Thursday, April 18, 2013

அடங்குதல் ஆரிருள் உய்த்து விடும்

நண்பா-
உன்னிலடங்கியவை
எண்ணிலடங்காதவை.

உயிருள்ள உனக்கு
ஏன் அடக்கம்?

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்குதல்
ஆரிருள் உய்த்து விடும்.

Friday, February 1, 2013

களை

அழகுக்கு வளர்த்த புல்வெளியில்

களையென்று பிடுங்கினாள்
.
.
.
நெற்பயிர்



Bench at the Beach


1. Sea:


இரைதேடிச் சிறகசைக்கும்
கடற்பறவைகள் இல்லை.

இறகின்றிச் சிறகடிக்கும்
சிறு மழலைகள் இல்லை.

உடல் ஒட்டிய மணல் உதிர்க்கும்
உயிர்க் காதலர் யாரும் இல்லை

நிழற்படமாய் நின்றுவிட்டது
அலை நிறுத்திய கடல்.


2. Bench:

இரைதேடிச் சிறகசைக்கும்
கடற்பறவைகள் இல்லை.

இறகின்றிச் சிறகடிக்கும்
சிறு மழலைகள் இல்லை.

உடல் ஒட்டிய மணல் உதிர்க்கும்
உயிர்க் காதலர் யாரும் இல்லை

தனிமரமாய் நின்றுவிட்டேன்.
கடலாட முடியாது
முடமான என் கால்கள்.

நின்று-
ஒரு துளியால் எனை நனைக்குமா
ஓடும் மேகம்?

பந்துமுனைப் பேனா

மையிட்ட கண்ணின் சுழற்சியாய்


கவிதை எழுதியது - என்


பந்துமுனைப் பேனா



Saturday, January 19, 2013

விடியலின் பிறகும் வெண்ணிலா

1.
மழலைக்கு சோறூட்ட காலையிலும் என்னை
எங்கேனும் ஓர் அன்னை தேடுகிறாளோ?
தேடிப் பார்த்தது -
விடியலின் பிறகும் வெண்ணிலா

________________________________________________

2.
காலைக் கதிரில் கன்னம் வெளுத்து
வெட்கச் சிவப்பு மறைந்தது.....
இரவின் இனிமை -
இன்றும் வரும் என்றாலும்....
பிரியா விடைபெற
பிரியத்துடன் பூமியை நோக்கியது
வேலைக்குப் புறப்படும்
கணவனை ரசிக்கும் மனைவிபோல்
விடியலின் பிறகும் வெண்ணிலா



Thursday, January 3, 2013

லிமரிக் - மங்கை

பொன் வண்டாடவே மலர்ப் பொய்கை
ஆண் திண்டாடவே மாதர் செய்கை
        வங்கமாக் கடலலை போல் பிடிவாதம்
        தங்கமாய் காகிதத்தை மாற்றும் இரசவாதம்
மங்கை கண்ணசைவில் செய்யும் சைகை

Monday, November 12, 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எஞ்சியிருந்த எம் மரத்துக் காகங்கள்
அஞ்சியிருந்து எம்மரத்தில் உறங்கியனவோ...
வாலாட்டும் தெரு நாய்கள்
காலிடுக்கில் வாலொடுக்கி
எங்கோடி ஒளிந்தனவோ...
பட்டாசுகள் வெடித்து
மனிதர் நாம் மகிழ்கையில்..

வெளிப்புகை ஒவ்வாமல்
வீட்டில் அடங்கிய கொசுக்களுடன்
தீபாவளி கொண்டாடி மகிழ்வோமாக.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Tuesday, October 30, 2012

மழைத்துளி

மழைத்துளி...
வீழத்திய மலர் இதழ்
படகாய் மிதந்திட
படகுச் சவாரி செய்யும்
மழைத்துளி...

__________________________________

ஒவ்வொரு அலைவட்டத்தின்
மையப்புள்ளியிலும்
குறி தவறாமல் விழும்
மழைத்துளி...


Saturday, September 15, 2012

இயற்கையின் வெற்றி


நிகழ்ச்சியின் பெயர் திருமண வரவேற்பு.
நிகழ்ந்தது என்னவோ பெண்களின் அழகுப் போட்டி.
கணவர்களின் பொருளீட்டும் திறனைப்
பறைசாற்றும் நவநாகரிக நகைகள் ஒருபுறம்.
பிறந்தவீட்டின் பெருமையைப் போற்றும்
பாரம்பரிய நகைகள் ஒருபுறம்.
பரஸ்பர விசாரிப்புப் பேட்டிகளில்
ஒளிந்திருந்தன போட்டிகள்.
பட்டுப் புடவைகளில் நடந்தது - பார்டர் போர்.
ஜாக்கெட்டுகளிலும் ஜன்னல் போர்.
செயற்கைப் போர்களின் இறுதியில்
வென்றது என்னவோ இயற்கையே-
பெண்களின் கூந்தலில் சீருடையாய் மல்லிகை.

Tuesday, September 4, 2012

எலி உசுரு

எங்கள் ப்ளாக்-ல் கீழ்க்கண்ட பதிவில் வரும் குறும்படத்திற்கு நான் எழுதிய பாடல் வரிகள் இவை. பத்து நிமிடம் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பிறகு பாடலைப் படிக்கவும்
http://engalblog.blogspot.in/2012/06/blog-post_11.html
சந்தம்:
தன்னன்னான தானனன்னா
தானனன்னா தானனன்னா
தன்னன்னான தானனன்னா
தனனனான தானனன்னா

(வெயிலில் கால் மாற்றி நிற்கும் போது)
ஒத்தக்காலு கொக்கைப்போல
வெத்துக் காலில் காத்திருக்கேன்
பத்து ஊரு போறவரே
பசியும் ஆற வாருமையா

(இளைஞர்கள் போட்ட பாட்டிலிலிருந்து தண்ணீர் கீழே கொட்டும்போது)
என்னப்போல தள்ளாடித்தான்
தண்ணியெல்லாம் சிந்திப் போச்சோ
ரெண்டு சொட்டு நான் குடிக்க
தண்ணிக்குந்தான் தாகம் போச்சோ?

(உணவுப் பொட்டலம் எடுத்துகொண்டு வீட்டுக்கு நடந்து போகும்போது)
காத்துலயும் உசுர வச்சான்
சோத்துலயும் உசுர வச்சான்
கால்நடையா போகும் என்னை
மனுசனாக படைச்ச சாமி

(பூனைக்கு சாதம் வைக்கும் போது)
புருஷன் வெச்ச சோத்தினிலே
பூனைக்குந்தான் பங்கு வெச்சா
எங்க உசுரு பொழச்சதுபோல்
எலி உசுரும் பொழச்சதையா