Friday, April 26, 2013

இவனுக்கு என்ன வந்தது?

வாகனத்தில் செல்பவனுக்கு
எருமை வாகனன் இருப்பதை
பாதை நடுவில் திறந்த
பாதாள சாக்கடையில்
கிளை நட்டுக் காட்ட
பாதையோரம் நடக்கும்
பாதசாரிக்கு ஏன் தோன்றியது?

Thursday, April 18, 2013

திருமண நாள்

எனது திருமண நாளன்று (மார்ச் 8) எழுதியது:
-----------------------------------------------------------------

எங்கிருந்தோ வந்தாள்
இனி உன் பெண்சாதி நான் என்றாள்
இங்கிவளை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்..

இன்றுடன் ஆண்டுகள் ஆயின பதினைந்து

நன்றி சொல்ல நூறுண்டு
இன்று சொல்வேன் ஒன்று
நன்றி.
என் சிறு குறைகள் திருத்தி
என் பெருங்குறைகள் பொறுப்பதற்கு. 

பொய்யெல்லாம் உனதே

நள்ளிரவில் களுக்கென்று சிரித்து
"ஒன்றுமில்லையம்மா கனவு" என்றாய்
சந்தேகப் படும் தங்கையிடம்
"வெறும் friend டீ" என்றாய்
அக்கா பெண்ணுக்கு முத்தமிட்டு
"என் செல்லம்" என்றாய்
என்னிடம் சொல்கிறாய்
"இதெல்லாம் தப்பு"
நம் காதலில்-
பொய்யெல்லாம் உனதே

கானல் நீரான காதல்

கானல் நீரான காதல் என்
கண்ணில் நீரானதோ..?
தெய்வங்கள் தடுத்த காதலின் பெயர் தான்
தெய்வீகக் காதலோ?
சொல்லடி பெண்ணே சொல் இந்தச்
சொல்லடி ஏனடி சொல் ?
செல்லடி பெண்ணே செல்
என் செல்களை அழித்தே செல்

இன்னும் எழுதாத வரிகள்

இன்னும் எழுதாத வரிகள்-
தெரிந்தன-
சிந்திக்கும்
நெற்றிச் சுருக்கங்களில்

தாத்தா

என்னைக் கொஞ்சுவதாய்
தன் மகனையும் கொஞ்சினார்-
தாத்தா
என்னை
"டேய்..ராஜாக் குட்டி"
என்றழைக்கையில்.

மகளுடன் உரையாடல்

மகள்: அப்பா பட்டாம்பூச்சியை மீனா வண்ணத்துப்பூச்சின்னு சொல்லுறா..

நான்: சொல்லலாமே..வண்ணம்னா கலர் தெரியுமில்ல?

மகள்: தெரியும்

நான்: பட்டாம்பூச்சி கலர் கலரா இருக்கறதனால வண்ணத்துப்பூச்சின்னும் சொல்லலாம்

மகள்: அப்ப வானவில்ல வண்ணவில்லுன்னு சொல்லலாமா?

நான்: சொல்லலாம். ஆனா அது வானத்துல இருக்கறதனால வானவில்லுனு சொல்லுறோம்

மகள்: அப்ப வண்ண வானவில்லுனு சொல்லலாமில்ல..

நான்: சொல்லலாமே... !

ஆணுக்கும் கற்புண்டு

அழகில், காதலில்
அன்பில், தாய்மையில்,
தூய்மையில், கற்பில்
என்றும் பெண்ணுக்கே உலகில் முதன்மை
எனினும் ஆணின்றி ஏதிங்கு முழுமை?
உலகிலுண்டோ..
ஒரு துருவக் காந்தம்?

இதுவும் யாகமே

அடைமழை நாளில்
அடம்பிடித்த அடுப்பில்
ஆக்சிஜனைக் குழலூதி
புகையில் மூச்சிழுத்து
எமக்கு அன்னம் படைக்க
அக்னி வளர்த்து
அன்னை செய்ததும் யாகமே

உன் கண் முள்

என் வெற்றுப் பாதங்களைத்
குத்தித் தைத்தன
நாணிக் குனிந்த
உன் விழி முட்கள்--

என் மேனியெங்கும்
அக்குபஞ்சர் செய்தன
நாணம் நீங்கிய
உன் கூரிய பார்வைகள் !

குறுங்கவிதை

குனிந்த தலையை
சற்று நிமிர்த்தினேன்.
பரந்து விரிந்தது உலகம்.

அடங்குதல் ஆரிருள் உய்த்து விடும்

நண்பா-
உன்னிலடங்கியவை
எண்ணிலடங்காதவை.

உயிருள்ள உனக்கு
ஏன் அடக்கம்?

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்குதல்
ஆரிருள் உய்த்து விடும்.