைந்ததனால்
எழும் வெறுமையின் வேதனை பொறுத்திடுவேன்
வானத்தில் மீன்களெல்லாம்
தலை குனிந்துமே விடிந்திடக் காத்திடல்போல்
நானும் என் உணர்வழிந்தே
நிச்சலனத்தில் நீள்நிசி விழித்திருப்பேன்
நீள்நிசி விழித்திருப்பேன்

காலையில் விடிந்தவுடன்
காரிருளுடன் இரவும் மறைந்துவிடும்
காலைச் செங்கதிர்களுடன்
உன் கீதமும் வானின்று பெருகி வரும்
கானகப் பறவைகளும்
செய்யும் ஒலியில் உன் கீதங்கள் சிறகு பெறும்
கானக மலர்களெல்லாம்
மெல்ல மலர்ந்திட உன் கானங்கள் உதிர்ந்துவிடும்
(ராகம்: தீர்த்தக்கரை தனிலே)

Tagore's English version:

If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
I will keep still and wait like the night with starry vigil and its head bent low with patience.
The morning will surely come, the darkness will vanish,
and thy voice pour down in golden streams breaking through the sky.
Then thy words will take wing in songs from every one of my birds’ nests,
and thy melodies will break forth in flowers in all my forest groves.

Friday, September 9, 2016

பேருந்து பயணக்குறிப்பு


முந்தாநாள் மாலை அடித்து பிடித்து 5.45 பேருந்தைப் பிடித்துவிட்டேன். எட்டு மணிக்கு குழந்தையை வகுப்பொன்றுக்கு கூட்டிச் செல்லவேண்டும்.

ஏதாவது படித்துக்கொண்டோ பாடல் கேட்டுக்கொண்டோ பயணம் செய்வது என் வழக்கம். பல நேரங்களில் தூங்கிவிடுவதும் உண்டு. ஆனால் அன்று விழித்துக்கொண்டே சும்மா உட்கார்ந்து வர நேர்ந்துவிட்டது. சும்மா இருந்தாலும் நம் குரங்கு மனம் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

இடது பக்கம் முன் வரிசையில் ஒரு பெண் மொபைலில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஹெட் போன் மாட்டியிருக்கவில்லை. சப் டைட்டில்களைப் பார்ப்பதைப் புரிந்துகொண்டேன். இன்னும் கொஞ்சம் கவனித்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு கொரியன் படமென்று. புரியாத வசனங்களுடன் படம் பார்ப்பதை விட சப் டைட்டில்களுடன் ஊமைப் படம் பார்ப்பதே நன்றாக இருக்குமோ என்று ஒரு ஐடியா கிடைத்தது.

OMR-ல் எழுந்து கொண்டிருக்கும் கட்டடங்களை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு வந்தேன். கஷ்டப்பட்டு சம்பாதித்து இப்படி கட்டடங்களுக்காக கடன் வாங்கி அஞ்சி அஞ்சி வாழும் IT சமுதாயத்தின் மேல் கழிவிரக்கம் வந்தது.

அரை மணி நேரத்திலேயே இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் கடந்து செல்வதைக் கவனித்தேன். உடம்புக்கு ஏதாவது வந்தால் இந்த மாதிரி ஆபீஸ் விடும் டிராஃபிக் சமயங்களிலோ அல்லது மருத்துவர்கள் இல்லாத நள்ளிரவுகளிலோ வரக்கூடாதடா சாமி.

பாவம் நாங்கள் எல்லாம் தூங்குவோம் என்ற எண்ணத்தில் வழக்கமாய் பஸ் டிரைவர் பாடல் எதுவும் போடாமல் அமைதியாய் ஓட்டி வருவார். கிண்டி தாண்டிய பிறகே பாடல்களை அலறவிட்டு எங்களை எழுப்புவார். அன்று என்னவோ OMR-லேயே பாட்டு போட ஆரம்பித்துவிட்டார். TMS பாடல்கள். 'நான் மலரோடு' 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' 'பூவைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா' என்று பூ போட்ட பாடல்களை ரசித்து வந்தேன்.

ஆலந்தூர் வந்தவுடன் சோகப்பாடல்களாக ஓட ஆரம்பித்துவிட்டன. 'பச்சைக்கிளி முத்துச் சரம்' என்று பாடிவந்த TMS 'பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி' என்று கிளியை கிழி கிழி என்று பலவித மாடுலேஷன்களில் கிழித்துவிட்டார். 'போனால் போகட்டும் போடா' என்ற பாடுகையில் நல்லவேளை எந்த ஆம்புலன்ஸும் செல்லவில்லை. சென்றால் மனது வலிக்கும்.

ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு பெரிய பிள்ளையார் பந்தல் பார்த்தேன். பிள்ளையாருக்குப் பின்னால் அவரைவிடப் பெரிய விஷ்ணு சிலை இருந்தது. பிள்ளையாரின் இரு பக்கமும் பிரம்மா சிவன் இருவரின் சிலைகளும் சிறியதாய் இருந்தன. நாம் பார்த்த பல பிள்ளையார்களில் இது வித்தியாசமாய் இருந்தது. இன்று அந்தப்பக்கமாய் நீங்கள் செல்வதாய் இருந்தால் பார்க்கவும். நாளை கடலில் கரைந்து விடுவார். (ஹில்டன் ஹோட்டலுக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் உள்ளது இந்தப் பந்தல்.)

வண்டி நத்தை போல் ஊர்ந்து காசி தியேட்டரைக் கடந்து மெதுவாய் உதயம் பக்கம் திரும்பியது. மகளிடமிருந்து போன்.
'எங்கப்பா இருக்கீங்க?'
'அசோக் பில்லர்லமா ..'
'அசோக் பில்லர்ல எங்கப்பா?'
சில நேரங்களில் அசோக் பில்லரிலிருந்து வடபழனி வரவே அரை மணிநேரம் ஆகிவிடும் என்பதை அறிந்த மகளின் தவிப்பு அது.
'உதயம் தாண்டிட்டேன்மா..' என்றேன்.

வடபழனி சிக்னலில் 'வீடு வரை உறவு' பாடல் ஓடியது. நம் குறுக்கு புத்தி கவிஞர் ஏன் முதலில் 'கட்டிலுக்குக் கன்னி' என்று எழுதிவிட்டு 'பட்டினிக்குத் தீனி' என்று வரிசைப்படுத்தினார் என்று ஒரு கேள்வி கேட்டுவைத்தது.

இந்தப் பாடல் முடிவதற்குள் எனது நிறுத்தம் வந்துவிடும் என்று எழுந்தேன். அதற்குள் அடுத்த பாடல் வந்துவிட்டது 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை .. என்னைச் சொல்லி குற்றமில்லை.....'. முன் வரிசைப் பெண் ஹெட் போன் இல்லாமல் இன்னமும் அந்த ஊமைப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். 'காலம் செய்த கோலமம்மா.. கொரியன் செய்த குற்றமம்மா' என்று மனதுக்குள் பாடியபடி நிறுத்தத்தில் இறங்கினேன்.