Thursday, April 18, 2013

இதுவும் யாகமே

அடைமழை நாளில்
அடம்பிடித்த அடுப்பில்
ஆக்சிஜனைக் குழலூதி
புகையில் மூச்சிழுத்து
எமக்கு அன்னம் படைக்க
அக்னி வளர்த்து
அன்னை செய்ததும் யாகமே

உன் கண் முள்

என் வெற்றுப் பாதங்களைத்
குத்தித் தைத்தன
நாணிக் குனிந்த
உன் விழி முட்கள்--

என் மேனியெங்கும்
அக்குபஞ்சர் செய்தன
நாணம் நீங்கிய
உன் கூரிய பார்வைகள் !

குறுங்கவிதை

குனிந்த தலையை
சற்று நிமிர்த்தினேன்.
பரந்து விரிந்தது உலகம்.

அடங்குதல் ஆரிருள் உய்த்து விடும்

நண்பா-
உன்னிலடங்கியவை
எண்ணிலடங்காதவை.

உயிருள்ள உனக்கு
ஏன் அடக்கம்?

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்குதல்
ஆரிருள் உய்த்து விடும்.

Friday, February 1, 2013

களை

அழகுக்கு வளர்த்த புல்வெளியில்

களையென்று பிடுங்கினாள்
.
.
.
நெற்பயிர்



Bench at the Beach


1. Sea:


இரைதேடிச் சிறகசைக்கும்
கடற்பறவைகள் இல்லை.

இறகின்றிச் சிறகடிக்கும்
சிறு மழலைகள் இல்லை.

உடல் ஒட்டிய மணல் உதிர்க்கும்
உயிர்க் காதலர் யாரும் இல்லை

நிழற்படமாய் நின்றுவிட்டது
அலை நிறுத்திய கடல்.


2. Bench:

இரைதேடிச் சிறகசைக்கும்
கடற்பறவைகள் இல்லை.

இறகின்றிச் சிறகடிக்கும்
சிறு மழலைகள் இல்லை.

உடல் ஒட்டிய மணல் உதிர்க்கும்
உயிர்க் காதலர் யாரும் இல்லை

தனிமரமாய் நின்றுவிட்டேன்.
கடலாட முடியாது
முடமான என் கால்கள்.

நின்று-
ஒரு துளியால் எனை நனைக்குமா
ஓடும் மேகம்?

பந்துமுனைப் பேனா

மையிட்ட கண்ணின் சுழற்சியாய்


கவிதை எழுதியது - என்


பந்துமுனைப் பேனா



Saturday, January 19, 2013

விடியலின் பிறகும் வெண்ணிலா

1.
மழலைக்கு சோறூட்ட காலையிலும் என்னை
எங்கேனும் ஓர் அன்னை தேடுகிறாளோ?
தேடிப் பார்த்தது -
விடியலின் பிறகும் வெண்ணிலா

________________________________________________

2.
காலைக் கதிரில் கன்னம் வெளுத்து
வெட்கச் சிவப்பு மறைந்தது.....
இரவின் இனிமை -
இன்றும் வரும் என்றாலும்....
பிரியா விடைபெற
பிரியத்துடன் பூமியை நோக்கியது
வேலைக்குப் புறப்படும்
கணவனை ரசிக்கும் மனைவிபோல்
விடியலின் பிறகும் வெண்ணிலா



Thursday, January 3, 2013

லிமரிக் - மங்கை

பொன் வண்டாடவே மலர்ப் பொய்கை
ஆண் திண்டாடவே மாதர் செய்கை
        வங்கமாக் கடலலை போல் பிடிவாதம்
        தங்கமாய் காகிதத்தை மாற்றும் இரசவாதம்
மங்கை கண்ணசைவில் செய்யும் சைகை

Monday, November 12, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எஞ்சியிருந்த எம் மரத்துக் காகங்கள்
அஞ்சியிருந்து எம்மரத்தில் உறங்கியனவோ...
வாலாட்டும் தெரு நாய்கள்
காலிடுக்கில் வாலொடுக்கி
எங்கோடி ஒளிந்தனவோ...
பட்டாசுகள் வெடித்து
மனிதர் நாம் மகிழ்கையில்..

வெளிப்புகை ஒவ்வாமல்
வீட்டில் அடங்கிய கொசுக்களுடன்
தீபாவளி கொண்டாடி மகிழ்வோமாக.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.