Friday, May 17, 2013

வெயிட்

சமீபத்தில் மருத்துவரிடம் சென்றபோது... நர்ஸ் எனது file-ஐ எடுத்து எழுதினார்..

நர்ஸ்: சார் உங்க ஏஜ்?

நான்: (மெதுவான குரலில்) "....."

நர்ஸ்: fever இருக்கா?

நான்: இல்லம்மா. வெறும் கோல்ட் மட்டும்தான்

நர்ஸ்: (வேயிங் மிசினைக் காண்பித்து) வெயிட் போடுங்கள் சார்.

நான்: என்னம்மா டாக்டர் ஆபிஸ்ல இருந்துட்டு வெயிட் போட சொல்றீங்களே..? வெயிட் போட வேணாம்னு சொல்லுங்கம்மா..!

நர்ஸ்: ஐயோ...... நீங்க வெயிட் போட வேணாம் இந்த வேயிங் மிசின் மேல ஏறி நில்லுங்க...!

Thursday, May 9, 2013

பிரிவாற்றாமை


கொஞ்சி முத்தமிட
குழந்தைகளும் கூட இல்லை
நெஞ்சு மேல் நடை பயிலும்
பிஞ்சுக் கால்கள் இங்கு இல்லை
கஞ்சித் தண்ணி ஊத்திவிட
உன் கைக்கரண்டி இங்கு இல்லை
சர்க்கரை இருக்குதடி சகியே
கரும்புக்கழி நீயில்லையே
உன் சங்கேத பாஷை போல
இங்கே சங்கீதம் இனிக்கலையே
பஞ்சு மெத்தையிலே படுத்தால்
பக்கத்திலே நீயில்லையே
நஞ்சு போல் போகுதடி நேரம்
என்னைத் துருப்பிடிக்க வைக்குது இந்த தூரம்

Friday, April 26, 2013

இவனுக்கு என்ன வந்தது?

வாகனத்தில் செல்பவனுக்கு
எருமை வாகனன் இருப்பதை
பாதை நடுவில் திறந்த
பாதாள சாக்கடையில்
கிளை நட்டுக் காட்ட
பாதையோரம் நடக்கும்
பாதசாரிக்கு ஏன் தோன்றியது?

Thursday, April 18, 2013

திருமண நாள்

எனது திருமண நாளன்று (மார்ச் 8) எழுதியது:
-----------------------------------------------------------------

எங்கிருந்தோ வந்தாள்
இனி உன் பெண்சாதி நான் என்றாள்
இங்கிவளை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்..

இன்றுடன் ஆண்டுகள் ஆயின பதினைந்து

நன்றி சொல்ல நூறுண்டு
இன்று சொல்வேன் ஒன்று
நன்றி.
என் சிறு குறைகள் திருத்தி
என் பெருங்குறைகள் பொறுப்பதற்கு. 

பொய்யெல்லாம் உனதே

நள்ளிரவில் களுக்கென்று சிரித்து
"ஒன்றுமில்லையம்மா கனவு" என்றாய்
சந்தேகப் படும் தங்கையிடம்
"வெறும் friend டீ" என்றாய்
அக்கா பெண்ணுக்கு முத்தமிட்டு
"என் செல்லம்" என்றாய்
என்னிடம் சொல்கிறாய்
"இதெல்லாம் தப்பு"
நம் காதலில்-
பொய்யெல்லாம் உனதே

கானல் நீரான காதல்

கானல் நீரான காதல் என்
கண்ணில் நீரானதோ..?
தெய்வங்கள் தடுத்த காதலின் பெயர் தான்
தெய்வீகக் காதலோ?
சொல்லடி பெண்ணே சொல் இந்தச்
சொல்லடி ஏனடி சொல் ?
செல்லடி பெண்ணே செல்
என் செல்களை அழித்தே செல்

இன்னும் எழுதாத வரிகள்

இன்னும் எழுதாத வரிகள்-
தெரிந்தன-
சிந்திக்கும்
நெற்றிச் சுருக்கங்களில்

தாத்தா

என்னைக் கொஞ்சுவதாய்
தன் மகனையும் கொஞ்சினார்-
தாத்தா
என்னை
"டேய்..ராஜாக் குட்டி"
என்றழைக்கையில்.

மகளுடன் உரையாடல்

மகள்: அப்பா பட்டாம்பூச்சியை மீனா வண்ணத்துப்பூச்சின்னு சொல்லுறா..

நான்: சொல்லலாமே..வண்ணம்னா கலர் தெரியுமில்ல?

மகள்: தெரியும்

நான்: பட்டாம்பூச்சி கலர் கலரா இருக்கறதனால வண்ணத்துப்பூச்சின்னும் சொல்லலாம்

மகள்: அப்ப வானவில்ல வண்ணவில்லுன்னு சொல்லலாமா?

நான்: சொல்லலாம். ஆனா அது வானத்துல இருக்கறதனால வானவில்லுனு சொல்லுறோம்

மகள்: அப்ப வண்ண வானவில்லுனு சொல்லலாமில்ல..

நான்: சொல்லலாமே... !

ஆணுக்கும் கற்புண்டு

அழகில், காதலில்
அன்பில், தாய்மையில்,
தூய்மையில், கற்பில்
என்றும் பெண்ணுக்கே உலகில் முதன்மை
எனினும் ஆணின்றி ஏதிங்கு முழுமை?
உலகிலுண்டோ..
ஒரு துருவக் காந்தம்?